மூன்று தசாப்தங்கள் நீடித்த யுத்தத்தின் கொடூரம் நீங்கி சுதந்திரமான வாழ்வை நோக்கி நகரும் வேளையில் வடக்கு மக்களை மீளவும் துயரத்துக்குள் தள்ள சில பாதாள உலகக் குழுக்கள் முளைக்கத் தொடங்கியுள்ளன.
தெற்கின் பாதாள உலகக் குழுக்களின் வேர்கள் பிடுங்கப்படும் நிலையில் வடக்கில் இவ்வாறு குழுக்கள் முளைப்பது அங்கு குற்றச் செயல்கள் தொடர்பான சூழல் ஒன்றை பரவலாக்கலாம். 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததும் தெற்கிலும் மேற்கிலும் அச்சுறுத்தலாக இருந்த பாதாள உலகக் குழுக்களின் நடமாட்டத்தை அழிக்கும் அல்லது வேர் பிடுங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து அந்தப் பகுதிகளில் பகிரங்கமாக இருந்த அவ்வாறான குற்றக் குழுக்களின் நடமாட்டத்தை இன்று காணமுடிவதில்லை.
2009 ஆம் ஆண்டின் பின்னர் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கைகள் அவ்வாறான ஒரு சூழலை தென்னிலங்கையில் ஏற்படுத்தியது. இந் நிலையில் தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் நாட்டின் வடக்கு பகுதியில் தற்போது பாதாள உலகக் குழுக்களின் அட்டகாசம் துளிர் விட ஆரம்பித்துள்ளது.
தென்னிந்திய தமிழ் சினிமாக்களில் நாம் வழமையாக காணும் ‘ ரெளடிசத்தை ‘ ஒத்த அதே பாணியிலான பாதாள குழுக்களே இன்று வடக்கில் வியாபிக்கத் துடிக்கின்றன.
யாழ் குடாவில் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டத் துடித்த ‘ ஆவா குறூப்’ எனப்படும் பாதாள உலகக் குழு பொலிஸாரினால் கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்ட நிலையிலேயே அங்கு பாதாள உலகக் குழுக்களின் நடமாட்டம் பரவலாகியுள்ளமை தொடர்பில் பலரும் விளித்துக்கொள்ள தொடங்கினர்.
கிழக்கிலிருந்து வடக்கு மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக பூஜித்த ஜயசுந்தர இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இடமாற்றம் பெற்றதை தொடர்ந்து வடக்கிற்கான பொலிஸ் உயர் பதவிகள் பல வற்றில் மாற்றங்கள் ஏற்பட்டன. இந் நிலையிலேயே யாழ்.பிராந்தியத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக ரொஹான் டயஸ் பொறுப்பேற்றார்.
இந்த பதவி மாற்றத்தின் அல்லது இடமாற்றங்களின் பிரதிபலன் சில வாரங்களிலேயே தெளிவானது. அதுவே பூஜித்த ஜயசுந்தர மற்றும் ரொஹான் டயஸ் ஆகிய பிரதிப் பொலிஸ் மா அதிபர்களின் ஆலோசனைகளின் கீழ் வடக்கு பாதாள உலகக் குழுக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளாகும்.
பல நாள் பொலிஸாரின் கண்களில் மண் தூவித் திரிந்த பாதாள உலகக் குழுக்களை முற்றாக கட்டுப்படுத்தி குடா நாட்டின் சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட இவ்விரு பிரதிப் பொலிஸ் மா அதிபர்களும் இணைந்து அமைத்த விஷேட பொலிஸ் குழுவின் பிடியில் சிக்கிய முதல் பாதாள உலகக் குழு ஆவா குரூப் ஆகும்.
இதனை தொடர்ந்தே இம்மாதத்தின் ஆரம்ப நாட்களில் மற்றொரு பாதாள உலகக் குழுவான டினோ குறூப் பொலிஸ் பிடியில் சிக்கியது.
யாழில் நடந்த பாலியல் பலாத்காரங்கள், கப்பம் கோரல்கள், தாக்குதல்கள் மற்றும் வாள் வெட்டுக்கள் உள்ளிட்ட பல குற்றச் செயல்களுக்கு காரணமானவர்கள் என சந்தேகிக்கப்படும் இந்த குழுவினர் யாழ். மாவட்ட விஷேட புலனாய்வுப் பிரிவின் கீழ் செயற்பட்ட பொலிஸ் குழுவினரால் கைது செய்யப்பட்டனர். தன்னுடைய சட்ட விரோத செயற்பாடுகளுக்கு பயன்படுத்திய வாள்கள், சங்கிலிகள், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட ஆயுதங்களுடனேயே இந்த குழு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டது.
நவீன ரக மோட்டார் சைக்கிள்களில் வாள்கள் பொல்லுகளை தமது முதுகுக்குப் பின்னால் மறைத்து வேகமாக பயணிக்கும் இந்த குழுக்கள் சினிமாப் பாணியிலான தாக்குதல்களை மேற்கொண்டு மக்களை பயமுறுத்தி தனது நடவடிக்கைகளை தொடர்ந்துள்ளன.
