தமிழ், தமிழர்கள் என்ற உணர்வு மீண்டும் தற்போது தமிழகத்தில் எழுச்சிபெற தொடங்கியுள்ளது.
மத்திய அரசுக்கு தலையாட்டியாக இருக்கும் எடப்பாடி, பன்னீர் தலைமையிலான தற்போதைய தமிழக அரசை வீழ்த்தி புதிய அரசு ஒன்றை உருவாக்க வேண்டும் என்பது இன்றைய காலத்தின் தேவை என்று எதிர்க்கட்சிகள் திரைபிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைவரதும் ஒரே குறிக்கோளாக மாறியுள்ளது.
மோடி இருக்கும் வரை எங்கள் ஆட்சியை யாரும் கலைக்க முடியாது. அவர் எங்களை காப்பாற்றுவார் என்று அதி.மு.க. அமைச்சர்கள் பகிரங்கமாக கருத்து தெரிவித்து வந்தாலும் ஆட்சியாளரை விட மக்கள் மாபெரும் சக்தி என்பது வரலாறு….
ஜெயலலிதா இருக்கும் வரை தமிழகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மத்திய அரசின் எந்த திட்டமும் தமிழ்நாட்டுக்குள் நுழைய முடியவில்லை.
பா.ஜ.க. வினால் நுழைய முடியாத இரும்புக் கோட்டையாகவே தமிழகம் இருந்தது. ஆனால், அவரது மறைவு அத்தனையையும் தலைகீழாக மாற்றிவிட்டது.
அண்மைக்காலமாக தமிழகத்தில் நடைபெறும் நிகழ்வுகள் மக்களை பெரும் பாதிப்படைய செய்துள்ளதோடு புதிய தலைமையின் தேவைப்பாடு என்பது இன்றியமையாததாகிவிட்டது
ஜெயலலிதா மறைவு, கருணாநிதியின் அரசியல் ஓய்வு என்பனவற்றால் தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பும் வகையில் ரஜினியும், கமலும் அரசியலில் குதிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
ஆண்டவன் கட்டளை இட்டால் வருவேன் என ரஜினி கூறினாலும் எப்போது களம் இறங்குவார் என்று யாருக்கும் தெரியாது... ஆயினும் ரஜினி களம் இறங்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அரசியல் தொடர்பில் அதிரடி கருத்துகளை கூறி மக்களை தன் பக்கம் ஈர்த்த கமல் தனது புதிய கட்சி பற்றி அறிவிப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஆனால், அதற்கான எந்த பணிகளும் நடைபெறாததால், அவரது அரசியல் பற்றி மக்கள் சற்று சலிப்பான மனநிலைக்கு வந்துள்ளனர்.
போர் வரும்வரை காத்திருக்கும் ரஜினியும், நூறு நாட்களில் தேர்தல் வைத்தாலும் போட்டியிடத் தயாராக இருக்கும் கமலும் ஏற்கனவே தமிழக அரசியலுக்குள் தங்களது கால்களை ஆழப்பதிக்க முயற்சித்துக்கொண்டிருக்கும் போது அவர்களைத் தாண்டிய வெளிச்சமும், தைரியமாக பிரச்சினைகளைப் பேசுகிறார் என்ற பிம்பமும் ‘மெர்சல் பிரச்சினையின் மூலம் விஜய்க்கு பரிசாக கிடைத்துள்ளது.
விஜய்க்கு இருக்கும் அரசியல் நோக்கத்துக்கு இது வழிசமைத்து கொடுத்துவிட்டது என்றே கூறலாம். சில உண்மைகளை நாம் வெளிப்படையாக பேசினால் எதிர்ப்புகள் வரக் கூடும் என பேசவே தயங்குவோம்.
ஆனால் எதிர்ப்புகள் வருவதே நம்மை வலுவடைய செய்யும் என்பதற்கு உதாரணமாகிவிட்டது விஜயின் மெர்சல்.
இந் நிலையில், ரஜினி, கமல் இருவரையும் “மெர்சல் ஆக்கும் வகையில் புதிய எதிர்பார்ப்பை “விஜய் உருவாக்கி இருக்கிறார்.
“மெர்சல்” படம் வெளியான முதல் நாளே அரசியலில் தீ பயங்கரமாக பற்றி எரியத் தொடங்கி விட்டது. மத்திய அரசை தாக்கும் வகையில் படத்தில் வரும் வசனங்கள் இருப்பதாக தகவல்கள் பரவியதும் ‘மெர்சல்’ பற்றி மக்களிடம் ஒருவித எதிர்பார்ப்பு உருவாகியது.
டிஜிட்டல் இந்தியா பற்றியும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களை தாக்கிப் பேசும் வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன.
“டி.வி.யும் மிக்சியும் இலவசமாகக் கொடுக்கும் அரசால், ஏன் மருத்துவம் தர முடியாது?”, “7 பெர்ஸன்ட் ஜி.எஸ்.டி. வாங்கும் சிங்கப்பூர் இலவச மருத்துவம் வழங்கும் பொழுது, 28 பெர்ஸன்ட் வாங்கும் இந்தியா ஏன் மருத்துவ சேவையை இலவசமாகக் கொடுப்பதில்லை?”,
“மருத்துவத்துக்கு பன்னிரெண்டு பெர்ஸண்டாம்…பல தாய்மாரோட தாலியறுக்குற சாராயத்துக்கு ஜி.எஸ்.டி. இல்லயாம்”, “ஒரு அரசாங்க மருத்துவமனையில ஒட்சிசன் சிலிண்டர் இல்ல.
அதுக்கு காரணம் ரெண்டு வருஷமா சப்ளை பண்றவங்களுக்கு பணம் கொடுக்கலையாம். இன்னொரு மருத்துவமனையில இன்குபேட்டர்ல வச்சிருந்த குழந்தையை பெருச்சாளி கடிச்சது”, என்று பேஸ்புக்கிலும், வாட்ஸ்ஆப்பிலும் பல நாட்களாக வலம் வந்த பிரச்சினைகளைத் தான் வசனங்களாகப் பேசியுள்ளார் விஜய்.
ஆனாலும், இத்தனை நாட்களாக தனித்தனியாக பேசப்பட்டது, திரைப்படம் என்னும் வெகுஜன ஊடகத்தில், ஒரு பிரபலமான நடிகரால் பேசப்பட்டதால் கைதட்டல் பெற்றது.
ஒரு முதல்வரின் மரணத்தையே மர்மமாக வைக்கும் மருத்துவமனைகளைப் பார்த்த மக்களுக்கு, பணம் பிடுங்கும் சில மருத்துவமனைகளின் மீதான கோபமே அந்தக் கைதட்டல். மருத்துவத்தை வியாபாரமாக ஆக்கியிருக்கும் சில மருத்துவர்களையும், நவீன மருத்துவமனைகளின் நடைமுறைகளையும் விமர்சிக்கும் காட்சியும் வசனங்களும் இருந்தன.
அதற்கு சில மருத்துவர்களும் எதிர்ப்பை தெரிவித்தனர். ஆனால், மக்களின் ஆதரவு விஜய் பேசும் வசனங்களுக்கு கிடைத்துவிட்டது. மொத்தத்தில் ‘மெர்சல்’ படம் நடிகர் விஜயின் அரசியல் உலக பிரவேசத்துக்கு மிக வலுவான அடித்தளத்தை அமைத்து கொடுத்துள்ளது.
“ஒரு குழந்தை பிறக்கணும்னா 10 மாசம். ஒரு தலைவன் உருவாக ஒரு யுகம்” என்ற விஜயின் வசனம் இதை உறுதிப்படுத்தியுள்ளது. எனவே விஜய் அரசியலுக்கு வருவாரா என்ற எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.
நடிகர் விஜய்க்கு சினிமா மட்டுமல்ல…. அரசியலிலும் ஒரு கண் உண்டு. அவர் செய்து வரும் நலத்திட்ட உதவி நிகழ்ச்சிகளை நன்கு உன்னிப்பாக கவனித்து வருபவர்களுக்கு இது தெள்ளத் தெளிவாகப் புரியும்.
அரசியல் மீதான தனது ஆசையை, விருப்பத்தை 2009ஆம் ஆண்டிலேயே விஜய் வெளிப்படையாக கூறி விட்டார். புதுச்சேரியில் நடந்த ஒரு விழாவில் அவர் உரையாற்றிய போது, அவர் அரசியலுக்கு வருவேன் என்றார்.
