பாகிஸ்தானின் வடமேற்கே பெஷவார் நகரில் தாலிபான் நடத்தியத் தாக்குதலில் குறைந்தது 84 பள்ளிக் குழந்தைகள் உட்பட 132 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த ஒரு மாணவர்
பெஷாவர் பகுதியில் இராணுவத்தால் நடத்தப்படும் பள்ளிக்கூடம் ஒன்றைக் கைப்பற்றிய தாலிபான் தீவிரவாதிகள் அங்கிருந்தவர்கள் மீது நடத்தியத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலாவர்கள் சிறார்கள் என கைபர் பக்தூன்க்வாமாகாண முதல்வர் கூறினார்.
இந்தப் பள்ளிக் கூடத்தில் 500 பேர் படித்து வந்தனர். கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த பள்ளி மாணவர்கள் 16 வயதுக்கும் குறைவானவர்கள்.
பயத்தில் வெளியேறும் மாணவிகள்
துணை இராணுவப் படையினர் போல உடையணிந்த ஐந்து அல்லது ஆறு பேர் அந்தப் பள்ளிக்கூடத்தில் நுழைந்து கண்மூடித் தனமாகத் தாக்குதல் நடத்தினர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
துப்பாக்கிதாரிகள் ஒவ்வொறு வகுப்பாக நுழைந்து கண்மூடித்தனமாக மாணவர்களைச் சுட்டுக் கொன்றதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
சிகிச்சை பெற்று வரும் பலரின் நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், பலர் தலையில் சுடப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் மருத்துவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
எதிர் தாக்குதலில் பாகிஸ்தானியப் படைகள்
இந்த முற்றுகை மற்றும் தாக்குதலை முடிவுக்கு கொண்டுவர பாகிஸ்தானிய பாதுகாப்பு படையினர் முயற்சிகளை செய்து வருகின்றனர். மோதல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. தாக்குதல் நடத்திய 6 தீவிரவாதிகளைத் தாம் கொன்றுவிட்டதாக பாகிஸ்தானிய ராணுவம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பாக இரு சிறார்களை மீட்டுவரும் பாதுகாப்பு படை வீரர் ஒருவர்
வடக்கு வாசிரிஸ்தான் மற்றும் கைபர் பிராந்தியத்தில் தீவிரவாதிகளுக்கு எதிராக அரசு எடுத்து வரும் இராணுவ நடவடிக்கைகளுக்கு பதிலடியாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது என்று பாகிஸ்தானியத் தாலிபானின் பேச்சாளர் கூறியுள்ளார். இந்தத் தாக்குதலை பாகிஸ்தானியப் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் கண்டித்துள்ளார்.