பாகிஸ்தானில் ’குடும்ப கவுரவத்தை காப்பாற்றுகிறேன் பேர்வழி’ என்று சில ஆண்கள் கவுரவக் கொலைகளில் ஈடுபடுவது பெருகிக் கொண்டே வருகின்றது. இவ்வகையில், கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 860 பாகிஸ்தானியப் பெண்கள் கவுரவக் கொலைக்கு பலியாகியுள்ளனர்.
இந்நிலையில், காதலனை கரம் பிடிக்க துடித்த 19 வயது தங்கையையும், அவளது காதலுக்கு துணையாக இருந்த தாயையும் கத்தியால் வெட்டிக் கொன்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தின் குல்பெர்கா பகுதியை சேர்ந்த சிட்ரா(19) என்ற இளம்பெண், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபரை உயிருக்குயிராய் காதலித்துள்ளார். சிட்ராவின் தாயார் ருக்ஸானா பிபியும் இந்த காதலுக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளார்.
ஆனால், இதை ஏற்றுக் கொள்ள மறுத்த சிட்ராவின் அண்ணன் முடாஸர் என்பவன் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளான். தனது எதிர்ப்பையும் மீறி காதலருடன் நேற்று முன்தினம் தனது தங்கை பேசிக் கொண்டிருப்பதைக் கண்ட அவன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சிட்ராவை ஆவேசத்துடன் வெட்டத் தொடங்கினான்.
மகளின் அலறல் சத்தம் கேட்டு தடுக்க வந்த ருக்ஸானாவையும் பெற்ற தாய் என்றும் கருதாமல் கண்மூடித்தனமாக வெட்டிக் கொன்ற அவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
குடும்ப கவுரவத்தைக் காப்பாற்றவே தாயையும், தங்கையையும் வெட்டிக் கொன்றதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ள முடாஸர், இந்த கொலைகளை செய்ததற்காக நான் வருத்தப்படவில்லை என்றும் கூறியுள்ளான்.