மன்மோகன்சிங்கின் ஆட்சிக்காலத் தில் புதுடில்லியை அணுகுவதற்கு, இலங்கை அரசாங்கம் கொண்டிருந்த ஓர் இலகுவான வழி இப்போது அடைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நல்லுறவு நீடித்து வருவதாக வெளிப்படையாகக் கூறப்பட்டாலும், அவ்வப்போது இருதரப்பும் இராஜதந்திர மட்டங்களில் முட்டிக் கொள்வதுண்டு.
அத்தகைய முட்டுப்பாடுகள் ஏற்படுகின்ற போது, நேரடியான தொடர்புகள் மூலம் சுமுகநிலையை ஏற்படுத்தி, பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முயற்சிக்கப்படுவதில்லை.
இருதரப்புக்கும் நெருக்கமானவர்கள் அதற்காகப் பயன்படுத்தப்படுவது இராஜதந்திர முறைகளில் ஒன்று. அத்தகையவர்கள் அரசாங்கத்திலும் இருக்கலாம். சிலவேளைகளில் அதற்கு வெளியேயும் இருக்கலாம்.
இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், இந்தியாவில் பல்வேறு மட்டங்களில் தனது இத்தகைய பிரச்சினை தீர்க்கும் நண்பர்களை வைத்துள்ளது.
இப்போதைய இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூட, இலங்கை அரசாங்கத்தின் அத்தகையதொரு நண்பர் தான்.
அவர் வெளியுறவு மற்றும் நிதி அமைச்சராகப் பதவி வகித்த காலங்களில், பல சந்தர்ப்பங்களில், அவர் இலங்கையை நெருக்கடியில் இருந்து பாதுகாப்பதற்கான முன்முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.
இதுபோலவே, இந்திய அரசாங்கத்தின் சக்தி வாய்ந்த பதவிகளில் ஒன்றான- தேசிய பாதுகாப்பு ஆலோசகராகப் பதவி வகித்தவர்களையும் இலங்கை அரசாங்கம் தனது கைக்குள் போட்டு வைத்துக் கொண்டிருந்தது.
வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில், உருவாக்கப்பட்ட இந்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியானது, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் கொண்டிருக்கும் அதிகாரத்துக்கு இணையானது.
பாதுகாப்புத் துறையில், பிரதமருக்கு அடுத்து பாதுகாப்பு அமைச்சர் கொண்டுள்ள பொறுப்புப் போலவே, தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் கொண்டிருக்கிறார்.
இந்தியாவின் அணுவாயுதங்களைக் கையாளும் நிறைவேற்று அதிகாரப் பொறுப்பு அதாவது, அவற்றைக் கட்டுப்படுத்தும் சாவிகள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் வசமே உள்ளன.
இதனைக் கொண்டே இது எந்தளவுக்கு முக்கியமான பதவி என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் குமார் டோவல் நியமிக்கப்பட்டதை அடுத்தே இந்த வழி அடைபட்டுள்ளது.
இதற்கு முன்னர், இந்தப் பதவியை வகித்திருந்த – மலையாளிகளான எம்.கே.நாராயணனும், சிவ்சங்கர் மேனனும் இலங்கை அரசாங்கத்தின் நெருங்கிய நண்பர்களாகவே இருந்து வந்தனர்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஏற்படும் சிக்கல்களை தீர்ப்பதற்கதாக இருதரப்பிலும் அமைக்கப்பட்ட மூவரணியில், இந்தியத் தரப்பில் இடம்பெற்றவர்களில் எம்.கே.நாராயணனும் ஒருவர்.
அவரையடுத்து, தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்ட சிவ்சங்கர் மேனன் போர்க்காலத்தில் கொழும்பில் இந்தியத் தூதராகப் பணியாற்றியவர்.
இதன் மூலம், ராஜபக் ஷ சகோதரர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்.
சிவ்சங்கர் மேனன் இந்தப் பதவியில் இருக்கும் வரை- இலங்கை அரசாங்கத்துக்குப் பெரியளவிலான பிரச்சினைகள் ஏற்படவில்லை. அவ்வாறு பிரச்சினை ஏற்படும் போதெல்லாம், அதனைத் தீர்ப்பதற்கு அவரைப் பயன்படுத்திக் கொண்டது அரசாங்கம்.
ஆனால் இப்போது, இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள அஜித் குமார் டோவல், இலங்கை அரசாங்கத்துடன் முன்னர் எந்தத் தொடர்பையும் கொண்டிராதவர். அஜித் குமார் டோவல், முன்னர் இந்தியாவின் உள்ளகப் புலனாய்வுத் துறையான ஐ.பியின் தலைவராகப் பணியாற்றியவர்.
அதனால், அவருக்கு வெளிநாட்டு தொடர்புகள் மிகக்குறைவு.
