இஸ்லாமிய நீதி வழங்களில் முஸ்லீம்களில் பேருவப்பாக கூறப்படும் சட்டங்கள் என்றால் அது குற்றவியல் சட்டங்கள் தான். இஸ்லாமியச் சட்டங்கள் இருந்தால் நாட்டில் கற்பழிப்பே நடக்காது என்பார்கள்.
திருட்டு அறவே ஒழிந்துவிடும் என்பார்கள். அப்படி என்ன சிறப்பு இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களில்? கண்ணுக்குக் கண் பல்லுக்குப் பல் என்று கூறப்படும் ஹமுராபி காலத்துச் சட்டங்கள் தான்.
முகம்மது தான் வாழ்ந்த காலத்தின் போது 2,300 ஆண்டு பழமையாக இருந்த ஹமுராபி காலத்து பாபிலோனியச் சட்டங்களை சீர்திருத்தி மறுபதிப்பு செய்தது தான் இஸ்லாமிய குற்றவியல் சட்டங்கள்.
குற்றவியல் சட்டங்கள் மட்டுமே குற்றங்களைக் குறைத்துவிடும் என்று ஒரு வாதத்துக்கு வைத்துக் கொண்டாலுமே, அது யாருக்கு உரித்தாகும் முகம்மதுக்கா? ஹமுராபிக்கா? யாருக்கு என்பது ஒருபுறமிருந்தாலும், இப்படி குற்றங்களை அறவே ஒழிக்கும் தகுதி சட்டங்களுக்கு உண்டா?
திருடினால் மனிக்கட்டிலிருந்து கையை தரித்து விடுவது, கொலைக்கு கொலை இது போன்றவைகள் தான் குற்றங்களுக்கு எதிரான இஸ்லாமிய தீர்வுகள். இப்படி தண்டனை கொடுத்துவிடுவதால் மட்டுமே குற்றங்களை சமூகத்திலிருந்து நீக்கிவிட முடியாது.
எந்த வகைக் குற்றமானாலும், குற்றம் புரிவதற்கான தேவையும், தூண்டுதலும் சமூகத்தில் இருக்கும் வரை குற்றங்களை சமூகத்திலிருந்து நீக்கிவிட முடியாது.
ஏற்றத் தாழ்வான சமூகத்தை தக்க வைத்துக் கொண்டு, சமூகம் அப்படி ஏற்றத் தாழ்வாய் இருப்பதினாலேயே இயங்கிக் கொண்டிருக்கிறது என்று கூறிக் கொண்டு சட்டம் போட்டு குற்றங்களை தடுத்துவிட முடியும் என்பது கடல்நீரைக் காய்ச்சி சர்க்கரை எடுக்கலாம் என்பது போன்று அபத்தமானது.
திருடனோ திருடியோ அவர்கள் சம்பாதித்த பாவத்திற்கு அல்லாஹ்விடமிருந்துள்ள தண்டனையாக அவர்களின் கரங்களைத் தரித்து விடுங்கள் .. .. .. குரான் 5:38
இனி மனித இனம் முழுமைக்கும் இருக்கப் போகும்(!) சட்டம் திருட்டுக்கு கையைத் தரிப்பது. எது திருட்டு? எந்தத் திருட்டிலிருந்து கையைத் தரிப்பது? என்பது குரானிலும் கூறப்படவில்லை, முகம்மதும் பட்டியலிட்டுக் காட்டவில்லை.
ஆகவே இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் திருட்டு என்பது திருடும் தன்மை தானேயன்றி திருட்டின் மதிப்பல்ல என்பது விளங்கும். பசியின் கொடுமையினால் ஒற்றை இட்லியைத் திருடினாலும், நாட்டின் வளத்தையே ஒட்டக் கொள்ளையடித்தாலும் இரண்டுமே திருட்டு எனும் ஒற்றைச் சொல்லில் அடங்கும். இரண்டுக்கும் தண்டனை கையை வெட்டுவது தானா?
