தமிழின அழிப்பை முழுமையாக மூடி மறைப்பதற்கே இலங்கை அரசாங்கம் விரும்புகின்றது என்று கனடாவின் ஒன்ராரியோ மாநில ஸ்காபரோ, றூஜ்பார்க் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய விசேட செவ்வியின்போது தெரிவித்தார்.
கேள்வி:- ஒன்ராரியோ சட்டமன்றத்தில் ‘தமிழின அழிப்பு அறிவியற்கிழமை‘ எனும் 104ஆவது சட்டமூலத்தினை எந்த இலக்கினை அடைவதற்காக கொண்டுவந்து நிறைவேற்றியிருக்கின்றீர்கள்?
பதில்:- தாயக தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இனவழிப்பினை அரசாங்கமாக அங்கீகரிக்க வேண்டும் என்பதோடு, அடுத்த தலைமுறையினருக்கு இனமொன்றின் வலிகள், நீதிக்கோரிக்கைள், ஒவ்வொரு தனிநபரினுள்ளும் காணப்படும் வேதனைக் கதைகள் உள்ளிட்ட ஒட்டுமொத்தமான திட்டமிட்ட அழிப்பினை எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது.
அதுமட்டுமன்றி கல்வித்துறைக்குள்ளும் இந்த விடயம் உள்ளீர்க்கப்பட்டு எதிர்கால சந்ததியினருக்கு வெளிப்படுத்த சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட வேண்டும்.
இவ்வாறான இலக்குகளுடன் தான் ‘தமிழின அழிப்பு அறிவியற்கிழமை‘ என்ற சட்டமூலத்தினை ஒன்ராரியோ சட்டமன்றத்தில் சமர்ப்பித்தேன். மூன்று வாசிப்புக்களின் பின்னர் தற்போது அது நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, யூத மக்கள் எவ்வாறு தமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை அடுத்த சந்ததியினருக்கு வெளிப்படுத்தும் வகையில் பாடப்புத்தகங்களில் அவ்விடயத்தினை உள்ளீர்த்து கற்பிக்கின்றார்களோ அவ்விதமாக தமிழின அழிப்பையும் பரம்பரை ரீதியாகவும் ஏனைய இனக்குழுங்களுக்கும் கல்வி ஊடாக வெளிப்படுத்துவதே எதிர்பார்ப்பாக உள்ளது.
கேள்வி:- ‘தமிழின அழிப்பு அறிவியற்கிழமை‘ சட்டமாகும் வரையில் முகங்கொடுத்த சவால்கள் என்ன? இச்சட்டம் எவ்விதமான தாக்கத்தினை ஏற்படுத்துமென்று கருதுகின்றீர்கள்?
பதில்:- இந்தச் சட்டமூலம் நிறைவேறிவிடக்கூடாது என்பதில் இலங்கை அரசாங்கமும் அதனுடன் இணைந்து கனடாவில் செயற்படும் பல தரப்பினரும் முனைப்புடன் செயற்பட்டிருந்தார்கள்.
ஆனால் ஒன்ராரியோவின் முதல்வர் டக்போர்ட் மற்றும் ஏனைய அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்கள் ஒத்துழைப்புக்களை வழங்கி இதனை நிறைவேற்றுவதற்கு உதவினார்கள்.
மேலும், கனடாவில் மிக முக்கியமான பிராந்தியமான ஒன்ராரியோவில் இந்தச் சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டதன் மூலமாக, தேசிய அளவிலும் விரைவில் அதற்குரிய அங்கீகாரத்தினைக் கோருவதற்கான வாயிலை திறந்துள்ளது.
இதனைவிடவும், இளையவர்கள் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து சமூக வலைத்தளங்களில் அதிகளவில் தமது பிரதிபலிப்புக்களைச் செய்துள்ளார்கள். ஆகவே அவர்கள் மத்தியிலும் கணிசமான தாக்கத்தினை சர்வதேச அளவில் ஏற்படுத்தியுள்ளது.
