இராக்கின் இரண்டாவது பெரிய நகரான மோசுலை இசிஸ் அமைப்பைச் சேர்ந்த ஜிகாதிகள் கைப்பற்றியுள்ளது, உள்நாட்டில் மட்டுமல்ல, வெளியேயும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இசிஸ் என்றால் என்ன, அவர்கள் யார் ? இராக்கிய இஸ்லாமிய தேசம் அல்லது இராக்கிலுள்ள இஸ்லாமிய தேசம் மற்றும் லெவெண்ட் (The Islamic State of Iraq and the Levant ) எனும் அமைப்பின் சுருக்கமே இசிஸ்.
கடைசியிலுள்ள எஸ் எனும் எழுத்து அரபு வார்த்தையான அல் ஷாம் என்பதைக் குறிக்கும்.
இசிஸ் அமைப்பு முதலில் அல் கயீதா அமைப்பிலிருந்துதான் உருவானது. ஆனால் அது உருவானதிலிருந்து அதன் தாய் அமைப்பான அல் கயீதா அதை நிராகரித்துப் புறந்தள்ளியிருக்கிறது.
2013 ஏப்ரல் மாதத்தில் உருவாக்கப்பட்ட போது , இசிஸ் அமைப்பு முழுக்க முழுக்க ஒரு இராக்கிய அமைப்பாகவே இருந்தது. ஆனால் இப்போது தமது அமைப்பில் ஐரோப்பிய நாடுகள் உட்பட பல நாட்டவர் இருக்கிறார்கள் என அவர்கள் கூறுகிறார்கள்.
அண்டை நாடான சிரியாவில் நடைபெற்ற மோதலில் இந்த அமைப்பு மிகவும் ஆக்ரோஷமாக பெரிய அளவில் பங்கெடுத்தது
இராக்கின் மோசுல் நகரிலிருந்து 5 லட்சம் மக்கள் வெளியேறினர்.
இராக்கின் மோசுல் நகரை இஸ்லாமியத் தீவிரவாதிகள் கைப்பற்றிய பிறகு அங்கிருந்து ஐந்து லட்சம் மக்கள் வெளியேறியுள்ளனர் என்று அச்சங்கள் வெளியாகியுள்ளன.
அந்த நகரை கைப்பற்றியுள்ள, இராக்கிய இஸ்லாமியத் தேசம் மற்றும் இசிஸ் என்று அழைக்கப்படும் லெவெண்ட் அமைப்புகள் மேலும் முன்னேறி வருகின்றன.
இது அந்தப் பிராந்தியத்துக்கே மிகவும் அபாயகரமானது என்று அமெரிக்கா கூறியுள்ளது.
அல் கயீதாவின் ஒரு கிளை அமைப்பான இசிஸ், இப்போது கிழக்கு சிரியா, மேற்கு மற்றும் மத்திய இராக் ஆகிய பகுதிகளில் கணிசமான அளவுக்கு நிலப்பரப்பை தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
இதுதவிர இராக்கின் கிர்குக் மற்றும் சலாஹதீன் மாகாணங்களிலும் அந்த அமைப்பினர் முன்னேறி வருகின்றனர்.
இதனிடையே நாட்டில் பெரும்பான்மையாக இருக்கும் சுன்னி முஸ்லிம்களுடன் இணைந்து செயல்பட்டு சட்டம் ஒழுங்கை சீர் செய்யுமாறு, ஷியா முஸ்லிமான பிரதமர் நூரி அல் மலிக்கியிடம் அமெரிக்கா கோரியுள்ளது.
இராக்கின் பாரபட்சமான கொள்கைளை முன்னெடுக்கிறார் என்ற குற்றச்சாட்டுக்கு நூரி அல் மலிக்கி ஆளாகியுள்ளார். இதன் காரணமாக அங்கு இன வன்முறைகள் ஏற்பட்டுள்ளன என்றும் கூறப்படுகிறது.