மடுல்கலை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய புகழேந்தி அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் வழங்கப்பட்ட சீருடைகள் வழங்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.
நிகழ்வில் ஆலய பிரதம குருக்கள் சிவஸ்ரீ தர்சனகுருக்கள் மங்கள விளக்கேற்றுவதையும், அதிதியாகக் கலந்து கொண்ட சமுக சேவையாளரும் சமய தொண்டருமாகிய பீ. முத்தையா பிள்ளை மற்றும் வர்த்தகர் ஆனந்தராஜ் சீருடை வழங்குவதையும் சீருடை பெற்றுக்கொண்ட மாணவர்களையும், ஆசிரியர்களையும் படங்களில் காணலாம் (படங்கள்: மடுல்கலை நிருபர் )
ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்பார்கள். எந்தவொரு விடயமும் ஒரு கட்டத்துக்கு மேல் சலிப்பையே தரும். அது எத்தகைய சொர்க்கலோக வாழ்க்கையாக இருந்தாலும் இதுவே உலக நியதி.
அமிர்தமாகவே இருந்தாலும் கூட அதுவும் ஒருநாள் திகட்டவே செய்யும். அதேபோல தான் காதலும் காமமும் எத்தகைய இனிமையான மென்மையான சுகமான அனுபவங்களை தந்து ஆசுவாசப்படுத்தினாலும் கூட ஒரு எல்லைக்கப்பால் வெறுப்புணர்வு எமை ஆட்கொள்வதே இயல்பு.
ஆனால், சிலர் இவற்றுக்கு விதிவிலக்கானவர்களாக இருப்பார்கள். இயற்கையாகவே மனித மனமானது கூடுவிட்டுக் கூடு பாயும் இயல்பு கொண்டது. ஒன்றை விட பிறிதொன்றின் பால் கவரப்பட்டு அதனை அடைய ஏங்கித் தவிக்கும்.
இச்சமூகத்தில் ஒருசில கணவன்மாருக்கு எத்தகைய சற்குணவதி மனைவியாக அமைந்தாலும் தனக்கு பிடித்த வேறொருத்தி கண் முன்னே தோன்றுகையில் மனது சற்றுத் தடுமாறவே செய்யும்.
மனம் தடம் மாறவே எத்தனிக்கும். ஆனால் நான் இப்போது இவ்வளவு தூரம் பீடிகையெல்லாம் போட்டு கூறப்போகும் கதையில் வரும் மனைவியும் முற்றிலும் வித்தியாசமானவள். இப்படியுமொரு பெண் உலகில் இருப்பாளா என்றும் எண்ணத் தோன்றும்.
நல்ல குணாதிசயங்களைக் கொண்ட பொறுப்பான, அன்பான மணாளனை கணவனாக அடையும் பாக்கியம் பெற்றிருந்தாலும், தன்னுள்ளே தணியாதிருந்த விரச உணர்வினால் தான் சந்திக்க நேரிடும் ஆடவர்களுடனெல்லாம் குடித்தனம் நடத்தியுள்ளார் இந்தப் பெண். அந்த பெண்ணுக்கு நேர்ந்த கதியே இம்முறை பதிவு செய்யப்படுகின்றது.
ஆம். வெலிமடையைச் சேர்ந்த குறித்த பெண். நல்ல அழகான தோற்றம் கொண்டவளாக இருந்துள்ளார்.
அவளுக்கு பிறப்பிலேயே கிடைத்த இந்த அழகு காமத் தேனை உறிஞ்சிப் பருக ஆசைப்படும் நிறைய பட்டாம் பூச்சிகளுக்கு வாய்ப்பாகவே அமைந்தது. பார்ப்பவர் உள்ளம் கொள்ளை போகுமளவுக்கு அவளது வனப்பு இருந்தது .
பாடசாலைக் காலங்களிலிருந்தே தான் நினைத்ததை யார் தடுத்தாலும் கூட கேட்காமல் செய்யும் துணிவுடையவளாகவும், விளையாட்டுப் போட்டிகளில் பிரகாசித்தவராகவும் படிப்பில் கெட்டிக்காரியாகவும் இருந்துள்ளாள்.
இதனால் பாடசாலையில் எல்லோராலும் நன்கு அறியப்பட்ட பிரபலமானவராக இருந்துள்ளாள். இப்படிப் போன அவரது பாடசாலை வாழ்க்கையும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதியதோடு முடிவடைந்தது.
அத்துடன் பாடசாலைக் கல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு இல்லற வாழ்க்கைக்குத் தொடக்கப் புள்ளி வைத்துள்ளார். அநுராதபுரத்தைச் சேர்ந்த இராணுவத்தில் பணிபுரியும் ஒருவரின் மேல் காதல் வயப்பட்ட இப்பெண் அவரையே கரம்பிடித்துள்ளாள்.
