அமெரிக்கச் செல்வாக்குக் கட்டுப்பட்டு இந்திய இராஜதந்திரம் தனது சுயமரியாதையை இழந்துள்ளதா என்ற கேள்வி இங்கே விஞ்சியுள்ளது. படை விலகலுக்குப் பின்னர் சூடு பிடிக்கவுள்ள இந்தோ- பசுபிக் விகாரத்திலும் தனது சுயமரியாதையை புதுடில்லி தக்க வைக்குமா என்பதும் சந்தேகமே–
-அ.நிக்ஸன்-
அமெரிக்காவை மையப்படுத்திய நோட்டோ படையினர் ஆப்காணிஸ்தானில் இருந்து வெளியேறியமை தோல்வியா இல்லையா என்ற விமர்சனங்களே ஐரோப்பிய மற்றும் மேற்கத்தைய ஊடகங்களில் அதிகமாக முன்வைக்கப்படுகின்றன.
சென்ற யூன் மாதம் ஜி-7 மற்றும் நேட்டோ மாநாடுகள் நடைபெற்றபோது, அங்கு ஏற்பட்ட முரண்பாடுகள், அதிருப்திகள், மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கிடையேயான இடைவெளியைப் புடம்போட்டுக் காண்பித்திருந்தன.
ஆனாலும் அதற்கு முன்னதாக டொனால்ட் ட்ரம்பின் காலத்திலேயே படைகளை விலக்குவது தொடர்பாக தலிபான் தீவிரவாதிகளுடன் அமெரிக்கா பேச்சு நடத்தியிருக்கிறது.
கடந்த ஆண்டு பெரவரி மாதம் அமெரிக்கா தலிபான்களைச் அரபு நாடான டோகா வில் (Doha) சந்தித்திருந்தது.
ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டிருந்ததாக சீநியூஸ் இந்தியா என்ற செய்தித்தளம் கூறுகின்றது.
அடுத்த 14 மாதங்களுக்குள் அமெரிக்காவை மையப்படுத்திய நோட்டோ படையினர் வெளியேற வேண்டுமென அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்தது. அல்-காய்தாவுடன் சேரக்கூடாது என்பது உள்ளிட்ட பல நிபந்தணைகளை அமெரிக்கா விதித்திருந்தது.
படைவிலகலினால் ஆப்காணிஸ்தானின் எதிர்காலம் எப்படி அமையும் என்பதைவிட இதற்குப் பின்னர் இடம்பெறப் போகின்ற பூகோள நகர்வுகள் பற்றியே இங்கு பிரதானமாக நேக்க வேண்டும். ஐந்து காரணங்களை நோக்கலாம்.
ஓன்று- இந்தோ– பசுபிக் பிராந்தியத்தில் சீனாவுடனான போட்டியில் அமெரிக்காவினால் இந்தியா தலைமையில் உருவாக்கப்பட்ட குவாட் இராணுவ அணியின் செயற்பாடுகள் இலங்கையை மையப்படுத்திய கடற் பகுதியில் தீவிரமடையும்.
இரண்டாவது- அமெரிக்காவின் பிடிக்குள் இந்தியா இன்னும் அதிகமாகச் சிக்கக்கூடிய ஆபத்துகளும் அமெரிக்காவுடன் 2016 ஆம் ஆண்டில் இருந்து 2020 ஆம் ஆண்டு வரை செய்யப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தங்களில் இருந்து இந்தியா ஒருபோதும் அவிலகமுடியாத சூழலும் உருவாகும்.
மூன்றாவது– படைவிலகல் சீனாவுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் மிகவும் கிட்டடிய தூரத்தில் அதாவது சீனாவின் வாசலில் உள்ள ஆப்காணிஸ்தான் மற்றும் அதன் அயல் அயல்நாடுகளுடனான பொருளாதார உறவுகளை மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டிய நிலமை.
நான்காவது- ரஷியாவுக்கும் தலிபான்களினால் ஆபத்துக்குள் ஏற்படக்கூடிய நிலமை.
ஐந்தாவது- நேட்டோ அணியில் இந்தியா இல்லாவிட்டாலும் இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவுடன் ஏற்பட்ட உறவினால் ஆப்காணிஸ்தானில் இந்தியா மேற்கொண்ட அனைத்து அபிவிருத்தித் திட்டங்களுக்கும், முதலீடுகளுக்கும் ஆபத்து.
இந்த ஐந்து காரணங்களையும் ஆராய்ந்தால், முதலில் அமெரிக்காவுக்கு இது பெரிய பாதிப்பல்ல.
