மன்னார் மாவட்டம் வெள்ளாங்குளம் கணேசபுரம் கிராமத்தைச் சேர்ந்த, முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் அடையாளம் தெரியாத ஆட்களினால் புதன்கிழமை இரவு அவருடைய வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாகக் காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.
முன்னாள் விடுதலைப்புலிகள் உறுப்பினர் சுட்டுக்கொலை
விடுதலைப்புலிகளின் காவல்துறையில் பணியாற்றி, யுத்தம் முடிவுக்குவந்த பின்னர், புனர்வாழ்வு பயிற்சி பெற்றிருந்த நாற்பது வயதுடைய கிருஸ்ணசாமி நகுலேஸ்வரன் என்பவரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றார்.
எந்தவிதமான அரசியல் ஈடுபாடுகளுமற்றிருந்த இவர் மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது அந்தப் பிரதேசத்தில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.
சம்பவம் நடைபெற்ற இடத்தில் காவல்துறையினரும் இராணுவத்தினரும் பெரும் எண்ணிக்கையில் சூழ்ந்திருந்து, விசாரணைகளை நடத்தி வருவதாகவும் வெளியார் எவரையும் இறந்தவரின் வீட்டிற்குச் செல்லவிடாமல் தடுத்திருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடமேற்குக் கரையோரத்தில் மன்னார் மாவட்டத்தின் கடைசிக் கிராமப்பகுதியாகிய கணேசபுரத்தில் நடைபெற்றுள்ள இந்தச் சம்பவம் தொடர்பில் இலுப்பைக்கடவை காவல்துறையினர் புலன் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
மேசன் தொழிலாளியாக தனது வாழ்வாதரத்திற்குத் தொழில் செய்து வந்த இவர் புதன்கிழமை இரவு வீட்டிலிருந்தபோது, வீட்டை நோக்கி யாரோ கல்லெறிந்தபோது யார் என்ன நடக்கின்றது என பார்ப்பதற்காக வெளியில் வந்தபோதே அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் அவருடைய தலையில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து அவரைக் கொன்றுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவரைக் கொலை செய்தவர்கள் யார், என்ன காரணத்திற்காக, இவர் கொலை செய்யப்பட்டார் என்பதைக் கண்டறிய பல முனைகளிலும் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டிருப்பதாக காவல்துறையினர் கூறியிருக்கின்றனர்.
அனந்தியை பின்தொடர்ந்த மர்ம நபர்கள்
12-11-2014
கொழும்பில் வைத்து மோட்டார் சைக்கிளில் பயணித்த மர்ம நபர்கள் இருவர், தன்னை செவ்வாய்க்கிழமையன்று (11) பின்தொடர்ந்ததாக வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் வெளிநாட்டுத் தூதுவர்கள் இருவரிடம் தெரிவித்தேன். அத்துடன், எனக்கு தொடர்ந்து இவ்வாறான அச்சுறுத்தல்கள் நிலவி வருவதாக வட மாகாணசபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானத்திடம் பலமுறை முறையிட்டுள்ளேன் என்றும் அவர் கூறினார்.
இது தொடர்பாக அனந்தி சசிதரன் மேலும் கூறியதாவது,
செவ்வாய்க்கிழமையன்று நான் கொழும்பில் இருந்தேன். காலை முதல் மாலை வரை பலரையும் சந்தித்து உரையாடினேன். அன்றைய தினம் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரையும், நான் செல்லும் இடமெல்லாம் மோட்டார் சைக்கிளில் பயணித்த மர்ம நபர்கள் சிலர், என்னைப் பின்தொடர்ந்தனர்.
அவர்கள் மிகவும் கொடூரமான தோற்றமுடையவர்களாகவும் என்னை கொல்ல வேண்டும் என்ற நோக்குடன் காணப்படுவதையும் நான் அவதானித்தேன்.
எனது சட்டத்தரணியைச் சந்திக்க சென்றிருந்தேன். அங்கும் அவர்கள் என்னை பின்தொடர்ந்து வந்தனர். அந்த சட்டத்தரணியும் கடந்த 2 மாத காலமாக 24 மணிநேர கண்காணிப்பிலேயே இருக்கின்றார்.
மேலும், இரு நாடுகளைச் சேர்ந்த தூதுவர்களையும் நான் அன்றைய தினம் சந்தித்து பேசினேன். இந்த பின்தொடர்தல் மற்றும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் தூதரகங்களுக்கும் அறிவித்தேன். இதுபோன்ற தொடர்ச்சியான அச்சுறுத்தல் தொடர்பாக வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானத்திடம் பல தடவைகள் முறையிட்டுள்ளேன்.
வடமாகாணசபை உறுப்பினர்களில், எனக்கும் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கும் தொடர்ச்சியாக அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால், இது தொடர்பில் எந்த விதமான ஆக்கபூர்வமான நடவடிக்கையையும் வடமாகாண சபை எடுக்கவில்லை.
நாம் உண்மைகளை கதைக்கின்றோம். மக்களுக்காக பேசுகின்றோம். சர்வதேச ரீதியில் எமது பேச்சுக்கு மதிப்பு கிடைத்துள்ளது. எமக்கு வழங்கப்பட்ட பொலிஸ் பாதுகாப்புக்கள் மீளப்பெறப்பட்டு பல நாட்கள் கழிந்துவிட்டன.
இது தொடர்பாக நான் அவைத்தலைவரிடம் கேட்கும் போதெல்லாம் அவர் சிரித்தபடி பதில் சொல்கிறார். அத்துடன், அவைத்தலைவர் ஒரு தடவை மாத்திரம் பொலிஸ் திணைக்களத்திற்கு கடிதம் எழுதிவிட்டு பேசாமல் இருக்கின்றார். நாங்கள் உயிருக்கு அஞ்சவில்லை. துணிந்துதான் இங்கு வந்தோம் என அனந்தி சசிதரன் மேலும் தெரிவித்தார்.