கேள்வி:- தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதை அந்த மக்களின் பிரதிநிதிகள் கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டாலும், அதற்கான நீதியைப் பெறுவதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லையென்பது ஒருதரப்பின் நிலைப்பாடாக இருக்கின்றது. இந்த விடயத்தில் உங்களின் கருத்து என்ன?
பதில்:- ஐக்கிய நாடுகள் சமவாயச் சட்டத்தில் இனப்படுகொலை என்பதற்கு ஐந்து வரைவிலக்கணங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில் தமிழினத்தின் மீது ஏழு தசாப்தங்களாக நடைபெற்று வருவதும் இறுதியாக முள்ளிவாய்க்காலில் நடைபெற்றதும் இனப்படுகொலை என்பதை உறுதி செய்கின்றன.
அதேநேரம், உலகில் நிகழ்ந்த இனப்படுகொலைகளை அங்கீகரிப்பதற்காக பல்வேறு பொறிமுறைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. உதாரணமாக, ஆர்மீனிய இனப்படுகொலைகளை எடுத்துக்கொண்டால் நூறாண்டுகளுக்குப் பின்னரேயே இனப்படுகொலை என்பது சர்வதேசத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
ஆர்மீனியர்கள், வேறுவேறு நாடுகளில் உள்ள மாநகராட்சி, பிராந்திய, தேசிய ரீதியில் தம்மீது இனப்படுகொலை நிகழ்ந்தது என்பதை படிப்படியாக அங்கீகரித்து இறுதியாகவே ஐ.நா.வில் அந்தந்த நாடுகள் ஊடாக முன்மொழிவுகளைச் செய்து அங்கீகாரத்தினைப் பெற்றுக்கொண்டனர். இதுவொரு சாத்தியப்பட்ட பொறிமுறையாக இருக்கின்றது. இதுபோன்று பல்வேறு பொறிமுறைகள் காணப்படுகின்றன.
தமிழின அழிப்பு நடைபெற்றதென்று வடமாகாணசபை, தமிழக சட்டசபை ஆகியவற்றில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதோடு கனடாவில் பிரம்டன், ரொரண்டோ மாநகரட்சி ஆகியவற்றில் தமிழின அழிப்பு நினைவேந்தல் நாள் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதன்பின்னர் கனடாவின் முக்கிய பிராந்தியமான ஒன்ராரியோவில் 104சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இவ்விதமாக உலகநாடுகளில் தீர்மானங்களை நிறைவேற்றுவதன் ஊடாக தமிழின அழிப்புக்கான சர்வதேச அங்கீகாரத்தினை நோக்கி முன்னகரலாம் என்பது எனது நிலைப்பாடாகும். அதற்காக இதுமட்டுமே அதற்கான பொறிமுறை என்று நான் முடிவாக கூறவில்லை. எமக்குள்ள அனைத்து வாயில்களையும் பயன்படுத்த முன்னகர வேண்டும்.
கேள்வி:- நிறைவேற்றப்பட்ட இச்சட்டம் சம்பந்தமாக கனடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவாக உள்ளது?
பதில்:- தேசிய அளவில் தமிழின அழிப்பு என்ற விடயம் உத்தியோக பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆனால், இந்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து அக்கட்சியின் பிரதிநிதிகளும் வரவேற்பினை வெளியிட்டு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர். ஆகவே வெகுவிரைவில் மத்திய அரசாங்கமும் அவ்விதமான நிலைப்பாட்டிற்கு வரலாம் என்ற எதிர்பார்ப்பு எனக்கு உள்ளது. அதிகமாக தமிழ் மக்கள் வாழும் ஒன்ராரியோவிலும், கியூபெக்கிலும் அவ்விதமான பலத்த எதிர்பார்ப்பும் காணப்படுகின்றது.
கேள்வி:-நீங்கள் சமர்ப்பித்த சட்டம் நிறைவேற்றப்பட்டவுடனேயே இலங்கைக்கான கனடிய உயர்ஸ்தானிகர் வெளிவிவகார அமைச்சரால் அழைக்கப்பட்டு அவரிடத்தில் மிகக் காட்டமான கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளதை அறிவீர்களா?