திருட்டு என்பதை எந்த அடிப்படையிலிருந்து தீர்மானிப்பது? எடுத்துக்காட்டாக, சௌதி அரேபியாவின் எண்ணெய் வளத்தைக் கொள்ளலாம். எண்ணெய் எடுப்பது சௌதி, ஆனால் எவ்வளவு எடுக்க வேண்டும், என்ன விலையில் விற்க வேண்டும் என்பதை தீர்மானிப்பது அமெரிக்கா.
மட்டுமன்றி, எண்ணெயின் மூலம் கிடைக்கும் பணத்தை பெட்ரோ டாலர்களாக அமெரிக்காவில் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும் என்பது அமெரிக்காவுக்கும் சௌதிக்கும் இடையிலிருக்கும் ஒப்பந்தம்.
இதனடிப்படையில் பார்த்தால் சௌதியில் இருக்கும் எண்ணெய் வளம் அதன் மக்களுக்கு தரும் பலனை விட அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு தரும் பலன் அதிகம். இந்தச் சுரண்டலை மேலாண்மை என்பதா? அடிமைத்தனம் என்பதா? ஒப்பந்தம் என்பதா?
எதுவானாலும் சௌதி ஆளும் வர்க்கங்களின் பார்வையில் இது நிர்வாகம். மக்களின் பார்வையில் இது சொந்த நாட்டின் வளத்தை இன்னொரு நாடு திருடிக் கொண்டு செல்வது. இந்தத் திருட்டுக்கு என்ன தண்டனை? யார் கையை வெட்டுவது? கையை மட்டும் வெட்டினால் போதுமா?
இது அரசியல் தானே தவிர திருட்டல்ல என்றால் அல்லா போட்ட சட்டம் ஆளும் வர்க்க கண்ணோட்டத்தில் மட்டுமே செயல்படும் என்பது உறுதியாகும். சௌதி மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் மானிய வெட்டுக்கும், வேலையில்லாத் திண்டாட்டத்துக்கும் பின்னே இந்த அரசியல் இருக்கிறது என்றால் அல்லா போட்ட சட்டமான கையை வெட்டுவது சர்வ நிச்சயமாக பொருந்தாத சட்டம் என்பது உறுதியாகும். என்ன சொல்கிறீர்கள் முஸ்லீம்களே!
.. .. .. சுதந்திரமுடையவனுக்கு சுதந்திரமுடையவன், அடிமைக்கு அடிமை, பெண்ணுக்குப் பெண், இருப்பினும் அவனுக்கு அவனது சகோதரனால் ஏதும் மன்னிக்கப்படுமானால் வழக்கமான முறையைப் பின்பற்றி நஷ்ட ஈட்டை கொலை செய்தவன் பெருந்தன்மையுடனும் நன்றியறிதலுடனும் செலுத்திவிடல் வேண்டும். இது உங்கள் இறைவனிடமிருந்து கிடைத்த சலுகையும் கிருபையும் ஆகும். .. .. .. குரான் 2:178
மேலோட்டமாக படித்தலே அபத்தமாகத் தெரியும் இந்த வசனம் தான் முக்காலமும் உணர்ந்த அல்லா வழங்கும் சட்டம். எளிமையாகச் சொன்னால் கொலைக்குக் கொலை.
தூலமாகச் சொன்னால் வர்க்கக் கொழுப்பும், ஆணாதிக்கமும் வழிந்தோடும் சட்டம். குரான் பல வசனங்களில் சுதந்திரமானவனும் அடிமையும் தகுதியில் ஒன்றல்ல என்கிறது, அது தான் இதிலும் தெரித்திருக்கிறது.
அடிமையைக் கொன்றால் இன்னொரு அடிமை கொல்லப்பட வேண்டும், பெண்ணைக் கொன்றால் இன்னொரு பெண்ணைக் கொல்ல வேண்டும். ஆண்டான் அடிமைக் காலகட்டத்தில் அடிமைகளைக் கொல்ல ஆண்டைகளுக்கு முழு சுதந்திரம் இருந்தது என்பதை இங்கே நினைவுபடுத்திக் கொள்க.
மரணதண்டனை கூடாது என்பதை முன்வைத்து இதை சிலர் மறுக்கக் கூடும். ஆனால், அவ்வாறன்றி கொலைக்கு கொலை என்பது காட்டுமிராண்டித்தனம் என்பதாலேயே இது எக்காலத்துக்கும் பொருந்தாத சட்டமாக இருக்கிறது.