ஏனெனில் ஆப்காணிஸ்தானில் நேட்டோ படைகள் கடந்த இருபது ஆண்டுகளாக நிலை கொண்டிருந்த காலங்களில் அதிகளவு செலவிட்டது அமெரிக்காதான்.
ஐரோப்பிய நாடுகள் தத்தமது படையினருக்காக அதிகளவு செலவுகளை மேற்கொள்ளவில்லை. இதுபற்றிய கவலையை ஜோ பைடன் கடந்த யூன் மாதம் பிறேசிலில் நடைபெற்ற நேட்டோ மாநாட்டில் வெளியிட்டிருந்தார்.
ஆகவே நேட்டோ படைகளை வெளியேற்றியதன் மூலம் அமெரிக்கா, ஜராப்பிய நாடுகளுக்கும் சீனாவுக்கும் மறைமுகமான செய்தியைக் கொடுத்திருக்கிறது.
ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் நட்பு நாடுகளாக இருந்தாலும், நேட்டோவின் செயற்பாடுகளுக்காக அமெரிக்க நிதியை அதிகளவில் அவர்கள் நம்பியிக்கின்றனர்.
ஆகவே எதிர்காலத்தில் நேட்டோ எப்படிச் செயற்பட வேண்டுமென்பதை அமெரிக்கா அவர்களுக்கு உணர்த்தியிருக்கின்றது.
பில்லாடன் கொல்லப்பட்டுள்ள நிலையில் இனிமேல் ஆப்காணிஸ்தானில் அமெரிக்கப்படைகள் தேவையில்லை என்று ஜோ பைடன் வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டுமிருக்கிறார்.
எனவே அமெரிக்க இராஜதந்திர நோக்கில் அமெரிக்க நிலைப்பாடு சரியென்றே கூறலாம். கூடுதல் நிதி இழப்புகளுடன் கூடிய விடுதலையாகவே அமெரிக்கா கருதுகின்றது.
வியட்நாமில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியது போன்றதொரு தோல்வியல்ல என அமெரிக்க இராதந்திரிகள் கூறுகின்றனர்.
ஆகவே முதலாவது காரணத்தின்படி நோக்கினால் அமெரிக்கா இந்தோ- பசுபிக் விவகாரத்தில் இனிமேல் கூடுதல் கவனம் செலுத்தும் என்பதுடன்,
இலங்கையை மையமாகக் கொண்ட வடக்குக் கிழக்குத் தமிழர் தாயகப் பிரதேசங்கள் மற்றும் கடல் பகுதிகளிலும் தமது கவனத்தை அமெரிக்கா கூடுதலாகத் திருப்பக்கூடிய வாய்ப்புகள் உண்டு.
இந்த இடத்திலேதான் சீனாவின் இராஜதந்திரத்திற்கு இரட்டிப்பு வேலைப்பளு ஏற்பட்டிருக்கிறது.
ஏனெனில் ஆப்காணிஸ்தானில் இருந்து நேட்டோ படைகள் வெளியேறினாலும், தலிபான்கள் 2001 ஆம் ஆண்டு நிலைப்பாட்டில் இருந்து மாறி அமெரிக்கச் சார்பு நிலை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் இல்லாமலில்லை.
இது குறித்துச் சீனா அதிகளிவில் உணருகின்றது. ஆகவேதான் அவசர அவசரமாக தலிபான் போராளிகளின் முக்கிய தலைவர்களை பீஜிங்குக்குசு அழைத்துச் சீனா உரையாடியிருக்கிறது.
ஏனெனில் சீனாவின் சின்சியாஞ் மாநிலத்தில் வாழும் சுமார் 20 மில்லியன் உய்குர் மொழி பேசும் முஸ்லிம் மக்கள் சீன அரசினால் இன அழிப்புக்கு உள்ளாவதாக அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் குற்றம் சுமத்துகின்றன.
ஆப்கானிஸ்தான் சீனாவுக்கு மிக அருகில் உள்ளது. இதனால் சீனாவுக்கு எதிரான இஸ்லாமியக் குழுக்கள் ஆப்கானிஸ்தானைத் தளமாகப் பயன்படுத்தும் ஆபத்து இருக்கிறது. அதனால் தாலிபன்களுடன் பேச்சு நடத்த வேண்டிய கட்டாயச் சூழல் சீனாவுக்கு உண்டு.
அதேபோன்று சீனாவின் நட்புடானா ரஷியாவும் தலிபான்களை அனைக்க வேண்டிய நிர்பந்தம் உருவாகியுள்ளது.
ஏனெனில் ரஷியாவிலும் இஸ்லாமிய விரோத செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. அத்துடன் ரஷியா சோவியத் யூனியனாக இருந்த 1980 களில் ஆப்காணிஸ்தானில் தனது படைகளை நிறுத்தி பெரும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருந்தது.
