இந்திய அமைதிப்படை இலங்கைக்குச் சென்று திரும்பிப் பல ஆண்டுகளின் பின்னர், கொழும்பில் இந்தியத் தூதராக அந்த நாட்களில் இருந்த டிக்சித் தனது பேட்டி ஒன்றில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:
“இலங்கை ஜனாதிபதியை நானும் இந்தியப் பிரதமர் ராஜிவ்காந்தியும் சந்தித்தபோது, இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் காரணமாக சிங்கள பகுதிகளில் ஏற்பட்ட கிளர்ச்சி பற்றியும் பேச்சு வந்தது. சிங்கள பகுதிகளில் ஏற்பட்ட கிளர்ச்சியை அடக்குவதற்காக இலங்கை ராணுவத்தை தமிழ் பகுதியில் இருந்து சிங்கள பகுதியை நோக்கி நகர்த்தும் யோசனையில் இருந்தார். ஜெயவர்தனே”
“அதாவது சிங்கள ராணுவத்தையே சிங்கள மக்களிடம் ஏற்பட்ட கிளர்ச்சியை அடக்க அனுப்ப முடிவு செய்தார். அப்படித்தானே”
“ஆம். அதுவேதான். அப்படி நகர்த்தும்போது வடக்கிலும், கிழக்கிலும் ஈழ விடுதலை இயக்கங்களுக்கு எதிராக நிறுத்தி வைத்துள்ள படைகளின் இடங்களில் ஒரு வெற்றிடம் ஏற்படுமே. அதற்கு என்ன செய்யப் போகின்றீர்கள் என்று ராஜிவ் காந்தி கேட்டார்.”
“அதற்கு ஜெயவர்த்தனேவின் பதில் என்ன? தமிழ் பகுதியில் இருந்து ராணுவத்தை வாபஸ் பெற்று கொள்ளப் போவதாகச் சொன்னாரா?”
“இல்லை. ஈழ விடுதலை இயக்கங்கள் தமது (இலங்கை) ராணுவம் மீது தாக்குதல் நடத்தாமல் பார்த்துக் கொள்வதற்காக இந்திய ராணுவத்தை அனுப்ப முடியுமா என்று கேட்டார் ஜெயவர்தனே.
இந்தக் கோரிக்கை இந்தியாவிடம் அதிகாரபூர்வமாக வைக்கப்பட்டால் இந்தியா தனது படைப்பிரிவு ஒன்றை நிச்சயம் இலங்கைக்கு அனுப்பும் என்று பதில் கூறினார் ராஜிவ்காந்தி”
“அப்படியான கோரிக்கை இலங்கை அரசால் அதிகாரபூர்வமாக இந்திய அரசிடம் வைக்கப்பட்டதா”
“ஆம். கோரிக்கை வைக்கப்பட்டால் நிச்சயம் செய்வோம் என்று ராஜிவ் காந்தி சொன்ன உடனேயே இலங்கை ஜனாதிபதி இப்படியான கோரிக்கைக் கடிதம் ஒன்றைத் தயாரிக்கும்படி தனது உதவியாளரிடம் கூறினார். தயாரிக்கப்பட்ட கடிதத்தில் அந்த இடத்திலேயே கையெழுத்திட்டு ராஜிவ் காந்தியிடம் கொடுத்தார் ஜெயவர்தனே. அதன்பிறகு தான் இந்திய அமைதிப்படை இலங்கைக்கு அனுப்பப்படுவது என்று இறுதி முடிவு எடுக்கப்பட்டது.”
“அப்படியானால் அதற்கு முன்னர் இந்திய ராணுவம் இலங்கைக்கு அனுப்பப்படுவது பற்றி முடிவு எடுக்கப்படவில்லையா”
“இல்லை. இந்திய ராணுவத்தை இலங்கைக்கு அனுப்புவதாக இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் இல்லையே. அப்படியிருக்கும்போது இந்திய ராணுவத்தை இலங்கைக்கு அனுப்புவது என்ற பேச்சுக்கே இடமில்லையே. அனுப்பும்படி இலங்கை ஜனாதிபதி அதிகாரபூர்வமாக கோரிக்கை விடுத்தார். நாங்கள் அனுப்பினோம். அவ்வளவுதான்”
மேற்படி பேட்டியைப் படித்தால் இலங்கை ஜனாதிபதியின் வேண்டுகோளின் பின்னர்தான் துரித கதியில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு, இந்திய ராணுவம் இலங்கைக்கு அனுப்பப்பட்டது என்பது போன்ற ஒரு தோற்றம் வருகிறதல்லவா?
