சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தியபோது 4 மணிநேரம் தாக்குதல் நடத்தியதாகச் செய்திகளை வெளியிட்டது இந்திய பாதுகாப்புத் துறை.
ஆனால் இன்று நடந்த பதிலடி தாக்குதலுக்கு இந்திய விமானப் படை வெறும் 21 நிமிடங்களே எடுத்துக் கொண்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி, அதிகாலை 12:30 மணி. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் சுமார் 2 கி.மீ. தூரம் ஊடுருவி ‘சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்’ எனப்படும் போர் நடத்தி 38 பயங்கரவாதிகளைக் கொன்றது இந்திய ராணுவம்.
செப்டம்பர் 18, 2016 அன்று இந்தியாவிற்குள் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கான பதிலடியே இந்த சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்.
அதேபோல மற்றுமொரு சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கை இன்று அதிகாலை 3:30 மணியளவில் நடத்தியுள்ளது இந்திய விமானப் படை. இரு வாரங்களுக்கு முன்பு ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்திய ராணுவம் – போர் விமானம்
இந்திய ராணுவம் 2016-ம் ஆண்டு சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தியபோது, நான்கு மணிநேரம் தாக்குதல் நடத்தியதாகச் செய்திகள் வெளியாகின.
ஆனால் தற்போது நடத்தப்பட்டுள்ள பதிலடித் தாக்குதலுக்கு இந்திய விமானப்படை வெறும் 21 நிமிடங்களையே எடுத்துக் கொண்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
12 மிரஜ் ரக போர் விமானங்களில் சுமார் 1,000 கிலோ வெடிகுண்டுகள் கொண்டு இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி தெரிவித்துள்ளது.
மேலும் மூன்று இடங்களில் இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாகவும் அந்தச் செய்தி தெரிவிக்கிறது. பாகிஸ்தானின் பாலகோட் (Balakot) பகுதியில் அதிகாலை 3:45 மணியிலிருந்து 3:53 மணிக்குள்ளாகவும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தலைநகரான முசாஃபராபாத்தில் (Muzaffarabad) அதிகாலை 3:48 மணியிலிருந்து 3:55 மணிக்குள்ளாகவும், சக்கோட்டி (Chakothi) பகுதியில் 3:58 மணி முதல் 4:04 மணிவரையிலும் இந்திய விமானப்படையின் தாக்குதல்கள் அரங்கேறியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தப் பதிலடி தாக்குதலுக்குப் பொதுமக்கள் தரப்பிலும், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள், பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் மத்திய அரசுக்குப் பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன.
ட்விட்டர் ட்ரெண்டிங்கில் சர்ஜிக்கல் ஸ்டிரைக்-2, இந்தியன் ஏர் ஃபோர்ஸ், இந்தியா ஸ்டிரைக்ஸ் பேக், ஜெய்ஹிந்த், ஏர் ஸ்டிரைக் என டாப் ட்ரெண்டிங்கை ஆக்கிரமித்துள்ள அனைத்து ஹேஷ்டேக்குகளும் விமானப்படையின் தாக்குதல் சம்பந்தமானவைதான்.
அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய மூன்று நாடுகளுக்குப் பிறகு அதிகளவு படை பலமும் ஆயுத பலமும் கொண்ட உலகின் நான்காவது வலிமையான ராணுவத்தைக் கொண்ட நாடாகத் திகழ்கிறது இந்தியா.
இந்திய ராணுவத்தின் படை பலத்தைக் கீழுள்ள இன்ஃபோகிராபிக்ஸில் காணலாம்…
இந்திய ராணுவம்