இவர்களது காதல் திருமணத்துக்குச் சாட்சியாகவும் ஒரு குழந்தை பிறந்தது. அக்குழந்தை பிறந்ததையடுத்து வாழ்வின் இன்னொரு பரிணாமத்தைச் சந்தித்த அவள் குழந்தையை கவனிப்பதிலேயே தனது பெரும்பாலான நேரத்தை செலவழித்தாள்.
இவளது கணவனான இராணுவ சிப்பாய் மாதத்துக்கு ஒரு முறை கிடைக்கும் விடுமுறையில் வீட்டுக்கு வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். அவரது உத்தியோகம் அப்படிப்பட்டது.
இப்படியிருந்த சமயத்தில் இன்னொரு குழந்தைக்கும் தாயாகும் பாக்கியத்தைப் பெற்றுள்ளாள். அப்பெண் வீட்டில் கணவன் இல்லாத நிலையில் பெரும் சுதந்திரமாக இருந்துள்ளாள்.
இரு குழந்தைகளுக்கு தாயென்றே அவளை குறிப்பிட இயலாதளவுக்கு அவளது மேனியின் வனப்பும் இளமையும் மெருகேறிக்கொண்டே இருந்துள்ளது. இந்த நேரத்தில் இப்பெண்ணின் வீட்டுக்கு அருகில் வேலைசெய்து கொண்டிருந்த ஒரு இளைஞனின் கண்களை இவளது அழகானத் தோற்றம் ஈர்த்துள்ளது.
இவள் வீட்டில் தனியாக இருக்கும் போதெல்லாம் ஜன்னல் வழியாக இவளது அழகை கண்களால் பருகி இன்புற்றுள்ளான். இவளை தனதாக்கிக் கொள்ள வேண்டுமென்ற நோக்கில் பலமுறை முயற்சிகளை மேற்கொண்டுள்ளான்.
இவ்வாறு இவன் களவாக ஜன்னலில் பார்ப்பதை பார்த்த அவளுக்கு முதலில் சற்று ஆத்திரமாக இருந்தாலும், பிறகு அவளது இளமைக்குரிய உணர்ச்சிகளால் வசப்பட்டு அவன் மீது இச்சைக் கொண்டுள்ளாள்.
கணவன் இல்லாத பொழுதுகளையெல் லாம் இந்த இளைஞனுடனேயே கழித்துள்ளாள். இவர்களது இந்த தகாத உறவு நான்கு சுவருக்குள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், நாளடைவில் ஊர் மத்தியில் அம்பலமானது.
கத்தரிக்காய் முற்றினால் சந்தைக்கு வரத்தானே வேண்டும். அப்பெண்ணின் கணவன் விடுமுறையில் வீடு வரும்போதெல்லாம். ஊரார் இச்செய்தியை அவனது காதில் ஊதி வத்திவைக்க மறக்கவில்லை. இருந்தாலும் அவன் எடுத்த எடுப்பிலேயே அவள் மீது சந்தேகம் கொள்ளவில்லை. அவளுக்கு இது குறித்து அறிவுறுத்தவே செய்தான் .
“ஏய் இங்க பாரு அக்கம்பக்கத்துல எல்லாம் ஒன்ன பத்தி ஏதேதோவெல்லாம் பேசிக்கிறாங்க. ஒவ்வொருத்தரும் என்னிடமே வந்து ஒன்னப் பத்தி தரக்குறைவா பேசுறாங்க.
இவங்க எல்லாம் இப்படி பேசுறாங்கன்னு ஒன்ன நான் வெறுத் தொதுக்க மாட்டேன். ஆனாலும் நீ இப்ப ரெண்டு குழந்தைகளுக்குத் தாய்ங்கிறத மட்டும் மனசுல வச்சுக்க “
இருந்தபோதிலும் அவன் திரும்பி உத்தியோகத்தைக் கவனிக்கச் சென்றவுடன் அந்த இளைஞனோடு முன்னரைப் போலவே தனது தொடர்புகளை பேணியுள்ளாள்.
அவள் பழகும் இளைஞனுக்கு பணம் நகைகள் தேவைப்படும் போதெல்லாம் வீட்டிலுள்ள பொருட்களை விற்று அல்லது அடகு வைத்தாவது பணம் கொடுத்துள்ளாள். கடைசியில் அவளது பெரிய மகளை பாடசாலைக்கு கூட்டிச் செல்வதற்காக வாங்கிய முச்சக்கர வண்டி மட்டுமே இருந்துள்ளது.