ஆனால் இவர் கூறியது நிஜம் அல்ல. தாம் கூறுவது பொய் என்பது, அவருக்கு (டிக்சித்) இந்த பேட்டி கொடுத்த போதே தெரியும்!
ராஜிவ் காந்தி கொழும்பு செல்வதற்காக டில்லியில் விமானம் ஏறுவதற்கு முன்னரே, முன்னேற்பாடுகள் தொடங்கி விட்டன. இதற்கு நிறையவே ஆதாரங்கள் இருக்கின்றன.
மத்திய அரசை பொறுத்தவரை இதெல்லாம் நடப்பதற்கு சில வருடங்களுக்கு முன்னரே இந்திரா காந்தியின் காலத்தில் இலங்கை மீது படையெடுப்பதற்கான ரகசிய திட்டம் ஒன்று இந்திய ராணுவத் தளபதிகளால் போடப்பட்டு ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.
சில காரணங்களினால் அந்தத் திட்டம் நிறைவேற்றப்படவில்லை.
இந்திய ராணுவம் இலங்கையில் போய் செய்யவேண்டிய காரியத்தை செய்வதற்காகவே, ஈழ விடுதலை இயக்கங்களுக்கு ஆயுதங்களும் பயிற்சிகளும் கொடுத்தார்கள். இலங்கை ராணுவத்தை தாக்க அனுப்பி வைத்தார்கள்.
உண்மையில், இந்திய ராணுவம் செய்திருக்க வேண்டிய ப்ராஜெக்ட் அது. கடைசி நேரத்தில் ஏற்பட்ட தடைகளால், ஈழ விடுதலை இயக்கங்களை நம்பி, அவர்களை வளர்த்து விட்டார்கள். அது, இந்திரா காந்தி காலத்து கதை.
பின்னர் ராஜிவ் காந்தியின் காலத்தில், இந்திய இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தாகும் முன்னரே இந்தியப் படைகளை இலங்கைக்கு அனுப்பும் முடிவும் எடுக்கப்பட்டு விட்டது. அதற்கான முன்னேற்பாடுகளும் தொடங்கியிருந்தன.
டில்லி தலைமை, தங்களது ராஜதந்திர திறமையால் ஜனாதிபதி ஜெயவர்தனவையே இந்திய ராணுவத்தை இலங்கைக்கு அனுப்பும்படி கேட்க வைத்தார்கள்.
ஒருவேளை ஜெயவர்தனே அப்படிக் கேட்காமல் விட்டிருந்தால் வேறு ஒரு மார்க்கத்தில் சந்தர்ப்பம் ஒன்றை உருவாக்கியிருப்பார்கள் – இந்திய ராணுவத்தை இலங்கைக்கு அனுப்புவதற்கு.
இந்திய இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன்னரே இந்தியாவில் செய்யப்பட்ட சில முன்னேற்பாடுகளைப் பாருங்கள் – நாங்கள் சொல்வதில் உள்ள உண்மை புரியும்.
இந்திய படை நகர்வு இலங்கையை நோக்கி இருக்க வேண்டும் என்றால், இந்திய விமானப்படையும் கடற்படையும் தான் ராணுவ வீரர்களையும், ராணுவ உபகரணங்களையும் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
அந்த முன்னேற்பாடுகள் இந்திய – இலங்கை ஒப்பந்தத்துக்கு முன்பே தொடங்கிவிட்டன. இந்திய ராணுவத்தை இலங்கைக்கு அனுப்புங்கள் என ஜெயவர்த்தனே வேண்டுகோள் விடுப்பதற்கு முன்பே தொடங்கிவிட்டன.
அதுவரை காலமும் இந்திய படை நகர்வுகளின்போது ராணுவத்தினரின் போக்குவரத்து ஏற்பாடுகள் அனைத்துமே இந்திய விமானப்படையின் CAC (Central Air Command) எனப்படும் மத்திய வான்படை கட்டளை தளத்தில் இருந்தே நடைபெற்றன. இந்திய விமானப்படையின் தெற்கு பிராந்திய கட்டளை தளம் (Southern Air Command) மிகச் சிறிய அளவிலேயே இருந்தது.
தெற்கு பிராந்தியக்காரர்களின் முக்கிய மையம் திருவனந்தபுரத்திலும், பயிற்சி மையம் பங்களுருவிலும் இருந்தன. இந்த இரு இடங்களிலும் முக்கியமான படைப்பிரிவுகள் எதுவும் இருக்கவில்லை. போர் விமான ஆபரேஷன் எதுவும் இல்லாமல் வெறும் ஹெலிகாப்டர் ஆபரேஷன் மட்டுமே தென் பிராந்தியத்தில் இருந்தது.
