கிளிசொச்சி, கந்தன் குளத்தில் இன்று சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில் குளிக்கச் சென்ற கிருஸ்ணபுரம் பகுதியைச் சேர்ந்த மூன்று மாணவிகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
கிளிநொச்சி செல்வா நகரைச் சேர்ந்த மூன்று மாணவிகள் வீட்டுக் கிணற்றில் நீர் வற்றிப் போன நிலையில், இன்று அருகில் உள்ள கந்தன் குளத்தில் குளிக்கச் சென்ற வேளை நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர்.
கிளிநொச்சி இந்துக் கல்லூரி மாணவிகளான ஒரே குடும்பத்தை சேர்ந்த பாலசரவணபவன் நவதாரணி (வயது 11), பாலசரவணபவன் தாட்சாயிணி (வயது 17) ஆகியவர்களும் இரத்தினராசா நிசாந்தினி (வயது 19) என்பவரும் குளத்தில் உள்ள சேற்றில் சிக்கி பரிதாபகரமாக நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர்.
கடும் வரட்சி காரணமாக வற்றி சேறாக காணப்படும் குளங்களில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக ஆபத்தான நிலைகளில் மக்கள் குளித்து வருகின்றார்கள்.
கிளிநொச்சியில் ஏற்பட்டிருக்கின்ற மிகப்பெரும் வரட்சியும் நீர் பற்றாக்குறையுமே குளங்கள் நோக்கி மக்களை செல்ல வைத்திருக்கின்றது. குளங்களும் வற்றி ஆபத்தான நிலையில் காணப்படும் சந்தர்ப்பத்தில் இந்த இளம்பிஞ்சுகளின் மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன.