சிட்னி: ஆஸ்திரேலியாவில் ஒருவர் பப்பில் பீர் குடிக்க குட்டி விமானத்தில் சென்று அதை சாலையில் நிறுத்தியது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆஸ்திரேலியாவின் நியூமேன் பகுதியில் இருக்கும் சுரங்க நகரமான பில்பாராவில் உள்ள பர்பிள் பப்புக்கு ஒருவர் பீர் குடிக்க வந்தார். அவர் இறக்கையில்லா குட்டி விமானத்தில் வந்து அதை பப்புக்கு வெளியே நிறுத்திவிட்டு உள்ளே சென்றார்.
ஒரு பீர் குடிக்க விமானத்தில் வந்தது பற்றிய செய்தி அந்த நகரில் தீயாக பரவியது.
இந்நிலையில் இது குறித்து போலீஸ் அதிகாரி மார்க் மெக்கென்சி கூறுகையில், இது முட்டாள்தனமான காரியம். குழந்தைகள் பள்ளியில் இருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர்.
விமானத்தில் இறக்கை ஏன் இல்லை என தெரியவில்லை. இறக்கை இல்லாததால் காற்று பலமாக வீசினால் விமானம் சாயக்கூடும். மக்களுக்கு அது வியப்பாக உள்ளது. ஆனால் உண்மையில் இது அபாயகரமானது என்றார்.
விமானத்தில் வந்த நபர் குடிபோதையில் இருந்தாரா என்று போலீசார் சோதனை நடத்தினர். ஆனால் அவர் குடிபோதையில் இல்லை என்பது தெரிய வந்தது.
அந்த விமானத்தில் விபத்து எதுவும் ஏற்படவில்லை என்றாலும் அது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பப் ஊழியர்களோ குட்டி விமானத்தில் வந்தவரை லெஜண்ட் என்கிறார்கள்.
English summary A man in Australia parked his plane outside a pub and went in for a beer.