இலங்கைத்தமிழர் பிரச்சினை, காவிரி நதி நீர் பிரச்சினை, ஜல்லிக்கட்டு பிரச்சினை, கதிராமங்கலம் பிரச்சினை, நாணயத்தாள் செல்லாது என்ற அறிவிப்பு உள்ளிட்ட ஒவ்வொரு முக்கிய பிரச்சினைகளின் போதும் விஜய் தனது கருத்தையும் குரலையும் மிகத் தெளிவாக வெளிப்பட செய்தார்.
இவை அவரிடம் உள்ள அரசியல் ஆர்வத்தை வெளிப்படுத்தின. ராகுல், மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்களை கடந்த காலங்களில் அவர் சந்தித்து பேசியபோது விஜய் மீதான அரசியல் பார்வை அதிகரித்தது. இன்று ‘மெர்சல்’ விஜயின் அரசியல் பிரவேச எதிர்பார்ப்பை உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளது..
ஏற்கனவே ‘கத்தி’ படத்தில், விவசாய பிரச்சினையும், 2ஜி ஊழலும் வசனங்களாகப் பேசப்பட்டன. ஆனால் அது இந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை, கவனத்தை ஈர்க்கவில்லை என்று தான் சொல்லவேண்டும். படம் வெளிவந்த அடுத்த நாள், பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், இந்த வசனங்களைக் கண்டித்து, நீக்க வேண்டும் என்று கூறினார்.
பின்னர், பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா, ‘மெர்சல்’ பட வசனங்களை விமர்சிக்கும் பொழுது, இன்னும் ஆழ்ந்து சென்று ‘ஜோசப் விஜய்’ என்று, அதிகம் அறியப்படாத, பேசப்படாத, விஜயின் பெயரால் குறிப்பிட்டு, மதத்தால் அடையாளப்படுத்தினார்.
இந்த இரண்டும் நிகழ்ந்த பின்னர் தான், ஒரு வழக்கமான ‘ஷங்கர்’தனமான வணிக படத்தின் வசனங்கள் இவ்வளவு தூரம் விவாதிக்கப்பட்டன. எப்பொழுதும் விஜய் ரசிகர்களால் நிறையும் முதல் வாரத் திரையரங்குகள், பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தன. #மெர்சல்vsமோடி (#mersalvsmodi) என்ற பேச்சு சமூக வலைத்தளங்களில் பரவியது.
ரஜினி முதல் ராகுல் வரை மெர்சலுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளனர். தேசிய ஊடகங்கள் விவாதித்தன. ஒரு வாரத்தின் பிறகும் படத்திற்கு கூட்டம் அதிகரித்திருக்கிறது.
இத்தனைக்கும் காரணம், மெர்சல் வசனங்களை எதிர்த்தவர்கள். அவர்கள் எதிர்ப்பதை ஆதரிக்க இப்படி ஒரு அலை ஏற்படும் அளவுக்குதான் இருக்கிறது அவர்களின் நிலை. இன்னும் ஆழ்ந்து யோசித்தால், எதிர்த்ததன் மூலம், தமிழக பா.ஜ.க., விஜய்க்கு பிரச்சினை கொடுத்திருக்கிறதா, அல்லது உதவியிருக்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது.
மெர்சலில் ஆளும் பா.ஜ.க.வின் திட்டங்கள் தவறாக விமர்சிக்கப்படுவதாக தமிழக பா.ஜ.க. வினர் குரல் கொடுத்ததுமே… விஜய்க்கு ஆதரவு குரல்கள் அதிகரித்தன. ராகுல் காந்தியின் ஆதரவு மெர்சலை இந்திய அளவில் பேசுபொருளாக மாற்றியது. இதனை தொடர்ந்து பல அரசியல் தலைமைகள் விஜய்க்கு ஆதரவாக தங்களது கருத்தை பதிவு செய்து வருகின்றன.
கமல், நேரில் சந்தித்து விட்டார்… ரஜினி ட்வீட் போட்டுவிட்டார்… விஷால் பேட்டியளித்துவிட்டார்.. முழுத்திரையுலகமும் மெர்சலுக்கும் விஜய்க்கும் ஆதரவாக நிற்கிறது.
இது எப்படி நிகழ்ந்தது? “சென்னையை விட சின்ன நாடான சிங்கப்பூர்… தனி நாடாக உருவான போது எப்படி இருந்தது…? இப்பொழுது எப்படி இருக்கிறது…நமது நாட்டில் ஏன் இது சாத்தியமில்லை?”, என்று பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் ‘அந்நியன்’ கேள்வியெழுப்பியபொழுது, கொஞ்சம் சிந்திப்பவர்கள் எல்லோருமே கோபப்பட்டனர், கேலி பேசினர், சிங்கப்பூருடன் இந்தியாவை ஒப்பிடுவது அபத்தமென்று.
