அங்கங்கள் கட்டப்பட்டுள்ள நிலையில் வயோதிப பெண்ணொருவரை பருத்தித்துறைப் பொலிஸார் இன்று காலை மயானத்திற்கு அருகில் உயிருடன் மீட்டுள்ளனர்.
கண்கள், கைகள், கால்கள், வாய் என்பன கட்டப்பட்ட நிலையிலையிலேயே குறித்த வயோதிப பெண்ணை பருத்தித்துறைப் பொலிஸார் மீட்டுள்ளனர்.
பருத்தித்துறை – கொடிகாமம் வீதியிலுள்ள துன்னாலை புளியங்கியான் – கியான்காடு மயானத்திற்கு அண்மையாக இந்த வயோதிபப் பெண் இன்று காலை காணப்பட்டுள்ளார்.
இவ்வாறு மீட்கப்பட்டவர் பருத்தித்துறை தும்பளையைச் சேர்ந்த பேரின்பநாயகம் தேவகியம்மா (வயது 61) என்பவர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது, கடந்த 3 ஆம் திகதி குறித்த பெண் தனது வீட்டில் இருந்தபோது அங்கு சென்ற சிலர் தாம் காங்கேசன்துறை பொலிஸைச் சேர்ந்தவர்கள் என்றும் விசாரணைக்காக பொலிஸ் நிலையம் வருமாறும் கூறிச் சென்றிருந்தனர்.
இந்தநிலையில் அந்தப் பெண் ஆவணங்களுடன் காங்கேசன்துறை பொலிஸ் நிலையம் செல்வதாக உறவினர்களிடம் கூறிவிட்டுச் சென்றுள்ளார்.
இவ்வாறு சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. அத்துடன் தாம் எவரையும் விசாரணைக்கு அழைக்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் அந்தப் பெண் அங்கங்கள் கட்டப்பட்டு மயங்கிய நிலையில் இன்று மீட்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளைப் பருத்தித்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.