கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் வேகமாக நடந்துவரும் நிலையில் இந்தியாவில் கொரோனா உயிரிழப்புகள் 4 லட்சத்தை கடந்துள்ளன.
அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்ட இறப்புகளை காட்டிலும் உண்மையான உயிரிழப்புகள் பல மடங்கு அதிகமாக இருக்கலாம் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்து அதிகாரபூர்வமாக 4 லட்சம் உயிரிழப்புகளைத் தாண்டிய நாடாகியுள்ளது இந்தியா.
அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் கொரோனா தொற்றியோர் எண்ணிக்கை 3 கோடியாக உள்ளது.
இந்தியாவில் கடந்த மே மாதத்தில் 4 லட்சமாக இருந்த தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை, தற்போது சரிந்து சமீப நாட்களில் சராசரி சுமார் 40 ஆயிரமாக இருக்கிறது.
மாநிலங்கள் விதித்த முழு ஊரடங்கால் பெரும்பாலும் கொரோனா பாதிப்பு குறைந்தது.
ஆனால், இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை குறித்து வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
கேரளம், அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா, ஒதிஷா, சத்தீஸ்கர், மணிப்பூர் ஆகிய ஆறு மாநிலங்களில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாகி வருவதை தொடர்ந்து, வெள்ளிக்கிழமை அன்று மத்திய அரசு வல்லுநர் குழு ஒன்றை இந்த மாநிலங்களுக்கு அனுப்பியுள்ளது.
அங்குள்ள சூழலை கவனத்தில் எடுத்து, தடுப்பூசி திட்டம் எந்த அளவில் உள்ளது என்பதை இந்த வல்லுநர் குழு ஆராயும்.
இந்தியாவில் ஜனவரியில் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து தற்போது வரை நாட்டின் 5 சதவீத மக்களே முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.
இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து இந்தியர்களுக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று அரசாங்கம் குறிக்கோள் வைத்துள்ளது.
ஆனால், தடுப்பூசி தட்டுப்பாடு மற்றும் ஊசி போட்டுக் கொள்ள மக்களிடையே இருக்கும் தயக்கம் ஆகியவை இதற்கு தடையாக இருக்கின்றன.
இந்தியாவில் தற்போது கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளே மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன.
ரஷ்ய தடுப்பூசியான ஸ்புட்னிக் V-க்கு அனுமதி அளிக்கப்பட்டு, ஒரு சில இடங்களில் அது போடப்பட்டு வருகிறது.
கொரோனா இரண்டாம் அலை, நாட்டின் சுகாதார அமைப்பை வெகுவாக உலுக்கிய நிலையில், தடுப்பூசி இருப்பை அதிகரித்துக் கொள்ள இந்தியா முயற்சித்து வருகிறது.
தற்போது சீரம் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் இந்தியா தயாரிக்க உள்ள நோவாவேக்ஸ் தடுப்பூசியை பயன்படுத்தவும் அரசு ஆர்வம் காட்டியுள்ளது.
மேலும் இந்திய நிறுவனம் தயாரிக்கும் பயோலஜிக்கல் இ தடுப்பூசியில் 300 மில்லியன் டோஸ்களையும் மத்திய அரசு ஆர்டர் செய்துள்ளது.
மிக சமீபத்தில்தான், மாடர்னா தடுப்பூசியை இறக்குமதி செய்ய இந்திய மருந்து நிறுவனமான சிப்லாவுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அனுமதி அளித்தது.
இந்த தடுப்பூசி கொரோனாவைத் தடுப்பதில் 95 சதவீதம் திறன் கொண்டது என்று கூறப்படுகிறது.