05.12.1978 இல் நடைபெற்ற திருநெல்வேலி மக்கள் வங்கி கொள்ளையிLtte cycleல் பிரபாகரனும் நேரடியாகப் பங்கு கொண்டார். ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற வங்கிக் கொள்ளைகளையடுத்து பாதுகாப்பை அரசு பலப்படுத்தியிருந்தது.——-
…………………………………………..
இளைஞர்களைக் கடந்து சென்ற தலைவர்!
கண்ணீர் விட்டுக் கதறிய இளைஞர்கள்
05.12.1978 இல் நடைபெற்ற திருநெல்வேலி மக்கள் வங்கி கொள்ளையிLtte cycleல் பிரபாகரனும் நேரடியாகப் பங்கு கொண்டார்.
ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற வங்கிக் கொள்ளைகளையடுத்து பாதுகாப்பை அரசு பலப்படுத்தியிருந்தது.
திருநெல்வேலியில் மக்கள் வங்கியில் மூன்று பொலிசார் பாதுகாப்புக்காக இருந்தனர்.ஒருவர் இயந்திரத் துப்பாக்கியும் வைத்திருந்தார். அந்த இயந்திரத்துப்பாக்கியை பறித்தெடுத்து பொலிசாரை நோக்கிச் சுட்டனர் புலிகள்.
ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் கழிவறைக்குள் ஓடிச்சென்று கதவை மூடிக்கொண்டார். கதவை உடைத்து அந்தக் கான்ஸ்டபிளைச் சுட்டுக் கொன்றார்கள்.
கிங்ஸ்லி பெரேரா, சத்தியநாதன் என்ற இரு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். செல்வம் என்ற பொலிஸ் கான்ஸ்டபிள் படுகாயமடைந்தார்.
12 லட்சம் ரூபா பணத்துடன் அங்கிருந்த கார் ஒன்றை பறித்தெடுத்துக் கொண்டு புலிகள் தப்பிச் சென்றார்கள்.
யாழ்ப்பாணத்தில் முதன் முதலில் நடைபெற்ற மிகப் பெரிய வங்கிக்கொள்ளை அது தான்.
78 ஆம் ஆண்டு 12 லட்சம் ரூபா என்பது மிகப் பெரிய தொகை தான்.
வெளவால் கதை
இக்காலகட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமையின் கீழ் இயங்கிய தமிழ் இளைஞர் பேரவைக்குள் பிளவுகள் ஏற்படத் தொடங்கின.
தமிழர் விடுதலைக் கூட்டணி தலைமையின் தீவிரம் போதாது என்று இளைஞர் பேரவையில் ஒரு சாரார் வெளிப்படையாகவே பேசத் தொடங்கினார்கள்.
1978ஆம் ஆண்டு கியூபாவில் நடைபெற்ற இளைஞர் மாணவர் மாநாட்டுக்கு கூட்டணி சார்பில் அனுப்பப்பட்டவர்களில் மூவர் புலிகளைச் சேர்ந்தவர்கள். காசிஆனந்தன், மாவைசேனாதிராஜா ஆகியோர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் இளைஞர் பேரவையைச் சேர்ந்தவர்கள்.
கியூபாவுக்கு தன்னை அனுப்பி வைக்கவில்லை என்று வண்ணை ஆனந்தனுக்கு கோபம்.
1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் பிரச்சாரப் பீரங்கியாக இருந்தவர் வண்ணை ஆனந்தன்.
உண்மையாகவே சிறந்த பேச்சாளர். வண்ணை ஆனந்தன் பேசும் கூட்டங்கள் என்றால் மக்கள் திரளுவார்கள்.
கூட்டத்தின் முன்னால் அமர்ந்திருக்கும் சிறுவர்களைப் பார்த்து வண்ணை ஆனந்தன் கேள்வி ஒன்று கேட்பார்.
“மரம் பழுத்தால்
என்ன வரும்?”
உடனே சிறுவர்கள் பதில் சொல்வார்கள்,
“வெளவால் வரும்’’
சிறுவர்கள் பதில் சொன்னவுடன் வண்ணை ஆனந்தன் சொல்வார்
“வரும் வெளவால் காலில் பீரங்கியுடன் தான் வரும்”
கூட்டத்தில் கரகோசம் வானைப் பிளக்கும்.