இவள் தொடர்பு வைத்திருந்த அவ்விளைஞனின் கண்களுக்கு இந்த முச்சக்கர வண்டி பட்டுவிட்டது. உடனே அப்பெண் தனது ஆசை நாயகனின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக அதனை விற்கக்கூடத் துணிந்துள்ளாள். அதனை அவளது மூத்தமகளிடமே கூறி அவளை சமாதானப்படுத்தியுள்ளாள்.
“என் செல்லமில்ல. நமக்கு இந்த ஆட்டோ இனிமேல் வேணாம். நாம் இந்த வீட்டிலிருந்து நம்ம பாட்டி வீட்டுக்குப் போவோம்” என்று குழந்தையை சமரசம் செய்தாள்.
இப்படியே இருக்கும் பொழுது ஒருநாள் தனது மனைவிக்கும் அவ்விளைஞனுக்கும் ரகசிய தொடர்பிருப்பதை கண்ணெதிரே கண்டுள்ளான். உடனே ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற அவளது கணவன் அவளை அறைவதற்காக கை ஓங்கியுள்ளான். அவனது கையை திமிராக தட்டிவிட்ட அவள்.
“என் மீது கையை வைக்கிற வேலையெல்லாம் வேணாம். எனக்கு ஒன்ன விட இவன தான் புடிச்சிருக்கு. இனிமேலும் ஓங்கூட வாழ்ந்து நான் என்ன சொகத்தக் கண்டேன் நான் என் அம்மா வீட்டுக்குப் போறேன் “
என்று பெட்டிப் படுக்கையெல்லாம். எடுத்துக்கொண்டு தனது இரண்டு பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு அவளது அம்மாவின் வீட்டுக்குச் சென்றுள்ளாள். அங்கே சென்றவுடன் தனது பிள்ளைகளை அம்மாவின் பாதுகாப்பில் விட்டு விட்டு கொழும்பில் நகை அடவு பிடிக்கும் நிலையமொன்றில் வேலைக்குச் சேர்ந்துள்ளாள்.
தனது கணவன், பிள்ளைகளையெல்லாம் பிரிந்து வாடகையறையொன்றை யெடுத்து அதில் தனியே இருந்து வந்திருக்கிறாள். அவ்வாறான தொரு சூழலில் தான் பொலன்னறுவையைச் சேர்ந்த ஒருவருடன் காதல் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டுள்ளாள். அதன்பிறகு தான் வேலை செய்த இடத்திலிருந்தும் விலகி கொழும்பு வாழ்க்கைக்கு விடைகொடுத்துவிட்டு இருவரும் கம்பளைக்குச் சென்றுள்ளனர்.
அங்கு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து இருவரும் குடும்பம் நடத்தி வந்துள்ளனர். நோயாளிகள் பராமரிப்பு நிலையமொன்றில் இருவரும் வேலைக்குச் சேர்ந்துள்ளனர். அன்று முதல் இருவரும் மகிழ்ச்சியானதொரு வாழ்க்கையை உல்லாசமாக கழித்து வந்துள்ளனர். ஆனால் நோயாளிகள் பராமரிக்கும் நிலையத்தில் வேலைசெய்து கிடைக்கும் ஊதியம் போதாமையால் இருவருக்குள்ளும் ஒவ்வொரு நாளும் சண்டை மூண்டது.
அவர்களது காதலுறவிலும் விரிசல் ஏற்பட்டது. அப்படியிருக்கையில் ஒருநாள் இப்பெண்ணுக்கும் இவர்கள் வசித்துவந்த வீட்டுக்கருகில் வாகனங்களை பழுதுபார்க்கும் கராஜ் வைத்திருக்கும் இளைஞனுக்கும் காதல் மலர்ந்துள்ளது.
அன்று முதல் இப்பெண் இவனுடன் உல்லாச உலகில் சஞ்சரித்துள்ளாள். இது இவளின் முன்னாள் காதலனுக்குத் தெரிந்து விட அவன் இப்பெண்னை அடித்து உதைத்து எச்சரித்துள்ளான். அதன் போது ஆத்திரமடைந்த அப்பெண் “இனிமேல் எனக்கு நீயும் வேண்டாம்”
என்று அங்கிருந்தும் வெளியேறி அவ்விளைஞனுடன் கம்பளையை அண்டிய பிறிதொரு பிரதேசத்துக்குச் சென்றுள்ளாள். அங்கே இருவரும் தமது காதல் உலகில் எல்லாக் கவலைகளையும் மறந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
அப்பெண்ணுக்கே தான் எத்தனை பேருடன் வாழ்க்கை நடத்தி இருக்கிறோம் என்ற உணர்வே இருக்கவில்லை. புதிதாய் பூப்பெய்திய ஒரு உணர்வுடன் அவள் இருந்திருக்கிறாள்.