கொலைக்கான காரணம் இச் சட்டத்தில் என்ன விதத்தில் தொழிற்படும்? அண்மையில் ஒரு வழக்கு குறித்து செய்தி ஊடகங்களில் வந்த செய்தி, மகளை வன்புணர்ச்சி செய்ய முயன்ற கணவனை மட்டையால் அடித்துக் கொன்ற மனைவியை அது குற்றமல்ல என்று நீதிமன்றம் விடுதலை செய்தது.
அல்லாவின் பார்வையில் இது வரம்புமீறிய செயல் என்பதை முஸ்லீம்கள் ஒப்புக் கொள்வார்களா? கொலைக்கு கொலை என்றால் அந்த மனைவி கொல்லப்பட வேண்டியவரா?
ஆண்டைகளுக்கு இச்சட்டம் ஒரு சலுகையையும் வழங்கியிருக்கிறது. கொலைக்கு பகரமாக கொலை என்பது ஏழைகளுக்கு அடிமைகளுக்கு மட்டும் தான் ஆண்டைகள் நட்ட ஈடாக பணம் கொடுத்து கொல்லப்படுவதிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
இந்த அயோக்கியத்தனம் இன்றும் அல்லாவின் அனுமதி எனும் பெயரில் நடந்து கொண்டிருக்கிறது. இதை முன்வைத்து யாராருக்கு நட்டஈடு எவ்வளவு என்று அட்டவணையே போட்டு வைத்திருக்கிறார்கள்.
இதன்படி கொல்லப்பட்டது முஸ்லீமாக இருந்தால் 3,00,000 ரியால், முஸ்லிம் பெண்ணாக இருந்தால் 1,50,000 ரியால், கிருஸ்துவ, யூதனாக இருந்தால் 1,50,000 ரியால், கிருஸ்தவ, யூத பெண்ணாக இருந்தால் 75,000 ரியால் வேறு மதங்களைச் சார்தவராக இருந்தால் 6,666 ரியால், வேறு மதங்களைச் சார்ந்த பெண்ணாக இருந்தால் 3,333 ரியால். என்ன சொல்வது இதற்கு?
இது சௌதிச் சட்டம் தாயன்றி இஸ்லாமியச் சட்டம் அல்ல என்று கூறுவோர் இரண்டு அம்சங்களைக் கவனிக்க வேண்டும். ஒன்று, இப்படி பேதம் பார்ப்பதை வசனம் 4:92ன் மூலம் தொடங்கி வைத்ததே குரான் தான். இரண்டு, இஸ்லாம் தொடங்கிய காலம் முதல் இன்றுவரை அங்கு அதிகாரத்தில் இருப்பது இஸ்லாம் தான்.
மனிதன் கணந்தோறும் அறிவியல் ரீதியாகவும், வரலாற்று அறிதல் ரீதியாகவும், புவியியல் ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும், பண்பாட்டு விழுமியங்கள் ரீதியாகவும், இன்னும் பலவாறாகவும் மாறிக் கொண்டே இருக்கிறான்.
எல்லாம் மாறும் உலகில் எல்லாக் காலத்தில் மாறாத ஒரே சட்டம் என்பது கருத்தியல் ரீதியாகவே பிழையானது. முஸ்லீம்கள் இஸ்லாமியச் சட்டமே எக்காலத்துக்கும் பொருந்தக் கூடியது என்று கூறுவது, மதம் கொடுக்கும் அழுத்தத்திலிருந்து தானேயன்றி யதார்த்தத்தில் அதுவே பொருத்தமானதாக இருக்கிறது என்பதால் அல்ல.
மதப் பரப்புரையாளர்கள் கொடுக்கும் திருகல் விளக்கங்களை கிள்ளை போல் புரியாமல் அப்படியே மீளச் சொல்வதை விடுத்து சற்றே சிந்தை செலுத்தினால் எக்காலத்துக்கும் பொருந்தும் சட்டம், எல்லோருக்கும் பொருந்தும் சட்டம் என்று சதா காலமும் கூறிக் கொண்டிருக்க மாட்டார்கள் என்பதே உண்மை.
– செங்கொடி-