தமிழீழக் கோரிக்கைக்கு மக்கள் ஆதரவு உண்டென்று தெரிந்தால் வெளிநாட்டு உதவி கிடைக்கும்.ஆயுத உதவியாகவும் அது கிடைக்கும் என்பது தான் “வெளவால்” கதையின் அர்த்தம்
குமார் மீது தாக்குதல்
ஒரு சுவாரசியமான தகவலை இந்த நேரத்தில் சொல்லவேண்டும்.
1977 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியிடம் ஒரு ஆசனம் கேட்டவர் குமார் பொன்னம்பலம்.
கூட்டணி ஆசனம் கொடுக்கவில்லை.குமாருக்கு ஆவேசம் வந்துவிட்டது.
யாழ்.தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டார்.
யாழ்ப்பாணத்தில் கூட்டணி சார்பாகப் போட்டியிட்டவர் யோகேஸ்வரன்.
தமிழீழக்கோரிக்கையைக் கிண்டல் செய்தும் கூட்டணித் தலைவர்களைக் கேலி செய்தும் பிரச்சாரங்களை நடத்தினார் குமார் பொன்னம்பலம்.
குமாரை மேடைகளில் கிழிக்கத் தொடங்கினார் வண்ணை ஆனந்தன்.
குமாரின் சின்னம் மரம். அது வண்ணை ஆனந்தனுக்கு வசதியாகிவிட்டது.
“குமார் நீ மரமாக வந்து குறுக்கே நிற்கிறாய்.எட்டப்பா வேலை செய்கிறாய்.”என்று ஒருமையில் அழைத்து வசைபாடுவார்.
குமார் பொன்னம்பலத்தின் மாமனார் முருகேசபிள்ளை யாழ்.அரசாங்க அதிபராக இருந்தவர்.
பிரதமராக இருந்த சிறிமாவோ பண்டாரநாயக்கா யாழ்ப்பாணம் வந்தபோது தமிழர் விடுதலைக் கூட்டணி ஹர்த்தால் நடத்தியது.
அந்த நேரத்தில் நல்லூர் கோவிலுக்குச் சென்றார் பிரதமர் சிறிமாவோ.
அவரது காலுக்குத் தண்ணீர் ஊற்றி வரவேற்றவர் முருகேசம்பிள்ளை.
அந்தச் சம்பவத்தையும் மேடைகளில் குறிப்பிடுவார் வண்ணை ஆனந்தன்.
“தந்தை செல்வாவின் மகன் சந்திரகாசன் ஆசனம் கேட்கவில்லை.எங்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கின்றார்.
ஆனால் குமார் எங்களிடம் ஆசனம் கேட்டு விட்டு அதனைக் கொடுக்கவில்லை என்பதற்காக எதிர்த்துப் போட்டியிடுகின்றார்.
“என்ன காரணம்?
தந்தை செல்வாவின் மகன் சந்திரகாசன் இரும்புமனிதன் நாகநாதனின் மருமகன்.
குமார் பொன்னம்பலம் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் காலுக்குத் தண்ணீர் ஊற்றிய முருகேசம்பிள்ளையின் மருமகன். அது தான் துரோகமான வேலை செய்ய ஏவப்பட்டிருக்கின்றார்.”என்று சொல்வார் வண்ணை ஆனந்தன்.
இவ்வாறு பிரச்சார பீரங்கியாக இருந்த வண்ணை ஆனந்தனை கியூபாவுக்கு அனுப்பவில்லை கூட்டணி.
எங்கே தேசிய மன்றம்
1977ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியினர் மக்களிடம் சொன்னார்கள்.
“தேர்தலில் வெற்றி பெற்றவுடன் தமிழீழ தேசிய மன்றத்தை உருவாக்குவோம்.தமிழீழ அரசியல் சட்டத்தை வகுப்போம்”
சொன்னார்களே தவிர வெற்றி பெற்றவுடன் அதனை மறந்துவிட்டார்கள்.