தென் பிராந்திய விமானத்தளம் என்று பார்த்தால் எப்போதாவது யுத்த விமான நடமாட்டங்கள் கோயம்புத்தூருக்கு அருகிலுள்ள சூலூர் விமானப்படை தளத்திலேயே இருந்தன. அங்கே மிகச்சிறிய படைப்பிரிவான 43-வது விங் மாத்திரம் இயங்கியது. அவ்வளவுதான்.
யாழ்ப்பாணம் மீது இந்திய விமானப்படை விமானங்கள் உணவுப் பொருட்களைப் போட்ட பின்னர் – இந்திய இலங்கை ஒப்பந்தம் செய்யப்படும் முன்னர் – இந்திய விமானப்படையின் தென் பிராந்திய ஆபரேஷன் திடீரென பெரிது படுத்தப்பட்டது.
ஹின்டன் விமானப்படைத் தளத்தில் இருந்த MI-8 பிரிவும், 109-வது படைப்பிரிவும் சூலூர் விமானப்படைத் தளத்துக்கு மாற்றப்பட்டன. இந்த இரு படைப்பிரிவுகளுடன் உத்தரவிடும் தளபதியாக இந்திய விமானப்படையின் முக்கிய தளபதிகளில் ஒருவரான வி.கே.என். சப்ரே அனுப்பப்பட்டார்.
அதேபோல தென் பிராந்திய விமானப்படைத் தளங்களில் மற்றொன்றான யெலஹங்காவுக்கு (பங்களுருவுக்கு அருகேயுள்ள தளம்) 112-வது படைப்பிரிவு அனுப்பப்பட்டது. விங் கமான்டர் எஸ்.கே. சர்மாவின் தலைமையில் இந்த நகர்வு செய்யப்பட்டது.
மூன்றாவதாக 119-வது படைப்பிரிவும் விங் கமான்டர் டி.என். சாஹே தலைமையில் தென்னிந்தியாவுக்கு அனுப்பப்பட்டது. இந்தப் படைப்பிரிவு சென்னைக்கு அருகிலுள்ள தாம்பரத்தில் இருந்து இயங்கத் தொடங்கியது.
இவை அனைத்துமே ஒரு பெரிய படைநகர்வு தென்னிந்தியாவில் இருந்து ஏற்படுவதற்காக செய்யப்பட்ட ஏற்பாடுகள் என்பதை ராணுவ நகர்வுகள் பற்றித் தெரிந்த யாருமே ஒப்புக் கொள்வார்கள்.
தென்னிந்தியாவிலிருந்து ராணுவ நகர்வு என்றால், அந்தத் திசையில் இந்தியாவுக்கு அருகேயிருப்பவை இரண்டே இரண்டு நாடுகள்தான்.
ஒன்று இலங்கை, மற்றது மாலதீவு.
மாலதீவு நோக்கி இந்திய ராணுவம் அனுப்பப்பட வேண்டுமென்றால் இந்தளவுக்கு பெரிய ஏற்பாடுகள் தேவையில்லை. குட்டி நாடு அது. இதனால், ராணுவ நகர்வு முன்னேற்பாடுகள் இலங்கையை நோக்கியே இருந்தன என்று சுலபமாக ஊகித்து விடலாம்.
மீண்டும் கவனியுங்கள் – இவை எல்லாமே ஒப்பந்தம் ஏற்படுவதற்கு முன்பே செய்யப்பட்டு விட்டன.
இதற்கு அடுத்தபடியாக தொடங்கியது ‘தஞ்சாவூர் நடவடிக்கை’ என்று புகழ்பெற்ற ராணுவ நகர்வு.
இலங்கைக்கு இந்திய ராணுவம் அனுப்பி வைக்கப்பட்ட விவகாரத்துக்கு கிரீன் சிக்னல் கொடுக்கப்பட்டது, தமிழகத்தின் தஞ்சாவூரை நோக்கித்தான்! அதுதான், ‘தஞ்சாவூர் நடவடிக்கை’!
தஞ்சாவூர் நடவடிக்கை என்று இந்திய விமானப் படையினரால் கூறப்பட்ட நடவடிக்கை, மிகக் குறுகிய காலப்பகுதியில் விமானப்படைத்தளம் ஒன்றை உருவாக்கிய ஆபரேஷன். இலங்கைக்கான படைநகர்வு திட்டமிடப்பட்ட போது அதற்காக தென்னிந்தியாவின் பகுதிகளிலேயே தளங்கள் அமைக்கப்படுவது அவசியமாகியது.
அப்படியான திடீர் தளம் ஒன்றுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம், நம்ம தஞ்சை.. தஞ்சாவூர்.
