உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றியவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது, இறந்தவர்கள் எண்ணிக்கை 8 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது என்று ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் இணைய தளம் திரட்டும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்குடன் அமெரிக்கா – கனடா இடையிலான எல்லையை மூட இருநாட்டு அதிபர்கள் டொனால்டு டிரம்ப் மற்றும் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோர் ஒப்புக்கொண்டுள்ளனர். இதனால் வணிகம் பாதிக்கப்படாது என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
உலக அளவில் இதுவரை கொரோனா தொற்றியவர்களில் 82 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளதாகவும் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக இணைய தளம் தெரிவிக்கிறது.
மேலும், இந்தியாவில் கொரோனா தொற்றியவர்கள் எண்ணிக்கை 152 ஆகியுள்ளதாகவும் இந்த இணைய தளம் கூறுகிறது.
புதன்கிழமை மாலை 7 மணி நிலவரப்படி, கொரோனா தொற்றியவர்கள் எண்ணிக்கை – 2,04,029 என்கிறது இந்த இணைய தளம். இறந்தவர்கள் எண்ணிக்கை 8,241 என்றும் குறிப்பிடப்படுகிறது.
மொத்தம் 157 நாடுகள் மற்றும் பிராந்தியங்களுக்கு இந்த நோய் பரவியுள்ளது.
அமெரிக்காவில் நோய் தொற்றியவர்களின் எண்ணிக்கை 6,496 ஆக உயர்ந்துள்ளதாகவும், இறந்தவர்கள் எண்ணிக்கை 114 ஆக அதிகரித்துள்ளதாகவும் இந்த இணைய தளத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் இத்தாலியில் காலியாகக் கிடக்கும் மிலன் நகர வீதி ஒன்றில் நடந்து செல்லும் ஒரு ஜோடி முதியவர்கள்.
தென்கிழக்கு ஆசியா
தென்கிழக்கு ஆசியாவில் உள்ள நாடுகளில் கொரோனா தொற்றியவர்கள் எண்ணிக்கை 480ஐக் கடந்துள்ள நிலையில், இந்த நோயின் பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கை தேவை என்று உறுப்பு நாடுகளிடம் வலியுறுத்தியுள்ளது உலக சுகாதார நிறுவனம்.
இந்தப் பிராந்தியத்தில் கொரோனாவால் இதுவரை 8 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
உலக சுகாதார நிறுவனத்தின் கணக்குப்படி தற்போது வரை கொரோனாவால் 7529 பேர் பலியாகி உள்ளனர். 184, 976 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.