தமிழ் இளைஞர் பேரவையில் இருந்த தீவிர போக்குடைய இளைஞர்கள் “தமிழீழ தேசிய மன்றத்தை கூட்டு” என்று குரல் கொடுக்கத் தொடங்கினார்கள்.
அவர்களோடு சேர்ந்து வண்ணை ஆனந்தனும் குரல் கொடுத்தார்.
கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒழுக்கக் கோவை தயாரிக்கவேண்டுமென்று யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் பேசினார் வண்ணை ஆனந்தன்.
திறப்பு விழா
யாழ்ப்பாணத்தில் காப்புறுதிக் கூட்டுத்தாபன திறப்புவிழா ஒன்று நடைபெற்றது.
திறப்பு விழாவில் யாழ்.தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன், மானிப்பாய் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் ஆகியோர் கலந்து கொள்ளவிருந்தனர்.
விசயமறிந்த இளைஞர்கள் நூறு பேர் வரை யாழ்.பா.உ.யோகஸ்வரன் வீட்டின் முன்பாக குழுமி விட்டனர்.
“சிங்கள அரசின் கூட்டுத்தாபனத்தை திறந்து வைக்கும் விழாவுக்கு செல்லவேண்டாம்’’ என்றார்கள் இளைஞர்கள்.
யோகேஸ்வரன் இளைஞர்களிடம் சொன்னார்:
“இது அமுதரின் கட்டளை. நான் மீறவேமுடியாது. போயே ஆகவேண்டும்” அப்போது அங்கே வந்தார் வண்ணை ஆனந்தன்.அவரைக் கொண்டு சென்று யோகேஸ்வரன் முன்பாக நிறுத்திவிட்டு
“எடுத்துச் சொல்லுங்கள் வண்ணை அண்ணா” என்றனர் இளைஞர்கள்.
வண்ணை ஆனந்தன் கண்ணீர் விட்டார்.
“இவர்களை மீறிப்போகவேண்டாம்” என்று சொன்னார்.
யோகேஸ்வரன் தனது முடிவில் உறுதியாக இருந்தார். இளைஞர்கள் யோகேஸ்வரன் வீட்டின் வாயில் முன்பாக அமர்ந்துவிட்டனர்.
“எங்களைத் தாண்டி போக நினைத்தால் போகலாம்.” என்றனர்.
உதயசூரியன் சின்னம் பொறித்த சால்வையோடு இளைஞர்களைக் கடந்து கூட்டுத்தாபன விழாவுக்கு போனார் யோகேஸ்வரன்.
அவர் கடந்து சென்றபோது இளைஞர்கள் சிலர் கண்ணீர்விட்டபடி சொன்னார்கள்.
“போகிறீர்களே அண்ண”!
காப்புறுதிக்கூட்டுத்தாபனம் முன்பாக வந்திறங்கினார் மானிப்பாய் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம்.
கூட்டணியின் தீவிர தொண்டனாக இருந்த அப்பையா என்ற இளைஞன் ஓடிச் சென்று அவரது கையில் பிடித்தான்.
“போகவேண்டாம் அண்ணா”!
கையை உதறி விடுவித்துக் கொண்டு விழாவுக்குச் சென்றார் தர்மலிங்கம்.
யாழ்.நகர மேயர் துரையப்பா போன்றவர்கள் திறப்புவிழா நடத்தியபோது துரோகிகள் என்ற தலைவர்கள்.
தாமே நேரடியாக அரச திறப்புவிழாக்களில் கலந்து கொள்ள ஆரம்பித்தார்கள்.
இளைஞர்களின் நம்பிக்கையீனம் மெல்ல மெல்ல வளர்ந்தது.
ஆவரங்கால் மாநாடு
1978ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் கோப்பாய் தொகுதியில் உள்ள ஆவரங்காலில் கூட்டணி மாநாடு நடத்தியது. இளைஞர் மாநாட்டுக்கு கோப்பாயைச் சேர்ந்த பரமேஸ்வரன் தலைமை தாங்கினார்.
இவர் கைதடி வங்கிக் கொள்ளையில் சம்பந்தப்பட்டவர். இளைஞர் பேரவை ஆயுதம் ஏந்தவேண்டும் என்ற கொள்கையுடையவர்.