பதில்:- தாயக தமிழினத்தின் மீதான இனவழிப்பு உண்மைகள் வெளிப்பட்டுவிடக்கூடாது என்ற தளத்தில் இருந்து கொண்டே இலங்கை அரசாங்கம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் செயற்படுகின்றது.
இவ்வாறான சட்டம் நிறைவேற்றப்படக்கூடாது என்பதில் இலங்கை அரசாங்கம் கரிசனை கொண்டு கனடாவில் பாரிய அளவில் அதற்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது.
மிகமுக்கியமாக சட்டத்தினை அங்கீகரிப்பதற்கான கவர்னர் ஜெனரலின் கையொப்பத்தினைப் பெறுவதற்கான காலத்தில் கூட அதனைத் தடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் பிரயத்தனம் செய்தது.
சர்வதேசத்தில் இடம்பெற்ற இனவழிப்புக்களை நோக்குகின்றபோது, இனவழிப்பைச் செய்த அரசுகள் அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்பதோடு அதற்கு சர்வதேச அங்கீகாரம் அளிப்பதையும் அவை விரும்பாது.
அதற்காக, இனவழிப்பின் அதியுச்சமாக, அடையாளங்களை அழித்தல், நினைவேந்தல்களை குறிவைத்து தடுத்தல், நீதிகோரும் தரப்பினரை அச்சமூட்டுதல் உள்ளிட்ட பல விடயங்களை கையிலெடுக்கும். அவ்விதமான செயற்பாடுகளையே இலங்கை அரசாங்கமும் மேற்கொண்டு வருகின்றது.
கேள்வி:- இரு நாடுகளுக்கு இடையிலான ‘இருதரப்பு உறவுகள்‘ என்ற அடிப்படையில் பார்க்கின்றபோது இலங்கையின் அழுத்தங்களைக் கடந்து கனடிய மத்திய அரசாங்கம் தமிழின அழிப்பை அங்கீகரிப்பது பற்றி சாதகமாக சிந்திக்குமா?
பதில்:- கனடா போன்ற நாடுகள் மனித உரிமைகள் விடயத்திற்கு முன்னுரிமை அளிக்கின்றன. அத்துடன் இலங்கை அரசங்கம் இவ்விதமாக பல்வேறு மூடிமறைப்புக்களைச் செய்ய முனைகின்றபோது, மத்திய அரசாங்கம் நிச்சயமாக நிலைமைகளைப் புரிந்து கொள்ளும்.
கேள்வி:- இறுதிப்போர் சார்ந்த விடயங்களை, (இனப்படுகொலை, போர்க்குற்றங்கள்) புலம்பெயர் தமிழர்கள் தமது இருப்புக்காகவே பயன்படுத்துகின்றார்கள் என்ற இலங்கை அரசாங்கத்தரப்பின் குற்றச்சாட்டை எவ்வாறு பார்கின்றீர்கள்?
பதில்:- தமிழினத்தின் நீதிக்கான பயணம் என்பது பரந்துபட்டதும் நீண்டதுமாகவே உள்ளது. அத்துடன், அதுவொரு கூட்டுப்பொறுப்பான பயணமாகவே உள்ளது. முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பின்னர் கடந்த 12வருடங்காளாக தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் விளைவாலேயே நான் சமர்ப்பித்த சட்டம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் வெவ்வேறு தளங்களில் நிகழ்ந்திருக்கின்றன.
இந்த நிலைமையானது நீதிக்கான பயணத்தின் வீச்சினை மேலும் பலப்படுத்துவதாக இருக்கப்போகின்றது. இதனை உணர்ந்துள்ள இலங்கை அரசாங்கம் அதனால் ஏற்படும் விளைவுகளையும் அறிந்து கொண்டுள்ளதால் மலினப்படுத்தும் வகையில் பிரசாரம் செய்வதற்கு முற்படுகின்றது.
-நன்றி-
வீரகேசரி