இப்பொழுது, “7 பெர்ஸன்ட் ஜி.எஸ்.டி. வாங்கும் சிங்கப்பூர் இலவச மருத்துவம் வழங்கும் பொழுது, 28 பெர்ஸன்ட் வாங்கும் இந்தியா ஏன் மருத்துவ சேவையை இலவசமாக அளிப்பதில்லை?”, என்று ‘மெர்சல்’ விஜய் கேட்டபொழுது, ஒப்பீடுகள் ஏதுமின்றி கைதட்டல் பெற்றது.
அந்த வசனங்களை எதிர்த்தவர்களுக்கு எதிராக, மெர்சலுக்கு ஆதரவாக பேரலை கிளம்பியுள்ளது. ஏனெனில், இந்த முறை பேசப்பட்ட விடயமும், அதை எதிர்த்த கட்சியும் மக்களுக்கு ஏற்படுத்திய பாதிப்பு அப்படி. ஆம், எதிரிகள் ஜி.எஸ்.டி.யும், பா.ஜ.க.வும் என்பதால், மெர்சலுக்கான ஆதரவு யாருமே எதிர்பார்க்க முடியாத அளவு எழுந்துள்ளது.
தனது ஐம்பதாவது படமான ‘சுறா’வில் தன் மக்களை நேசிக்கும் இளைஞன், மீனவ சமூகத்தின் மீட்பராக, தலைவராக உருவாகுவதாக நடித்திருந்தார் விஜய். அந்தப் படம் தோல்வியடைந்தது.
சுறா வெளியீட்டுக்கு முன்னர் தான் தனது ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைத்து ‘விஜய் மக்கள் இயக்கமாக மாற்றினார். பின்னர் சிறிய இடைவெளிக்குப் பிறகு ‘தலைவா’வில் மும்பைத் தமிழர்களின் தலைவனாக வந்தார். தலைவரற்ற ஒரு மக்கள் கூட்டத்திற்கு, இவர் தலைவராகப் பொறுப்பேற்க வேண்டிய தருணம் வருவதாகப் படம் உருவாக்கப்பட்டது.
டைம் டு லீட் (‘Time to Lead’) என்று வசனம் கொடுக்கப்பட்டது. அப்போதைய அ.தி.மு.க. ஆட்சியாளர்களை இது உறுத்த, ‘டைம் டூ வெளியீடே’ தள்ளிப் போனது. அதற்கு முந்தைய 2011 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க.வை ஆதரித்து, அதன் வெற்றிக்குத் தன் ரசிகர்களை அணிலாக உதவச் செய்தும் விஜய்க்கு இந்த நிலை ஏற்பட்டது.
இப்படி தள்ளிப் போனது விஜயின் ‘தலைவா’ திட்டம். பின்னர், கத்தியில் விவசாயிகள் பிரச்சினை, ‘தெறி’யில் சிறுசேரியில் ஐ.டி. பெண் கொல்லப்பட்டது, ‘பைரவா’வில் கல்விக் கொள்ளை, ‘மெர்சலில் மருத்துவக் கொள்ளை, ஜி.எஸ்.டி. என மக்களை நேரடியாக பாதிக்கும் பிரச்சினைகள் அனைத்தையும் தன் படங்களில் தொட்டு, அரசியலை நோக்கிய தன் அடிகளைப் பொறுமையாக, ஆனால் அழுத்தமாக வைக்கிறார்.
கலைஞர், எம்.ஜி.ஆர். காலத்தில் திராவிடமும் விஜயகாந்த் காலத்தில் தேசப்பற்றும் பேசப்பட்ட தமிழ் திரைப்படங்களில், இன்று தமிழுணர்வு பேசினால் தான் எடுபடும் என்பதை உணர்ந்து ‘ஆளப் போறான் தமிழன்’ பாடல், நம் பாரம்பரிய வேட்டி பற்றிய பெருமித வசனம் என சரியாக சேர்க்கப்பட்டிருந்தது. இளைய தளபதி, தளபதியாகவும் மாறியிருந்தார்.