“தலைவர்கள் தீவிரமாகச் செயற்படவேண்டும். வேகம் போதாது. கல்லும் முள்ளும் காடுமே வாழ்க்கையாகிவிட்ட எங்கள் இளைஞர்களைப் பாருங்கள். போராடத் திட்டம் வகுத்துத் தாருங்கள்.” என்று பேசினார் பரமேஸ்வரன்.
இறுதியாக மாநாட்டு நிறைவாக பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அச்சுவேலிச் சந்தியிலிருந்து ஆவரங்கால் நோக்கி ஒரு ஊர்வலம் வந்தது.
“தமிழீழ தேசிய மன்றத்தை கூட்டுக” என்று அந்த ஊர்வலத்தில் வந்த இளைஞர்கள் கோஷமெழுப்பிக் கொண்டு வந்தார்கள்.
மாநாட்டுக்குள் ஊர்வலம் வந்தவுடன் கூடியிருந்த மக்கள் ஏதோ பிரச்னை என்று பயந்து எழுந்து ஓடத் தொடங்கிவிட்டனர்.
மேடையில் “வாழ்க ஈழத்தமிழகம்” என்ற பாடலை பாடிக்கொண்டிருந்தார்கள்.
தேசிய கீதம்
அது தான் தமிழீழ தேசிய கீதம் என்று கூட்டணியினரால் கூறப்பட்ட பாடலாகும். கூட்டங்கள் ஆரம்பிக்கும்போது தேசிய கீதம் இசைக்கப்படுவது கூட்டணியின் அன்றைய நடைமுறை.
“வாழ்க ஈழத்தமிழகம்
வாழ்க இனிது வாழ்கவே…”
தமிழீழ தேசிய கீதம் என்று சொல்லப்பட்ட இந்தப் பாடலை இயற்றியவர் புலவர் பரமஹம்சதாசன். இவர் ஒரு இந்தியக் குடிமகன்.அந்தப் பாடலையும் காசிஆனந்தனே எழுதியதாக தவறாக நினைக்கப்பட்டதுமுண்டு.
மாநாட்டு மேடையில் பாடல் தடைப்பட்டது.மேடையில் அமிர்தலிங்கம் – சிவசிதம்பரம் போன்ற தலைவர்களும் நின்று கொண்டிருந்தனர்.
சிவசிதம்பரம் சற்று அதிர்ந்து போனார். அமுதர் முகம் சிவந்தது. ஊர்வலத்தில் வந்தவர்களை ஒரு முற்று உற்றுக் கவனித்துவிட்டு அமுதர் சொன்னார்,
“இது ஈழவிடுதலை இயக்கக்காரர்களின் வேலை, தொடர்ந்து பாடுங்கள்”
சிவசிதம்பரம் பாடல் முடிந்ததும் கூடியிருந்த மக்களைப் பார்த்துச் சொன்னார்.
“தமிழீழ தேசிய கீதத்திற்கு மதிப்புக் கொடுக்காதவர்கள் தமிழீழத்திற்காகப் போராடப் போகிறார்களா?”
ஊர்வலத்திற்கு தலைமை தாங்கிய முத்துக்குமாரசுவாமி உடனே ஒரு சிறு குறிப்பு எழுதி சிவாவிடம் அனுப்பினார்.
“தேசிய கீதம் பாடுவதை குழப்ப நாம் நினைக்கவில்லை.ஊர்வலம் வந்தபோது பாடலும் இசைக்கப்பட்டுக்கொண்டிருந்தது. தற்செயல் சம்பவம்”
சிவா குறிப்பை படித்துவிட்டு அலட்சியமாக இருந்துவிட்டார்.
கூட்டத்திற்குள் ஊர்வலத்தினர் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தார்கள்.
அமுதருக்கு கோபம் வந்துவிட்டது. “தொண்டர்களே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? பிரசுரம் விநியோகிப்பதை தடுத்துநிறுத்துங்கள்.” என்று ஒலிபெருக்கியில் கட்டளையிட்டார்.
(தொடரும்)
அரசியல் தொடர் – 12
அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை
அற்புதன்