இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து வடக்கில் கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு

கறுப்புக் கொடிகளை படகுகளில் கட்டியவாறு மீன்பிடிக்க வருவோம் என, இந்திய மீனவர்கள் அறிவித்துள்ளமையை கண்டித்து வடக்கு மாகாணம் தழுவிய கதவடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு கோரவுள்ளதாக வடமராட்சி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இன்றையதினம் இடம்பெற்ற கூட்டத்திலேயே இவ்வாறு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் ந.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எல்லை தாண்டிய மீன்பிடியில் இந்திய மீனவர்கள் தொடர்ச்சியாக ஈடுபடுவதாலேயே வடகடலில் மீனவர்களுக்கிடையே பிரச்சினைகள் ஏற்படுகிறது. வடக்கு மீனவர்கள் மீது பல தாக்குதல்களை இந்திய மீனவர்களே மேற்கொண்டு வருகின்றனர்.
எல்லையைத் தாண்டும் மீனவர்களை கடற்ப்படை கைது செய்து வருகிறது, இது வரவேற்கத்தக்கது. கைது நடவடிக்கை தொடர வேண்டும் என்பது எமது தொடர்சியான கோரிக்கை.
இலங்கை கடற்ப்பரப்பில் அண்மைய நாட்களில் இடம்பெற்ற படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு எமது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதே வேளை எமது கடற்ப்பரப்பிற்குள் நுளைய வேண்டாம் என, மீண்டும் மீண்டும் கூறுகிறோம்.
சில அசம்பாவிதங்களை வைத்து எமது கடற்பரப்புக்குள் நுளைந்து எமது வளத்தை அழிக்க அனுமதிக்க முடியாது. கறுப்புக் கொடிகளை படகில் கட்டிக் கொண்டு மீன்பிடிக்க எமது எல்லைக்குள் வருவோம் என இந்திய மீனவர்கள் விடுத்துள்ளது அடாவடி அதனை நாம் அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
இந்திய மீனவர்களை இனி மீனவர்கள் என்று அழைக்காமல் ” கடல் கொள்ளையர்கள் ” என்று குறிப்பிட்டு , கடல் கொள்ளையர்களுக்கு வழங்கும் தண்டனைகளை வழங்கினால் மட்டுமே இந்த பிரச்சனை தீரும். பாக்கிஸ்தான் கடல் பக்கம் போய் மீன் பிடிப்பாங்களா ? இலங்கை என்றால் எதுவும் செய்யலாம் தமிழ் தேசியவாதிகள் காப்பாற்றுவார்கள் என்ற துணிவில் இங்கு கொள்ளை அடிக்க வருகின்றார்கள்.