700 பேரை தாண்டிவிட்டது சாவுகள். கொன்று குவிக்கப்பட்ட அத்தனை பேரும் சிறுவர்களும் பொதுமக்களும்தான். 5000 பேருக்கு மேல் காயமடைந்திருக்கிறார்கள். அதுவும் அப்பாவி மக்கள்தான். 6000 குடியிருப்புகளுக்கு மேல் சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன காஸாவில். அதுவும் அப்பாவி மக்களின் வீடுகள்தான். வணக்கஸ்தலங்கள் உடைக்கப்பட்டிருக்கின்றன இஸ்ரேலின் தாக்குதலில். இந்தத் தாக்குதல் எல்லாம் யாரை நோக்கி?
ஹமாஸ் போராளிகளை தாக்குகிறோம் என்று இஸ்ரேல் சொன்னால் பொதுமக்கள் ஏன் சாகிறார்கள்?
ஏன் உங்கள் குறி தவறுகிறதா? அல்லது தவறாக குறி வைக்கப்பட்டிருக்கிறதா?
போரின் முதல் புள்ளி எங்கே வைக்கப்பட்டது என்பதுதான் தற்போதைய மிகப்பெரிய கேள்வி. இது இன்று நேற்றல்ல அப்போதே ஆரம்பிக்கப்பட்ட ஒரு பிரச்சினை.
இஸ்ரேலுக்கு பிரச்சினை ஹமாஸோடுதான் என்றால் அவர்கள் ஹமாஸ் இயக்கத்தவர்களை குறிவைத்திருந்தால் யாரும் கவலைப்பட்டிருக்க மாட்டார்கள். ஆனால் அவர்கள் குறிவைத்தது பாலஸ்தீனியப் பச்சிளம் குழந்தைகளையும் பெண்களையும்தான்.
கடந்த ஜூன் மாதம் 12ஆம் திகதி ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலைச் சேர்ந்த மூன்று சிறுவர்களை கடத்தினார்கள் என்று சொல்லி, பாலஸ்தீனியர்களின் வீடுகளுக்குள் புகுந்த இஸ்ரேலியர்கள் 20 பேரை அதிரடியாகக் கைதுசெய்தனர். அதுமட்டுமன்றி ஹமாஸின் மூத்த தலைவர்கள் உட்பட 86 பேரை மேற்குக் கரையில் வைத்துக் கைது செய்தது இஸ்ரேல் படை.
இதையடுத்துதான் அங்கு குண்டுமழை பொழிய ஆரம்பித்தது. முதல் கட்டமாக ஹமாஸ் போராளிகள் ரொக்கெட் தாக்குதலில் குதித்தனர். இதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்குமா இஸ்ரேல். பதிலுக்கு இஸ்ரேலும் ரொக்கெட்டை வீசியது.
இதோ போர் ஆரம்பித்துவிட்டது!
இந்த நிலையில் அந்த மூன்று சிறுவர்களை தேடிவந்த இஸ்ரேல் இராணுவம் அந்தக் பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்குள் புகுந்து 15 வயதே நிரம்பிய ஒரு சிறுவனை கொலை செய்தது.
அதற்குப் பிறகு கடத்தப்பட்ட அந்த மூன்று இஸ்ரேலிய சிறுவர்களும் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் பிறகுதான் போர் உக்கிரகட்டத்தை எட்டியது.
ஆத்திரமுற்ற இஸ்ரேல் அதிரடியாக பாலஸ்தீனியர்கள் 400 பேரைக் கைதுசெய்தது. 6 பேரை கொலையும் செய்தது. இதையெல்லாம் பார்த்துக்கொண்டு சும்மா இருக்குமா ஹமாஸ், தனது தாக்குதலை வேகப்படுத்தியது. இஸ்ரேல் மீது 40 ரொக்கெட்டுக்களை வீசியது.
இதையடுத்து இஸ்ரேல் இராணுவம், காஸா மீது 34 பகுதிகளில் வான் மூலம் தாக்குதல் நடத்தியது.
