தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியை இராஜினாமா செய்த ஞானதேசிகன் இன்று சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர்,
‘’பதவி என்பது ஓடும் மேகம் போன்றது. நான் கடந்த மூன்று ஆண்டுகளாக தலைவர் பதவி வகித்து வருகிறேன். என் மீது நம்பிக்கை வைத்து சோனியாவும் ராகுலும் இந்த பதவியை வழங்கினார்கள்.
அந்த நம்பிக்கை வீணாகாத வகையில் எல்லோரையும் ஒருங்கிணைத்து ஒற்றுமையுடன் கட்சியை நடத்தினேன். 10–க்கும் மேற்பட்ட பொதுக் கூட்டங்கள் நடத்தி அனைத்து தலைவர்களையும் ஒரே மேடையில் பேச வைத்தேன். சிறு வயதில் இருந்தே தேசிய இயக்கத்தின் மீது பற்று வைத்திருத்தேன்.
காமராஜரால் ஈர்க்கப்பட்டு காங்கிரசுக்கு வந்தேன். மூப்பனாரால் அரசியல் முகவரி பெற்று மேல்சபை எம்.பி. ஆனேன். மீண்டும் ஒருமுறை ஜி.கே.வாசனால் மேல்சபை எம்.பி. ஆனேன். கட்சிக்காக உழைத்த திருப்தியுடன் இராஜினாமா கடிதத்தை கொடுத்தேன்.
எந்தக் குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் மூன்று ஆண்டுகளாக கட்சியை வழிநடத்தினேன். ஆனால் மாநில தலைவர் பதவி முக்கிய பதவியாக கருதப்படவில்லை. மாநிலத்தின் உணர்வுகள், பிரச்சினைகளுக்கு கட்சி மேலிடம் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
கட்சியை நடத்தும் தலைவரின் ஆலோசனை இல்லாமல் ஒரு மாநிலத்தில் கட்சியை வழிநடத்த முடியாது. இப்படி பல சங்கடங்கள் எனக்கு இருந்தன. உள்கட்சி விவகாரம் என்பதால் பல விஷயங்களை பேசமுடியாது.
10 வருடங்களாக மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் நியமிக்கப்படாமல் இருந்தனர். அதற்காக ஓராண்டு போராடி ராகுல் தலையிட்ட பிறகுதான் புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால் அந்த தலைவர்களில் பலர் சத்திய மூர்த்திபவனுக்கே வருவதில்லை.
மூன்று முறை நிர்வாகிகள் கூட்டம் நடத்தி இருக்கிறேன். அவர்கள் கலந்து கொள்ளவில்லை. இதுபற்றி மேலிடத்துக்கு தெரிவித்தும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. பதவியில் இருப்பவர்கள் வேலை செய்வதில்லை. பதவி இல்லாதவர்கள் வேலை செய்கிறார்கள். உற்சாகமாக பணிபுரிபவர்களுக்கு பதவி வழங்கும் அதிகாரம் தலைவருக்கு இல்லை.
இதுபற்றி மேலிடத்தில் சொன்னால் அவர்கள் காதில் வாங்குவதில்லை. தமிழ்நாட்டில் யாருடன் கூட்டணி என்பது முதல் நாள் வரை எனக்கு தெரியாது. மேலிடத்தில் கேட்டபோது ஒரு கட்சியை குறிப்பிட்டு அவர்களுடன் கூட்டணி என்றனர்.
ஆனால் அந்த கட்சி மறுநாள் வேட்பாளர் பட்டியலை வெளியிடுகிறதே கூட்டணி எப்படி சாத்தியமாகும் என்றேன். இங்கு என்ன நிலைமை என்று தெரியாமலேயே எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை முடிவு செய்கிறார்கள்.
உறுப்பினர் சேர்க்கைக்காக 10 இலட்சம் உறுப்பினர் அட்டைகளை அச்சடித்தோம். முன்பு பலர் உறுப்பினராக சேர்க்கப்பட்டும் அட்டை கொடுக்கப்படவில்லை. எனவே இந்த முறை உறுப்பினராக சேர்க்கும் போதே அட்டை வழங்கப்பட வேண்டும் என்றேன்.
சில நாள் கழித்து சின்னாரெட்டி உறுப்பினர் அட்டையை கொடுக்க வேண்டாம் என்று சிரித்துக் கொண்டே கூறினார். பரிசீலனை முடிந்து வேறு வடிவத்தில் அட்டையை கொடுக்கலாம் என்றனர். ஆனால் தமிழ் நாட்டில் கட்சிக்காக பாடுபட்ட தலைவர்களை முன்னிருத்தாமல் கட்சியை வளர்க்க முடியாது, கட்சி வளரவும் செய்யாது. இப்படிப்பட்ட கவலைகள் வருத்தங்கள் எனக்கு உண்டு.
திடீர் என்று என்னை கேட்காமலேயே கட்சிக்கு பொதுச் செயலாளரை நியமித்தனர். அப்போதே பிரச்சினை தொடங்கி விட்டது. கட்சியின் இது போன்ற நடைமுறை மாறா விட்டால் எதிர்காலம் சிக்கலாக இருக்கும்.