1970-களின் இறுதியில் ஆப்கானிஸ்தானில் சோவியத் ஒன்றியத்தின் செல்வாக்கைத் தடுப்பதற்காக அமெரிக்கா, சவுதியரேபியா, துருக்கி, பிரித்தானியா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் ஆயுதங்களைக் கொடுத்தன. இதனாலேயே சோவியத் யூனியன் படைகள் ஆப்காணிஸ்தானில் இருந்து வெளியேற வேண்டிய நிலை உருவானது.
ஆகவே அமெரிக்கா தலிபான்களுடன் 2001 ஆம் ஆண்டு போர் நடத்தியிருந்தாலும் 2020 ஆம் ஆண்டு உருவான புதிய ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்கா மீதான குறைந்தபட்ச நம்பிக்கை தலிபான்களுக்கு உருவாகலாம்.
அவ்வாறான சந்தர்ப்பத்தில் சீனாவும் ரஷியாவும் எதிர்காலத்தில் பாரிய விளைவுகளை எதிர்நோக்கக்கூடும். அது சீனாவின் பொருளாதார விரிவாக்கத்துக்கும் பாதிப்பை உருவாக்கலாம். சீனாவின் அதீத வளர்ச்சிக்குக் குந்தகம் ஏற்படுத்துவதுதான் அமெரிக்காவின் பிரதான நோக்கம்.
அமெரிக்காவின் இத் தந்திரோபாயத்தை அறிந்த நிலையிதான் ஆப்காணிஸ்தானுடன் சீனா நட்புறவு கொள்ள முற்படுவதை சீனாவின் குளோபல் ரைமஸ் எச்சரித்துள்ளது.
அதாவது ஆப்கானிஸ்தான் ‘வல்லரசுகளின் கல்லறை’ என்று வர்ணித்துள்ளது. அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் ஆகிய நாடுகளைப் போன்று படுகுழியில் விழுந்துவிடக்கூடாது என்று குளோபல் ரைம்ஸ் வெளியிட்ட ஆசரியர் தலையங்கம் சீன அரசை எச்சரிக்கை செய்துள்ளது.
இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் தமது ஆதிக்கத்தைச் செலுத்தி, ஈராக் குவைத் ஆகிய நாடுகளின் கரையோரத்தில் இருந்து பாரசீக வளைகுடாவினூடாகவும் அதனுடைய குறு நீரிணையான கோமூர்ஸ் நீரிணையூடாகவும் அரபிக் கடல் மற்றும் ஈழத்தமிழர்களின்; மன்னார். வளைகுடா, கிழக்கு மாகாண கடற்பகுதி வழியாகவும் இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவுகளைத் தழுவி மலாக்கா நீரிணையூடாகத் தென் சீனக் கடலை சென்றடையும் பாதையை அமைக்கவுள்ள சீனாவின் திட்டத்தை முறியடிப்பதே அமெரிக்காவின் நோக்கம்.
ஆகவே சீனாவின் கவனத்தை ஆப்காணிஸ்தான் பக்கம் திருப்தி சீனாவின் நட்பு நாடான ரஷியாவையும் குழப்பிவிடுவதன் மூலமாக, இந்தோ- பசுபிக், தென் சீனக் கடல் பிரதேசங்களின் ஆதிக்கத்தைச் செலுத்தலாமென அமெரிக்கா கருதியுள்ளது போலும்.
இங்கே ஐந்தாவது காரணம் கேள்வியோடு அமைந்துள்ளது. அதாவது இந்தியா ஏன் இதற்குள் சிக்கிக் கொண்டது என்பதுதான்.
இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தைத் தடுக்க அமெரிக்காவுடன் கூட்டுச் சேர்ந்தால். நோட்டோ இராணுவ அணியில் உறுப்பு நாடாக இல்லாத நிலையிலும், அமெரிக்கச் செல்வாக்கினால் ஆப்காணிஸ்தானில் அதிகளவு முதலீடுகள், அபிவிருத்திகளைச் செய்து இன்று மாட்டிக்கொண்டது இந்தியாதான்.
ஈழத்தமிழ் மக்களின் அரசியல் விடுதலை குறித்த விவகாரத்தில் சிங்கள ஆட்சியாளர்களுடன் இந்தியாவுக்கு ஏற்பட்ட இராஜதந்திரத் தோல்வி போன்று ஆப்காணிஸ்தானிலும் இந்தியாவுக்கு நடந்த கதியை ஒப்பிடலாம்.