தஞ்சாவூரில் ஏற்கனவே பாழடைந்த விமானப் படைத்தளம் ஒன்று இருந்தது. இரண்டாம் உலகமகா யுத்தத்தின்போது பிரிட்டிஷ்காரர்களால் உபயோகிக்கப்பட்ட தளம் அது. பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவில் இருந்து அகன்ற பின்னர் உபயோகிக்கப்படாமலேயே கிடந்து பாழடைந்து கிடந்தது அது.
இந்தியா தனது ராணுவத்தின் கண்களை வடக்கு எல்லையில் பாகிஸ்தானையும், சீனாவையும் நோக்கி வைத்திருந்த காரணத்தால் தென்னிந்தியா மீது பெரிதாக அக்கறை காட்டியிருக்கவில்லை.
தென்னிந்தியாவுக்கு அருகிலுள்ள இலங்கை தங்களுக்கு ராணுவ ரீதியான அச்சுறுத்தலாக இல்லாதிருந்த காரணத்தால் இந்திய விமானப்படை தஞ்சாவூரில் கவனம் செலுத்தி, அதை உபயோகித்திருக்கவில்லை.
இப்போது திடீரென இலங்கையை நோக்கிய படை நகர்வு என்று வந்தவுடன் தஞ்சாவூர் முக்கியத்துவம் பெற்றது.
இலங்கை – இந்திய ஒப்பந்தம் ஏற்பட்ட காலத்துக்கு முன்னர் தஞ்சாவூர் விமானத்தளத்தை யாராவது பார்த்திருப்பீர்கள் என்றால் அது எந்தளவுக்குப் பாழடைந்து கிடந்தது என்பதைத் தெரிந்து கொண்டிருப்பீர்கள். ரன்வே தகர்ந்துபோன நிலையில் இருந்தது. ATC (Air Traffic Control) டவரின் கதியும் அதுவே.
திடீரென தஞ்சாவூருக்கு ஏராளமான விமானப்படையினர் வந்து இறங்கினார்கள். விமானப்படை உயரதிகாரிகள் அருகிலுள்ள ‘ஹோட்டல் தமிழ்நாடு’ என்ற தமிழக அரசு உல்லாசப்பயண துறையின் சின்னஞ்சிறு ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டார்கள்.
அங்கே தங்குவதற்கு போதிய ரூம்கள் கிடையாது. ‘ஹோட்டல் தமிழ்நாடு’ தவிர தஞ்சையில் உருப்படியான ஹோட்டலும் கிடையாது (1980-களில்! இப்போது எப்படியோ தெரியவில்லை. 80 களில் இந்த ஹோட்டலில் தங்கியிருக்கிறேன். கரப்பான் பூச்சி சும்மா ஓடாது, குரூப் டான்ஸே ஆடும்!)
இதனால், விமானப்படை அனுப்பிய பலர் ரூம் கிடைக்காமல் (அதிஷ்டசாலிகள்), தஞ்சாவூரில் படைத்தளம் இருந்த பகுதியில் கூடாரம் அடித்துத் தங்கினார்கள்.
விமானத்தளத்தை திருத்தும் வேலைகள் சுறுசுறுப்பாக தொடங்கின.
ATC டவர் இரு தினங்களில் திருத்தி அமைக்கப்பட்டது. அதற்குத் தேவையான ரேடார் கருவிகள் பூனேவில் இருந்து கொண்டு வரப்பட்டன. மறுபுறமாக நூற்றுக்கணக்கான தஞ்சைவாசிகள் ரன்வே உருவாக்கும் வேலையில் இறக்கி விடப்பட்டார்கள்.
தளம் இருந்த இடம் துப்புரவு செய்யப்பட்டு, சுற்றிலும் முட்கம்பியிலான வேலி போடப்பட்டு 5 தினங்களிலேயே விமானத்தளம் இயங்கும் நிலைமைக்கு கொண்டுவரப்பட்டது.
திருத்த வேலைகள் தொடங்கிய 5-வது தினமே நான்கு விமானப்படை MI-8 ரக ஹெலிகாப்டர்கள் முதல் முறையாக தஞ்சாவூரில் தரையிறங்கின. விமானப்படையின் தளபதிகளில் ஒருவரான வி.கே.என். சாப்ரே, தமது 109-வது படைப்பிரிவிலிருந்த ஹெலிகாப்டரை தாமே செலுத்திக் கொண்டு தஞ்சாவூர் வந்து தரையிறங்கினார்.
தளபதியே நேரில் வந்தவுடன் சூடு பிடித்தது, ‘தஞ்சாவூர் நடவடிக்கை’, முன்னாள் சோழ சாம்ராஜ்ய தலைநகர் தஞ்சையில் இருந்து இலங்கையை நோக்கி! (தொடரும்)
-ரிஷ்-