தமக்கு எதிராக பொலிஸாரிடம் தஞ்சம் கோருவோரையும் அங்கு சென்று முறைப்பாடு செய்வோரையும் மட்டுமன்றி தமது குழு தொடர்பில் விமர்சிப்போரையும் வாயடைக்கச் செய்ய இந்தக் குழு தவறவில்லை. அதனாலோ என்னவோ ஆவா குழுவைப் போன்றே டினோ குழுவுக்கு எதிரான முறைப்பாடுகளும் பொலிஸ் நிலையங்களை வந்தடைவது சாத்தியமற்றதாக இருந்தது.
பெண்களை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்தல், வியாபாரிகளையும் செல்வந்தர்களையும் அச்சுறுத்தி கப்பம் பெறல்,கொள்ளையடித்தல் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் அச்சுறுத்தல், வாள், பொல்லுகளைப் பயன்படுத்தி வீடு புகுந்து தாக்குதல் நடத்தல் போன்றன. இந்த குழுவினரால் முன்னெடுக்கப்பட்டுவந்துள்ள சட்ட விரோத செயற்பாடுகள் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளன.
இவ்வாறான பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இந்த ‘டினோ குறூப்’ என்ற பாதாள உலக் குழுவை வழி நடத்தியவர் ஒரு 18 வயதான இளைஞன் என்றால் நம்ப முடிகிறதா? ஆம், 18 வயதான அஷோக் டினோ எனப்படும் 18 வயதான இளைஞரே அந்த பாதாள உலகக் குழுவுக்கு தலைமை தாங்கியவர். அந்த குழுவில் மொத்தமாக 15 பேர் அங்கத்தவர்கள் வேறு.
இந்த 15 பேர் கொண்ட பாதாள உலகக் குழுவின் கோட்டையாக விளங்கியது கொக்குவில் பிரதேசத்தில் உள்ள ஒரு மாளிகை போன்ற விசாலமான வீடாகும். அங்கிருந்தே அனைத்து குற்றச்செயல்கள் தொடர்பிலும் திட்டமிடப்பட்டுள்ளதுடன் பல குற்றச் செயல்களும் அரங்கேற்றப்பட்டுள்ளன. இந்த வீட்டின் உரிமையாளர் ஐரோப்பிய நாடொன்றில் வசித்துவரும் நிலையிலேயே அந்த வீடு டினோ குறூப் பாதாள உலகக் குழுவினரால் பயன்படுத்தப்பட்டுள்ளது.
டினோ பாதாள உலகக் குழுவின் அலுவலகமாக விளங்கிய இந்த வீட்டிலிருந்தே அந்த குழுவின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில் ஒப்பந்தங்களை கொடுப்போரும் கொக்குவில் பகுதியில் அமைந்துள்ள அந்த வீட்டுக்கு சென்றே தமது ஒப்பந்தங்களை கொடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
கடந்த ஜனவரி மாதம் பொலிஸாரிடம் சிக்கிய ஆவா குரூப் பாதாள உலகக் குழுவின் அங்கத்தவராக இருந்துள்ள அஷோக் டினோ அதிலிருந்து பிரிந்துவந்தே டினோ குறூப் என்ற இந்த பாதாள உலகக் குழுவை தோற்றுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த ஜனவரி மாதத்துடன் ஆவா குழுவினரின் ஆட்டம் பொலிஸ் நடவடிக்கையுடன் நிறைவுக்கு வந்த நிலையில் டினோ குறூப் அந்த வெற்றிடத்தையும் சேர்த்து நிரப்பும் விதமாக தமது நடவடிக்கைகளை வியாபித்துள்ளது.
இராணுவ சீருடையில் சஞ்சரிக்கப் பழகிக்கொண்ட இந்த டினோ குறூப் பாதாள உலகக் குழு அந்த உடையிலேயே பல குற்றச்செயல்களையும் அரங்கேற்றவும் தவறவில்லை. இதனால் குறித்த குற்றச்செயல்கள் தொடர்பான பழி இராணுவத்தினரை நோக்கியதாகவே இருந்துள்ளது .
இராணுவ சீருடையில் இவ்வாறு குற்றச்செயல்களை மேற்கொள்ளும் இந்த குழுவினரை கைது செய்ததை தொடர்ந்து அவர்களது மத்திய நிலையமாக இருந்த அந்த விசாலமான வீட்டை பொலிஸார் சோதனை செய்துள்ளனர். அதன் போது இராணுவ சீருடைகள் மற்றும் ஆயுதங்களுக்கு மேலதிகமாக பெண்களின் உள்ளாடைகள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களினுடையதாக இருக்க வேண்டும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
பாடசாலை மற்றும் மேலதிக வகுப்புக்கு சென்று திரும்பிக்கொண்டிருக்கும் மாணவிகளையும் இந்த குழு விட்டு வைக்கவில்லை என தெரிகிறது. இந்த குழுவினரின் கைதை தொடர்ந்து பொலிஸாரிடம் அந்த குழு தொடர்பில் சிலர் தெரிவித்துள்ள விடயங்களில் இருந்து அதனை தெரிந்துகொள்ள முடிகிறது.