தனது மன்றத்தை ‘விஜய் மக்கள் இயக்கமாக’ 2009 ஆம் ஆண்டு மாற்றி, மாவட்டம், வட்டம் அளவு வரை பலப்படுத்தி வருகிறார். அரசியல் அனுபவமுள்ள புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ. வான ‘புஸ்ஸி’ ஆனந்தை தன் மக்கள் இயக்கத்தின் தலைவராக நியமித்தார்.
ஆரம்பத்தில் தி.மு.க. வட்டாரத்தில் நெருக்கமாக இருந்தார் விஜய். உதயநிதி ஸ்டாலின், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடித்தார். அந்த உறவில், 2006 ஆம் ஆண்டு, டில்லியில் நடந்த விழாவில், பொங்கல் சிறப்பு தபால் தலையை அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட விஜய் பெற்றுக் கொண்டார், தயாநிதி மாறன் உடனிருந்தார்.
பின்னர் 2009 ஆம் ஆண்டில் ஒரு நாள் திடீரென்று காங்கிரஸ் இளைஞர் அணி பொறுப்பாளராக இருந்த ராகுல் காந்தியை சந்திக்க டில்லி சென்றார்.
இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், அப்பொழுது கட்சிக்கு இள ரத்தம் பாய்ச்ச ராகுல் உழைத்துக்கொண்டிருந்ததால், அரசியல் ஆலோசனையாக இருக்கலாம் என்றும் கருதப்பட்டது.
விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனும் தகவல்களை வெளியிடாமல் சஸ்பென்ஸ் காத்தார். பின்னொரு நாள் இது பற்றி ராகுலிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்ப, “இளைஞர் காங்கிரஸில் சேர விரும்பினார் விஜய். ஆனால், அதற்கான வயதை அவர் தாண்டிவிட்டார்” என்று கூறி விடயத்தை ஒன்றுமில்லாமல் ஆக்கினார் ராகுல்.
திரைப்பட வர்த்தக விடயங்களால், தி.மு.க. நட்பிலிருந்தும் விலகி, காங்கிரஸ் கிசு கிசுவும் பொய்யாகி இருந்த நிலையில், 2011 ஆம் ஆண்டு தேர்தலில் ஜெயலலிதாவை சந்தித்து, விஜய் மக்கள் இயக்கத்தின் ஆதரவைத் தெரிவித்தார் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் அந்தத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்ற பின் விஜயும் அவரது தந்தையும் இணைந்து சென்று வாழ்த்துத் தெரிவித்தனர்.
வெளியே வந்து செய்தியாளர்களிடம், “அ.தி.மு.க.வின் வெற்றிக்கு ராமனுக்கு அணில் உதவியது போல் நாங்கள் உதவினோம் என்பதில் மகிழ்ச்சி”, என்று விஜய் தெரிவித்ததுடன் முடிந்தது அ.தி.மு.க.வுடனான உறவு. தயாரிப்பாளர் சங்கத்திலும் எஸ்.ஏ.சந்திரசேகரனின் பலம் குறைந்தது.
பின்னர் நிகழ்ந்தது தான் ‘தலைவா’ பிரச்சனை. 2014 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் மோடியின் விருப்பத்தின் பேரில், கோயம்புத்தூரில் அவரைச் சந்தித்தார் விஜய். கடைசியாக மெர்சல் பட வெளியீட்டில் ஏற்பட்ட தடைகள் தொடர்பாக தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தார்.
பணமதிப்புநீக்க நடவடிக்கை, ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ரகசியமாகக் கலந்துகொண்டது என்று, இப்படி பல ஆண்டுகளாகவே திரைப்படங்களிலும், திரைப்படங்களுக்கு வெளியிலும் அரசியலுடனேயே விஜய் நடந்து வந்த நிலையில் தற்போது பா.ஜ.க. வினர் எச்.ராஜா குறிப்பாக தெரிவித்த எதிர்ப்பு, இந்திய அளவில் கவனத்தையும் ஆதரவையும் மெர்சலுக்கும் விஜய்க்கும் பெற்றுக் கொடுத்திருக்கிறது. ஒரு சாதாரண சினிமா, கழகக் குரலாகவும், கருத்து சுதந்திரப் போராகவும் பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில், ஆரம்பத்திலிருந்தே ஆண்டாண்டு காலமாக களத்திலிருந்து செயற்படுபவர்கள் அடையாத புகழையும் வெளிச்சத்தையும், திரைப்படங்களில் நடித்தவர்கள் எளிதில் பெற்றுவிடுவது நிகழ்ந்து வருகிறது.