கடந்த மூன்று மாதங்களாக ப.சிதம்பரம் சத்தியமூர்த்தி பவனுக்கும் வருவதில்லை. கட்சி கூட்டங்களுக்கும் வருவதில்லை. தனியாக ஆவர்த்தனம் செய்கிறார். சில கூட்டங்களையும் தனியாக நடத்தியுள்ளார். அது என்ன கூட்டம் என்று எனக்குத் தெரியாது. இதைப் பற்றியெல்லாம் கட்சி மேலிடம் அழைத்து எச்சரிக்கை செய்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
நான் தலைவராக இருக்கும் போதே அடுத்த தலைவராக யாரை நியமிப்பது என்று விவாதித்த அநாகரீகத்தையும் சந்தித்தேன். எனவேதான் டெல்லியில் கூட்டம் முடிந்ததும் அகமது படேலை சந்தித்து ஒரு கடிதத்தை கொடுத்தேன்.
நேற்று முழுவதும் யோசித்து இரவு 07.00 மணிக்கு எனது இராஜினாமா கடிதத்தை அனுப்பிவிட்டேன். அதை ஏற்றுக் கொள்ளும் வரை தலைவராக நீடிக்கிறேன்’’ என்று கூறினார்.
ஐந்து மீனவர்களால் தமிழகமே கொந்தளிக்கிறது!
31-10-2014
இலங்கை நீதிமன்றில் இந்திய மீனவர்கள் ஐவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து தமிழகத்தில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், போராட்டம் என மக்கள் வீதிக்கு இறங்கியுள்ளதோடு சட்டத்தரணிகள் உள்ளிட்ட தரப்பினரும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
தமிழக நிலை குறித்து இந்திய இணையங்களில் வெளியான செய்திகளின் சுருக்கம் வருமாறு.
இலங்கை கொடி எரிப்பு: 20 பேர் கைது
தமிழக மீனவர்கள் ஐவருக்கு இலங்கை நீதிமன்றில் மரண தண்டனை வழங்கியுள்ளதை கண்டித்து தூத்துக்குடியில் சட்டத்தரணிகள் போராட்டம் நடத்தினர்.
அப்போது சிலர் இலங்கை தேசிய கொடியை எரித்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து 20 சட்டத்தரணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீனவர்களை காக்க நடவடிக்கை – கருணாநிதி
மத்திய அரசின் தவறான அணுகுமுறையால் தான், தமிழக மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை நீதிமன்றில் மரண தண்டனை கிடைத்துள்ளது. இந்நிலையில், அவர்களை மீட்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மத்திய அரசு எடுக்க வேண்டும் என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறி உள்ளார்.
மீனவர்களுக்கு ஆதரவு
மிழக மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியுள்ளதை கண்டித்து, கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பகுதி சட்டத்தரணிகள் இன்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தினர்.
ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன் நடந்த ஆர்பாட்டத்தில், தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷமிட்டனர்.
மீனவர்களுக்கு தூக்கு: ஊரே சோகம்
ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. இவர்களில் மூன்று பேர் தங்கச்சிமடத்தையும், 2 பேர் பாம்பன் பகுதியையும் சேர்ந்தவர்கள்.
நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, இந்த இரண்டு கிராமங்களிலும் சோகம் நிலவுகிறது. கிராமத்தைச் சேர்ந்த யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை. கூட்டம் கூட்டமாக வீடுகளின் முன் அமர்ந்து அழுது புலம்பி வருகின்றனர்.
தங்கச்சிமடம் மீனவர்கள் நாளை உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு
போதைப்பொருள் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 5 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்திருப்பதை கண்டித்து தங்கச்சிமடம் மீனவர்கள் நாளை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்துள்ளனர்.
ராமேஸ்வரத்தில் பதற்றம்
மீனவர்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட தகவல், ராமேஸ்வரம் தீவு முழுவதும் நேற்று பதற்றத்தை ஏற்படுத்தியது. ராமேஸ்வரம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஆயிரக்கணக்காண மீனவர்களும், பெண்களும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். நகர பேரூந்து ஒன்று தீயிட்டு எரிக்கப்பட்டது. தங்கச்சிமடம் பகுதியில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் ரயில் தண்டவாளங்கள் பெயர்த்தெடுக்கப்பட்டன.
இலங்கை தூதரகம் முற்றுகை
இலங்கை நீதிமன்றம் 5 தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்ததை கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை தமிழ் கூட்டமைப்பு நிர்வாகிகள் முற்றுகையிட்டனர். 300 பேர் இலங்கை தூதரகத்தை நோக்கி ஆவேசம் முழங்க முற்றுகையிட சென்றனர்.
பொலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதில் 300–க்கும் மேற்பட்டோர் கைதானார்கள். அனைவரையும் நுங்கம்பாக்கம் வடக்கு மாடவீதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இன்று மாலை அனைவரும் விடுதலை செய்யப்பட உள்ளனர்.