இரட்டை இலை விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் நடந்த விசாரணையின்போது, போலி அஃபிடவிட்களை ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தாக்கல்செய்துள்ளதாக தினகரன் தரப்பு வாதிட்டது.
அதற்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பினர், இங்கிலீஷ்ல அஃபிடவிட்கள் இருந்ததால கையெழுத்துப் போட்டுவிட்டதாகச் சொல்லியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது, அ.தி.மு.க., இரட்டை இலைச் சின்னம் ஆகியவற்றைத் தேர்தல் ஆணையம் முடக்கியது. இரட்டை இலையை மீட்டெடுக்க ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, சசிகலா, தீபா தரப்பினரிடையே கடும் போட்டி நடந்துவருகிறது.
இதற்காக, ஒவ்வொரு தரப்பிலும் லட்சக்கணக்கான அஃபிடவிட்களைத் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளனர். தற்போது, ஓ.பன்னீர்செல்வம் அணியும், எடப்பாடி பழனிசாமி தரப்பும் இணைந்துவிட்டதால், இருவரும் இணைந்து இரட்டை இலையை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இரட்டை இலை எங்களுக்குத்தான் என்று சசிகலா தரப்பும் தேர்தல் ஆணையத்திடம் வாதத்தை முன்வைத்துள்ளது. ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா தரப்பு வழக்கறிஞர் பசும்பொன்பாண்டியன், இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக அஃபிடவிட்களைத் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல்செய்தார்.
இதனால், இரட்டை இலைச் சின்னம் யாருக்கு என்பதில் இழுபறி ஏற்பட்டது.
இதையடுத்து, கடந்த 6-ம் தேதி இரட்டை இலை தொடர்பான முதல்கட்ட விசாரணை தேர்தல் ஆணையத்தில் நடந்தது. இதற்காக டெல்லி சென்ற ஒவ்வொரு தரப்பினரும், தங்களுக்குத்தான் கட்சியில் செல்வாக்கு இருப்பதாகக் கூறினர்.
வாதங்களைக் கேட்ட பிறகு அடுத்தகட்ட விசாரணை 16-ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர் தேர்தல் அதிகாரிகள். அன்றைய தினம் நடந்த விசாரணையில், இரட்டை இலை குறித்த முடிவு எடுக்கப்படவில்லை.
இதனால், 23-ம் தேதிக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டது. இந்த விசாரணையில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, சசிகலா, தீபா தரப்பினர் கலந்துகொண்டு வாதிட்டனர்.
வாதத்தின்போது, சசிகலா தரப்பினர் கொடுத்த புகார் மனு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது, ஓ.பன்னீர்செல்வம் அணியும் எடப்பாடி பழனிசாமி அணியும் கொடுத்த 300-க்கும் மேற்பட்ட அஃபிடவிட்கள் போலியானவை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அதற்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அணியினர், இங்கிலீஷ்ல அஃபிடவிட்கள் இருந்ததால் கட்சியினர் தெரியாமல் கையெழுத்துப் போட்டுவிட்டனர் என்று பதிலளித்துள்ளனர்.
இதைக் கேட்ட தேர்தல் அதிகாரிகள், சிரித்தபடியே, கட்சியில் யாருக்கு செல்வாக்கு உள்ளதோ அவர்களுக்குத்தான் சின்னம் கிடைக்கும் என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர். இது, சசிகலா தரப்பினரை வருத்தமடைய வைத்துள்ளது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய சசிகலா தரப்பினர், “இரட்டை இலைச் சின்னத்தை முடக்கக் காரணமாக இருந்த ஓ.பன்னீர்செல்வத்துடன் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இணைந்திருப்பதை கட்சியினர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
இதனால்தான் எங்களுக்குக் கட்சியில் செல்வாக்கு அதிகரித்துள்ளது. எனவே, இரட்டை இலை நிச்சயம் எங்களுக்குத்தான் கிடைக்கும். தஞ்சாவூர், நெல்லை மாவட்டங்களில் உள்ள பொதுக்குழுவில் உள்ள உறுப்பினர்களில் பலர், எங்களை ஆதரித்து அஃபிடவிட்களைத் தாக்கல்செய்துள்ளனர்.
எனவே, இரண்டு தரப்பையும் ஆதரித்து அஃபிடவிட்டுகளைத் தாக்கல்செய்தவர்களிடம் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும்.
அதன்பிறகே சின்னம் யாருக்கு என்பதில் முடிவு எடுக்க வேண்டும் என்று வாதிட்டோம். அடுத்தகட்ட விசாரணை 30-ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது” என்றனர்.
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பில் தேர்தல் ஆணைய விசாரணையில் பங்கேற்றவர்கள் கூறுகையில், “கட்சியில் எங்களுக்குச் செல்வாக்கு இருப்பது எல்லோருக்கும் தெரியும்.
சமீபத்தில் நடந்த பொதுக்குழு, செயற்குழுக் கூட்டமே அதற்கு ஆதாரமாக உள்ளது. சசிகலா குடும்பத்தினரின் சுயரூபம் கட்சியினருக்குத் தெரியும். தினகரனை ஆதரித்த 18 எம்.எல்.ஏ-க்களுக்கு ஏற்பட்ட நிலைமை கட்சியினருக்குப் பாடமாக உள்ளது.
இரட்டை இலை யாருக்கும் கிடைக்கக் கூடாது என்பதில் சசிகலா தரப்பு தேவையில்லாத வாதங்களை முன்வைத்து வருகிறது. இதனால், சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நவம்பர் மாதத்துக்குள் சின்னம் எங்களுக்குக் கிடைத்துவிடும். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட சோதனையால் கட்சி, சின்னம் முடக்கப்பட்டது.
ஒற்றுமையாக அதை மீட்கப் போராடிவருகிறோம். சின்னத்தை மீட்க, கட்சியில் செல்வாக்கை நிரூபிக்க அஃபிடவிட்கள் ஒவ்வொரு தரப்பினரும் அவசர, அவசரமாகத் தயார்செய்தோம்.
தொண்டர்களில் பலர் குழப்பமடைந்திருந்த சமயத்தாலும் ஆங்கிலத்தில் அஃபிடவிட்கள் இருந்ததாலும் இரண்டு தரப்பினருக்கும் கட்சியினர் சிலர் கையெழுத்திட்டுள்ளனர். அதையும் தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளோம்” என்றனர்.