தனது பிள்ளைகளைப்பற்றியும் எந்த அக்கறையும் அவள் செலுத்தியதாகத் தெரியவில்லை. தனது வயது முதிர்ந்த அம்மாவிடம் குழந்தைகளை ஒப்படைத்து விட்டு வந்ததையே அவள் அடியோடு மறந்துவிட்டிருந்தாள்.
அத்தோடு அவள் வேலைக்குச் சென்று ஈட்டும் பணத்தையெல்லாம் அவள் புதிது புதிதாக ஏற்படுத்திக்கொள்ளும் கள்ளத் தொடர்புகளுக்காக செலவுசெய்தாள். தனது அம்மாவின் தேவைக்காகவோ அல்லது தனது குழந்தைகளின் பராமரிப்புச் செலவுகளுக்கோ கொடுக்கவில்லை. இவ்வாறிருக்கையில் அப்பெண்ணின் முன்னாள் காதலன் (பொலன்னறுவையைச் சேர்ந்தவர்) இவளை மறக்கமுடியாமல் தவித்துள்ளான்.
அவளுடன் உல்லாசமாக இருந்த காலங்களையெல்லாம் மறந்துவிடவில்லை. அவற்றை எண்ணி எண்ணி மனம் புழுங்கினான். அவளை மறுபடியும் அடையத் துடித்தான். இதற்காக அவன் ஒரு உபாயத்தைக் கையாண்டான். அப்பெண்ணுக்கு தொலைபேசி வாயிலாக அழைப்பொன்றை மேற்கொண்டான்.
“ஏய் நீ போனால் போ. அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. நீ எனக்காக அடகு வைத்த ஒரு சோடி தோடுகளை நான் மீட்டுவிட்டேன். நான் சொல்லும் இடத்துக்கு நாளை இரவு வந்தால் அதை உன்னிடமே தந்து விடுவேன். அதிலிருந்து நீ யாரோ நான் யாரோ “என்று தொலைபேசி தொடர்பைத் துண்டித்துள்ளான்.
ஆனால் அவன் மனது அவளை பழிவாங்கத் துடித்தது. தன்னுடன் வாழ மறுக்கும் அவளது கதையை முடிப்பதாக நினைத்துக்கொண்டான். அவளைப்பார்க்கச் செல்லும் முன் இரண்டு கத்திகளையும் நஞ்சு போத்தலொன்றையும் தயார்செய்து வைத்துக்கொண்டான்.
இவன் தொலைபேசியில் கதைத்த அவ்வளவு விடயங்களையும் ஒரு வரி கூட விடாமல் தனது புதிய காதலனிடம் சொல்ல அப்பெண் தவறவில்லை.
“நீ போய் தோடுகளை வாங்கி வா. ஆனால் இரவு நேரம் செல்லாதே பகல் நேரம் வருவதாக சொல்” என்று கூறியுள்ளான். இதையடுத்து மறுநாள் குறித்த இடத்துக்கு அவள் சென்றுள்ளாள். அப்போது அங்கு வந்த அவன் தன்னுடன் வந்துவிடுமாறு கூறியுள்ளான்.
அவன் எவ்வளவோ வற்புறுத்தியும் அவனுடன் செல்ல மறுத்துவிட்டாள். கட்டுக்கடங்காத வெறியை மனதில் வைத்து புதைத்திருந்த அவன் தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த இரு கத்திகளில் ஒன்றை திடீரென்று வெளியில் உருவி எடுத்து அவளது கழுத்தில் குத்தியுள்ளான்.
அவ்வாறு செய் தும் வெறி அடங்காத காரணத்தினால் இன்னும் இரண்டு மூன்று தடவைகள் கத்தியால் குத்தியுள்ளான். கத்திக்குத்துக்கு இலக்காகி அவள் கீழே சாய்ந்தவுடன் தனது காற்சட்டைக்குள் வைத்திருந்த நஞ்சை எடுத்து அருந்தி அவனும் அவளருகில் சாய்ந்துள்ளான்.
ஆனால் அவள் இறந்தாலும் இவனது உயிர் பிரிந்துவிடவில்லை. இவன் குற்றுயிராக உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த தருணத்தில் சம்பவ இடத்துக்கு வந்திருந்த பொலிஸாரின் கைகளுக்கு சிக்கியுள்ளான். அத்துடன் இந்நபர் ஏற்கனவே திருமணம் முடித்தவராவார். இவருக்கும் பிள்ளைகள் உள்ளனரெனவும் தெரியவந்துள்ளது.
கே.நிரோஷ்குமார்