மாணவிகளை கிண்டலடிக்கும் இந்த குழு தமது நவீன ரக மோட்டார் சைக்கிளில் சென்று அந்த மோட்டார் சைக்கிள்களை வேகமாக திருப்பி துவிச்சக்கர வண்டிகளில் சென்றுகொண்டிருக்கும் மாணவிகளை கீழே வீழ்த்திய பல சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாகவும் அதனை விட கத்தியைக் காட்டி பயமுறுத்திய பல சம்பவங்களும் அதில் அடங்குவதாகவும் அறிய முடிகிறது.
பல்வேறு தரப்பினரால் கொடுக்கப்படும் ஒப்பந்தங்களை கச்சிதமாக அரங்கேற்றும் இந்த குழு, அவ்வாறு செய்த பல சம்பவங்கள் தொடர்பிலான விபரங்கள் பொலிஸாரினால் சேகரிக்கப்பட்டுள்ளன.
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து அதன் மீது தாக்குதல் நடத்தி விட்டு 60 ஆயிரம் ரூபா வரையிலான பணத்தொகையினை கொள்ளையிட்டமை, கொக்குவில் பிரதேசத்தில் இளைஞர் ஒருவரின் கையை வாளால் வெட்டித் துண்டித்தமை,
அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நபர் ஒருவரை வாளால் தாக்கி படுகாயமடையச் செய்தமை, வட்டுக்கோட்டை பகுதியில் இருவரை வெட்டிக்காயப்படுத்தியமை மற்றும் முச்சக்கர வண்டியொன்றை அடித்து சேதப்படுத்தியமை உள்ளிட்ட பல சம்பவங்களுடன் இந்த குழுவுக்கு தொடர்புள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அத்துடன் கடந்த அக்டோபர் மாதம் வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள கோயில் ஒன்றின் நகைப் பெட்டகம் ஒன்றிலிருந்து சுமார் 150 பவுண் நகைகள் கொள்ளையிடப்பட்ட சம்பவத்துடனும் இந்த குழுவுக்கு நெருங்கிய தொடர்பிருப்பதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். அது தொடர்பான விசாரணைகளும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக பொது மக்களின் பயத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டுள்ள இந்த பாதாள குழு பொது மக்களைப் பயமுறுத்த இராணுவ உடையில் திரிந்துள்ளமையும் விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் இராணுவ சீருடைகளும் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் பல்சர் ரக சிறப்பு நவீன மோட்டார் சைக்கிள் இரண்டு உள்ளிட்ட நான்கு மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கடந்த 8 ஆம் திகதி சனியன்று டினோ குழுவின் 9 பேரை பொலிஸார் விசாரணை செய்தபோதே அந்த குழு தொடர்பான தகவல்கள் கசிய ஆரம்பித்தன. அந்த கைதினை தொடர்ந்து பொலிஸார் விஷேட விசாரணைகளை மேற்கொண்டதிலிருந்து அந்த குழுவினருடன் தொடர்பினை பேணிய தென்னிலங்கையைச் சேர்ந்த அல்லது கொழும்பை சேர்ந்த நால்வரை பொலிஸார் 11 ஆம் திகதி செவ்வாயன்று கைது செய்தனர்.
முதலில் கைது செய்யப்பட்ட 9 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பலனாக கைது செய்யப்பட்ட நால்வரில் ஒருவர் முன்னாள் விமானப்படை வீரர் என தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் அவரூடாகவே இராணுவ சீருடைகள் பெற்றுக்கொள்ளப்பட்டு குற்றச்செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் அது இன்னும் விசாரணைகளில் உறுதி செய்யப்படவில்லை.
எவ்வாறாயினும் கைது செய்யப்பட்ட நால்வரில் ஜா எல பகுதியை சேர்ந்த இருவரும் கொட்டாவை, அங்கொடை ஆகிய பகுதிகளை சேர்ந்த ஒவ்வொருவரும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அனைவரும் விளக்கமறியலில் வைக்கப் பட்டுள்ள நிலையில் இந்த பாதாள உலகக் குழுவின் தலைவரை இதுவரை கைது செய்யவில்லை என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
அவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
வடமாகாணத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர, யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹான் டயஸ் ஆகியோரின் விஷேட ஆலோசனைகளுக்கு அமைய யாழ் மாவட்டதுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் டப்ளியூ.பீ.எம்.விமல சேனவின் மேற்பார்வையின் கீழ் யாழ். விஷேட புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ரம்ஸீன் பகீர் தலைமையிலான பொலிஸ் குழு இந்த பாதாள உலகக் குழுவினரை கைது செய்திருந்தனர்.
வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.எம்.சுனில் ரணவீர, யாழ், விஷேட புலனாய்வுப் பிரிவின் சார்ஜன்களான பிரியந்த (24338), காண்ஸ்டபிள்களான சுபசிங்க (45435), சுவர்ணதிலக (84280) ஆகியோர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
-எம்.எப்.எம்.பஸீர்-