அம்பாறை – திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவின் கீழ் உள்ள வட்டமடு மேச்சல் தரையில், பட்டியில் இருந்த இரண்டு பசு மாடுகளின் தலை இனம் தெரியாதோரால் வெட்டப்பட்டுள்ளது.
மேலும் அந்தத் தலைகளை எடுத்துச் சென்று சாகாமம் பிரதான வீதி நாவடிச் சந்தியில் வைத்துள்ளதோடு, எங்கள் காணிகளுக்குள் இருந்து கால்நடைகளை வெளியேற்றாவிட்டால் அதற்கு ஏற்படும் நிலை தான் உங்களுக்கும் ஏற்படும் என எச்சரிக்கையிலான வாசகம் அடங்கிய சுலோகம் எழுதிவைக்கப்பட்டுள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை (28) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
வட்டமடு மேச்சல் தரைபகுதியில் விவசாயிகள் அத்துமீறி விவசாயம் செய்ய முற்படுவதாக கால்நடையாளர்கள் குற்றஞ்சாட்டி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல போராட்டங்களை நடாத்திவருகின்றனர்.
இதேவேளை விவசாயிகள் அதற்கான அனுமதி தமக்கு வழங்கப்பட்டுள்ளது என ஆர்ப்பாட்டங்களை அவர்களும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை வட்டமடுமேச்சல் தரைபகுதியில் கால்நடையாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினையை அடுத்து பொலிசார் இருசாராரையும் அப்பகுதிக்கு செல்லக்கூடாது என அறிவித்து இவர்களுக்கு எதிராக பொத்துவில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்குதல் செய்தனர்.
இதனையடுத்து நீதிமன்றம் இன்று புதன்கிழமை வரை இருபகுதியினரும் அப்பகுதிக்கு செல்லக்கூடாது என உத்தரவிட்டது.
இவ்வாறான நிலையில் வட்டமடு மேச்சல் தரைபகுதியில் உள்ள இரு பட்டிகளில் இருந்த இரண்டு பசுமாடுகளின் தலைகளை இனம் தெரியாதோர், வெட்டி எடுத்துக் கொண்டுவந்து சாகாமம் வீதியல் நாவலடிச் சந்தியில் வைத்துள்ளனர்.
இதனை இன்று புதன்கிழமை காலை 6.00 மணியளவில் அந்தப்பகுதிக்குச் சென்றவர்கள் கண்டு பொலிசாருக்கு தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக திருக்கோவில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
74 வயது மூதாட்டி மாணவனால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை
பேராதனை பொலிஸ் பிரிவில் 74 வயது மூதாட்டி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் கழுத்து நெரித்துக் கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பாக 17 வயது மாணவன் ஒருவன் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்தனர்.
பேராதனை கிரிபத்கும்புறைப் பகுதியிலுள்ள பலப்பிட்டிய என்ற இடத்திலேயே மேற்படி சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவத்தில் மரணமடைந்துள்ள மூதாட்டி திருமணமாகாதவர் என்றும் பாலர் பாடசாலை நடத்தும் ஆசிரியை என்றும் தெரிய வந்துள்ளது.
பிரேத பரிசோதனையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டதற்கான தடயங்கள் இருப்பதாக கண்டி சட்டவைத்திய அதிகாரி தெரிவித்ததை அடுத்தே பொலிசார் மேற்கொண்ட நடவடிக்கையின் போது சந்தேக நபரான மாணவன் இன்று கைதாகி உள்ளான்.
பேராதனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கமல் ஆரியவன்ச தலைமையிலான பொலிஸ் குழவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.