இலங்கை சிறிய நாடாக இருந்தாலும் ஈழத்தமிழர் விரோதப் போக்கினால் சிங்கள ஆட்சியாளர்களுக்கு விசுவாசமாகவும், அவர்களுக்கு விட்டுக் கொடுத்து அல்லது அவமானம் ஏற்பட்டாலும் அதனைப் பொருட்படுத்தாமல் இலங்கையோடு இந்தியா ஒட்டுறவாடி வருகின்றது.
ஆனால், இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் சீனாவை எதிர்க்கத் திராணியற்ற நிலையில், அமெரிக்காவுடன் இந்தியா கூட்டுச் சேர்ந்தது என்பது கண்கூடு. அத்துடன் அமெரிக்கா வல்லாதிக்க நாடு என்பதாலும், உலக அதிகாரம் அதன் கையில் உள்ளதாலும் சீனாவை எதிர்க்க அமெரிக்காவுடன் கூட்டுச் சேரலாமென இந்திய இராஜதந்திரம் நம்பியுமுள்ளது.
ஆனால் அமெரிக்காவை நம்பி ஆப்காணிஸ்தானில் கால்பதித்துத் தற்போது எதுவுமே செய்ய முடியாத நிலையில் நிற்பது போன்றதொரு நிலைதான், இந்தோ- பசுபிக் பிராந்திய விவகாரத்திலும் இந்தியாவுக்கு ஏற்படலாம்.
ஆப்காணிஸ்தானில் இருந்து இந்தியத் தூதுவர் வெளியேறியதும் தலிபான்களுக்கு இந்தியா மீது கோபம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு பொருட்கள் ஏற்றுமதி செய்வதற்கும், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்வதற்கும் தடை விதித்துள்ளனர்.
இந்தியாவில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு சர்க்கரை, தேயிலை, கோப்பி, மசாலா பொருட்கள், துணி வகைகள், தொழில்நுட்ப சாதனங்கள் போன்றவை ஏற்றுமதி செய்யப்பட்டன. ஆப்கானிஸ்தானில் இருந்து பழவகை உணவு பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன. இப்போது தலிபான்கள் இந்தியாவுக்கான ஏற்றுமதி, இறக்குமதிக்கு தடை விதித்து இருக்கிறார்கள் என்று இந்திய ஏற்றுமதி கூட்டமைப்பின் பணிப்பாளர் ஜெனரல் அஜய் காய் கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன.
அதேபோல மூவாயிரத்து 800 கோடி அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இந்தியாவில் பயன்படுத்தப்படும் உலர் பழங்களில் 80 சதவீதம் ஆப்கானிஸ்தானில் இருந்துதான் வந்தன. தலிபான்களின் தடையால் இனி அவை அங்கிருந்து வராதென அவர் கூறினார்.
அத்துடன் 400 நலத்திட்டங்களுக்கு உதவி செய்யப்பட்டுள்ளன. 20 வருடங்களில் கிட்டத்தட்ட மூன்று பில்லியன் டொலர் செலவிட்டுள்ளது.
தண்ணீர் பற்றாக்குறைக்காக இரண்டாயிரும் கோடி செலவில் சல்மா அணைத்திட்டம் செய்யப்படடது. 42 மெகாவாட் மின்சாரம் ஹீரட் நகருக்கு அருகே உள்ள பல்வேறு பகுதிகளுக்கு மின்சார வசதியை உண்டாக்கி கொடுக்கப்பட்டுள்ளது.
ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ஆப்காணிஸ்தான் பாராளுமன்றம் அமைக்கப்பட்டு 2015 இல் திறந்து வைக்கப்பட்டது. ரஞ்-டெலரம் நெடுஞ்சாலை இந்திய உதவியோடு அமைக்கப்பட்டுள்ள முக்கிய திட்டமாகும். 218 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த வீதி, ஈரான் எல்லையில் இருந்து ஆப்கானிஸ்தானின் பல்வேறு முக்கிய பகுதிகளை இணைக்கிறது.
அதுமாத்திரமல்ல இந்திய முதலீட்டு நிறுவனங்களும் அங்கிருந்து வெளியேறும் அவலம் ஏற்பட்டுள்ளது.
ஆகவேதான் அமெரிக்கச் செல்வாக்குக் கட்டுப்பட்டு இந்திய இராஜதந்திரம் தனது சுயமரியாதையை இழந்துள்ளதா என்ற கேள்வி இங்கே விஞ்சியுள்ளன. படை விலகலுக்குப் பின்னர் சூடு பிடிக்கவுள்ள இந்தோ- பசுபிக் விகாரத்திலும் தனது சுய மரியாதையை டில்லி தக்க வைக்குமா என்பதும் சந்தேகமே.
அ.நிக்ஸன்-