ஜெயலலிதாவுக்கு சிறைத்தண்டனைக் கிடைக்க காரணம் சுப்பிரமணிய சாமிக் கூட்டணியின் சதியே என்று கடும் குற்றச்சாட்டை வீசுவது அ.தி.மு.க. வோ அல்லது அந்தக் கட்சியின் ஆதரவு அமைப்போ அல்ல.
அ.தி.மு.க.வின் பரமவைரிக் கட்சியான தி.மு.க.வை சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர் ஒருவர்தான் இப்படிக்குற்றம் சாட்டினார். இவரின் பேச்சு தி.மு.க. வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின் றது.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயல லிதாவுக்குத் தண்டனை கிடைத்ததை தொட ர்ந்து தி.மு.க.வினர் வெளிப்படையாகப் பட்டாசு வெடித்து கொண்டாடா விட்டாலும் உள்ளூர மகிழ்கின்றனர்.
ஆனால், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அந்தக் கட்சியின் பொதுக்குழு உறுப்பினரும் தலைமைக்கழக பேச்சாளருமான வக்கீல் புதுப்கோட்டை செல்வம் என்பவர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாகப் பேசிப் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றார்.
இதுபற்றி அவரிடம் கேட்டபோது, தமிழர்களின் வாழ்வுரிமைக்காகப் போராடிக்கொண்டிருந்த ஜெயலலிதாவுக்கு நீதிமன்றம் மூலம் அநீதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் வரை போய் சட்டப் போராட்டம் நடத்தியும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியும் தமிழர்களின் வாழ்வுரிமையை காப்பாற்றிய பெருமை ஜெயலலிதாவுக்கு உண்டு.
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதோடு அதற்காக அவர் உச்ச நீதிமன்றம்வரை போய் போராடிக்கொண்டிருக்கின்றார்.
1998 ஆம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசு கவிழ்ந்த பிறகு காங்கிரஸ் மற்றும் ஜெயலலிதா ஆதரவுடன் நாட்டில் பிரதமர் ஆசனத்தில் அமர்ந்து விடலாம் என்று சாமி நினைத்தார். அதற்கு ஜெயலலிதா ஆதரவு தெரிவிக்கவில்லை. அதனால், ஜெயலலிதாவைப் பழிதீர்க்க அவர் நேரம் பார்த்துக்கொண்டிருந்தார்.
இப்படி பொளந்து கட்டினார் புதுக்கோட்டை செல்வம்.
தி.மு.க.வில் முக்கிய பொறுப்பில் இருக்கும் நீங்களே இப்படிக் கட்சிக்கு விரோதமாகப் பேசலாமா? அ.தி.மு.க.வில் சேரும் முடிவில்தான் நீங்கள் இப்படிப் பேசுவதாக சொல்லப்படுகிறதே உண்மையா? என்று கேட்டபோது, கருணாநிதியைப் பொறுத்தவரை எந்த விஷயமாக இருந்தாலும் தனது கருத்தை ஆணித்தரமாக சொல்லக்கூடியவர்.
ஆனால் இந்த விஷயத்தில் ஒருவாரகாலம் மௌனமாக இருந்து விட்டு இப்போதுதான் பேசத்தொடங்கியிருக்கின்றார். இது அவருக்கு இருக்கும் பயத்தையே காட்டுகின்றது. காரணம் விரைவில் அவரது குடும்பத்தினர் ஒவ்வொருவராக ஜெயிலுக்குப் போகும் சூழ்நிலை இருக்கின்றது.
முன்னாள் தி.மு.க. அமைச்சர்கள் பெரும்பாலானோர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு இருக்கின்றது. அதனால்தான் நீதிமன்றத்தின் தீர்ப்பு பற்றிப்பேசவே பயந்து கொண்டிருந்தார் கருணாநிதி.
அண்ணா தொடங்கிய தி.மு.க போர்க்குணம் கொண்ட கட்சி. ஆனால் இன்றைக்கோ பல் இல்லாத பாம்பாகக் காட்சியளிக்கின்றது. தலைமை முதல் மாவட்டம் வரை கடந்த 30 வருடங்களாக குடும்ப அரசியலே நடந்து வருகின்றது.
இதனால் தி.மு.க. தொண்டர்கள் விரக்தியில் இருக்கின்றார்கள். மு.க. அழகிரிக்கு தென்மண்டல அமைப்புச் செயலாளர் பதவியைக் கொடுத்தார். அதைத் தொடர்ந்து அவர் மத்திய அமைச்சர் ஆக்கப்பட்டார். ஆனால் 5 வருட காலத்தில் பாராளுமன்றத்தில் ஒரு தடவை கூட அழகிரி பேசியதே இல்லை.
அதன்மூலம் ஜனநாயக அமைப்பையே கேவலப்படுத்திவிட்டார் கருணாநிதி.
இலங்கைத் தமிழர்களுக்காகக் காங்கி ரஸ் கூட்டணியை விட்டு வெளியே வந்ததாகச் சொன்ன கருணாநிதி, மகள் கனிமொழியை எம்.பி.யாக்க காங்கிரஸ் கட்சியின் காலில் போய் விழுந்தார் கொள்கை விஷயத்தில் சறுக்கிய கருணாநிதி கட்சி விஷயத்திலும் மோசமான போக்கையே கடைப்பிடித்து வருகின்றார்.
இதனால் அந்தக்கட்சி மீது இருந்த மரியாதை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வரு கின்றது. ஜெயலலிதாவுக்கு ஆதரவாக பேசியதற்காக என்மீது நடவடிக்கை பாய்ந்தால் அதையும் சந்திக்க நான் தயாராக இரு க்கின்றேன் என்றார்.
இவ்வாறு சொன்ன புதுக்கோட்டை செல்வம் இன்னும் நிறையச்சொல்ல வேண்டியிருக்குது. அதை நேரம் வரும்போது சொல்கிறேன் என சஸ்பென்ஸுடன் கூறி முடித்தார்.