எம்.ஜி.ஆர். இதற்கு சிறந்த உதாரணமென்றாலும், அப்படி சினிமாவிலிருந்து வந்தவர்கள் அனைவருமே வெற்றியும் பெறவில்லை. சிவாஜியிலிருந்து பாக்யராஜ் வரை பல உதாரணங்கள் உண்டு. என்றாலும், மெர்சல் படத்தில் பேசப்பட்ட பிரச்சினைகள் அனைத்தையும் தொடர்ந்து பேசி வரும் சீமான், திருமுருகன் காந்தி போன்றோரின் செயற்பாட்டைத் தாண்டிய தேசிய வெளிச்சத்தைப் பெற்றிருக்கிறது இந்த ஒரு படம்.
அது போல, திரைப்படங்களை எடுத்துக்கொண்டாலும், கருத்து ரீதியாகவும், வலிமையாகவும் பன்மடங்கு அழுத்தமாக மக்கள் பிரச்சனைகளைப் பேசிய படம் ‘ஜோக்கர்’.
ஆனால், அந்தப் படம் இந்த அளவு விவாதிக்கப்படவில்லை. அந்தப் படம் குறித்து குற்றம் சாட்டியவர்கள் யாரும் காட்டாத எதிர்ப்பும், அப்போதைய அரசியல் சூழலும் காரணம். மேலும், பிரபலமான நடிகர் இல்லாததும் ஒரு காரணம்.
ஏற்கனவே ஒவ்வொரு பெரிய பிரச்சினையும் நேரும்போது, அதை திசைதிருப்பும் வகையில் சில சின்ன பிரச்சி னைகள் எழுவது வாடிக்கை. தமிழகத்தில் டெங்கு ஏற்படுத்தி வரும் மரணங்கள் தொடரும்பொழுது, நாட்டில் உள்ள அனைவருமே அறிந்த, ஏற்கனவே எதிர்ப்புகள் இருப்பது தெரிந்த பிரச்சினைகளைப் பேசும் வசனங்களுக்கு, தணிக்கையெல்லாம் கடந்து வெளியான பின்பு எதிர்ப்பு தெரிவித்து, இவ்வளவு தூரம் அதை பேசுபொருள் ஆக்கியிருப்பதும் யோசிக்க வைக்கிறது.
எது எப்படியோ, தமிழிசையும், எச்.ராஜாவும் காட்டிய எதிர்ப்பு, விஜயின் அரசியலுக்கும் பா.ஜ.க தெரிந்தோ தெரியாமலோ செய்திருக்கும் பேருதவியே… தற்போதைய தமிழகத்தில் தீர்க்கப்படாத பிரச்சினைகள் அதிகரித்துள்ளதோடு டெங்கு உயிரிழப்புகள் கந்து வட்டி கட்டமுடியாமல் பெற்ற குழந்தைகளை பெற்றோரே பெற்றோல் ஊற்றி எரித்துக் கொன்று தாங்களும் தீவைத்துக்கொண்டு உயிரிழக்கும் அவலங்கள் தொடருகின்றன.
பா.ஜ.க.வின் கைப்பாவை என விமர்சிக்கப்படுகின்ற தமிழக அரசால் அதாவது எடப்பாடி பழனிச்சாமியால் இப்பிரச்சினைகளில் இருந்து கூட மக்களை காப்பாற்ற முடியவில்லை. மாறாக தங்களது கட் அவுட்களை தமிழகமெங்கும் வைக்க நீதிமன்றத்தில் வாதாடிகொண்டிருகின்றனர்.
தன்னை எதிர்பவர்களை எல்லாம் வருமான வரி சோதனை, சி.பி.ஐ. விசாரணை என இழுத்தடிக்கும் மோடி தலைமையிலான அரசுக்கு தொடர்ந்து தமிழகத்தில் தமக்கு கட்டுப்பட்ட ஒரு கைப்பாவை தலையாட்டி பொம்மை போன்ற அரசே தேவைப்படுகின்றது.
ஆனால் தமிழகத்துக்கு நல்ல தலைமை தேவைப்படுகின்றது… நிரப்ப முடியாத ஒரு வெற்றிடம் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ளது. ஆகவே ஒரு தலைவரின் தேவை இத்தருணத்தில் மிக மிக அவசியமானது அது விஜயாக கூட இருக்கலாம்.
–குமார் சுகுணா–