இந்தச் சந்தர்ப்பத்தில்தான் ஒரு முக்கியமான கேள்விக்கு விடை கிடைத்தது. அந்த மூன்று சிறுவர்களையும் கொன்றது நாம்தான் என்று பொறுப்பேற்றது அல்கொய்தாவுடன் தொடர்புடைய ஒரு அமைப்பு.
ஆனால் இதை இஸ்ரேல் நம்புவதாய் இல்லை. தாக்குதலை தொடர்ந்து.
இஸ்ரேலுக்குத் தேவை பாலஸ்தீன் மீது தாக்குதலை ஆரம்பிக்க ஒரு காரணம் மட்டுமே. அது கிடைத்துவிட்டதென்று தாக்குதலை தொடர்ந்தது.
இந்த நேரத்தில்தான் இஸ்ரேல் புதியதொரு வியூகத்தில் போரை நடத்துகிறோம் என்றும் இது பாதுகாப்பு விளிம்பு நடவடிக்கை என்றும்கூறி Operation Protective Edge என்பதை ஆரம்பித்தது. காஸா மீது நூற்றுக்கணக்கான வான் வெளித் தாக்குதலை Operation Protective Edge நடத் தியது.
தன்னைத் தற்காத்துக்கொள்வதாகச் சொல்லிச் சொல்லி காஸா மீது தாக்குதலை விஸ்தரிக்க்கிறது இஸ்ரேல்.
இது இன்று நேற்றல்ல பல காலமாக இதையே செய்துவருகின்றது.
ஆழமாக ஆராய்ந்து பார்த்தோமேயானால், இஸ்ரேலின் பாதுகாப்பு உண்மையில் இஸ்ரேலின் கைகளில்தான் இருக்கிறது.
பாலஸ்தீனியர்களை ஒடுக்குவதை நிறுத்தாதவரையில் இஸ்ரேலில் யாரும் நிம்மதியாகத் தூங்க முடியாது.
இது இஸ்ரேலே ஏற்படுத்திக்கொண்ட நிலைமை. நாகரிகமும் பழைமையான கலாசாரமும் கொண்ட மண்ணின் மைந்தர்களான பாலஸ்தீனியர்களை அறுபதாண்டுகளுக்கும் மேலாக இரண்டாம் தர மனிதர்களாக இஸ்ரேல் நடத்தி வருகிறது. பாலஸ்தீனியர்களை சுதந்திரமாக வாழவிடாத வரையில் தனது எதிர்காலத் தலைமுறையினருக்கு அமைதியான வாழ்க்கைக்கான உத்தரவாதத்தை இஸ்ரேல் நிச்சயம் வழங்க முடியாது.
புராணக் கதைகளின் பெயராலும், வல்லரசுகளின் ஆதிக்கப்போட்டியாலும் பாலஸ்தீனியர்கள் அனுபவித்துவரும் துயரங்களுக்கு முடிவுதான் எப்போது?
ஆரம்பத்திலேயே குறிப்பிட்டிருந்தோம் இது இன்று நேற்றல்ல காலம்காலமாக நடந்துவரும் ஒரு பிரச்சினை என்று. இந்தப் பிரச்சினையின் வேரை அறிந்துகொண்டால்தான் கிளைகள் முதல் இலைகள் வரை பரவியிருக்கும் விஷம் எப்பேர்ப்பட்டது என்று புரியும்.
யார் என்ன சொன்னாலும் அதை எப்படிச் சொன்னாலும் பாலஸ்தீனியர்களுக்கு இஸ்ரேல் செய்த மோசடி வரலாற்றில் மறையாது. அது மறையவும் கூடாது. இது ஒரு வரலாற்று மோசடி என்று வர்ணிக்கிறது காலம்.
தலைப்பில் சொன்னது போல காலம் இரக்கமற்றது.
-எஸ்.ஜே.பிரசாத்-
IDF Attacking in Gaza following the ceasefire violation from HamasIDF Attacking in Gaza following the ceasefire violation from Hamas. IDF Spokesman