ஆனால், உள்நாட்டுப் பாதுகாப்பின் ஓட்டைகளை நன்று அறிந்தவர் என்பதால், அதனை அடைப்பதற்கான வழிமுறைகளைக் கையாள்வதற்கு, அவர் தனது பதவியைப் பயன்படுத்திக் கொள்வார் என்று கருதப்படுகிறது.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் என்பது இரண்டு விதமாக அணுகப்படுகிறது.
முதலாவது, வரலாற்று ரீதியான அரசியல் வழித் தொடர்புகள், உறவுகளின் அடிப்படையிலானது. இது பெரும்பா லும், இந்தியாவின் பொதுவான வெளி விவகாரக் கொள்கையின் அடிப்படை யில் கையாளப்படுகிறது.
இரண்டாவது, பாதுகாப்பு சார்ந்த அடிப்படையில் மேற்கொள்ளப்படும் உறவு. இந்த இரண்டு வழிமுறைகளுக் கும் இடையில் அவ்வப்போது முரண் பாடுகள் ஏற்படுவதுண்டு.
பிறநாடுகளின் விவகாரங்களில் தலையிடாமை இந்தியாவின் பொதுவான வெளிவகாரக் கொள்கையாக இருந்தாலும், அதை மீறி இலங்கைக்கும்,பங்களாதேஷுக்கும் படைகளை அனுப்பியது அந்த நாடு.
அப்போது இந்தியாவின் பொதுவான வெளிவிவகாரக் கொள்கை மீறப்பட்டது.
அதற்குக் காரணம் பொதுவான வெளிவிவகாரக் கொள்கையை விடப் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டியேற்பட்டது தான்.
ஏதாவதொரு காலகட்டத்தில், பாதுகாப்புச் சவால்கள் மேலிடும் போது இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை தானாகவே நெகிழ்ந்து கொடுக்கிறது.
இவ்வாறுதான் இலங்கையில் தமிழ் இயக்கங்களுக்கு ஆயுதங்களைக் கொடுத்து ஊக்குவித்ததும் கூட, இந்தி யாவினது பாதுகாப்பு நலன்சார்ந்த விட யம் தான்.
அதுபோலவே, போரின் இறுதிக்கட்டத்தில், தமிழர்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்புணர்வு இந்தியாவுக்கு இருந்த போதும், அதைப் புறந்தள்ளி விட்டு- தனது வெளிவிவகாரக் கொள்கையைக் காரணம் காட்டிக் கொண்டு ஒதுங்கி நின்றதும் கூட, பாதுகாப்பு நலன்களை அடைவதற்காகத் தான்.
எம்.கே.நாராயணன், சிவ்சங்கர் மேனன் போன்றவர்கள் இராஜதந்திர சேவைகளின் ஊடாக வந்தவர்கள் என்பதால், அவர்களின் அணுகுமுறைகள், இலங்கைக்கு சாதகமானதாக இருந்தது.
ஆனால், அஜித் குமார் டோவல், அப்படிப்பட்டவரில்லை.
அவரது அணுகுமுறை, சிவ்சங்கர் மேனனின் அணுகுமுறையை விட வேறுபட்டதாக இருக்கும் என்றே புதுடில்லி ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.
டோவல் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், அதற்கு வெளியகச் சவால்களை சமாளிக்க வேண்டியது அவசியம் என்பதை அவர் நன்றாகவே உணர்ந்தவராக இருக்கிறார்.
நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்பதற்கு முன்னர், அஜித் டோவலுடன் தான் முதலில் ஆலோசனை நடத்தியிருந்தார். அதன்போது தான், பதவியேற்பு விழாவுக்கு, அயல்நாடுகளின் தலைவர்களை அழைக்கும் யோசனையை கூறியிருந்தார்.
முக்கியமாக பாகிஸ்தான் பிரதமரை அழைப்பது தான், டோவலின் நோக்கம்.
ஆனால் தனியே அவரை மட்டும் அழைக்க முடியாது என்பதால் தான், சார்க் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அந்த அழைப்புக்கு எல்லா நாடுகளும் சாதகமாக பதிலளித்த்தால், நரேந்திர மோடியின் பெயர் சர்வதேச அரங்கில் உயர்த்தப்பட்டுள்ளது.
அதேவேளை, தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்படுவதற்கு முன்னதாகவே, டோவல் தனக்குச் சவாலான விடயங்களைச் சமாளிப்பதற்கான உத்திகளை வகுக்கத் தொடங்கியிருந்தார்.
அவர் போட்ட அத்திவாரத்தின் மீது சார்க் நாடுகளின் தலைவர்களுடன் உறவுகள் புதுப்பிக்கப்பட்டு- சுமுகமான நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் உள்ளகச் சவால்களைச் சமாளிப்பதற்கு, அயல்நாடுகளின் ஒத்துழைப்பு அவசியமானது.
பாகிஸ்தான் மற்றும் இலங்கை வழியாக, பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. புலனாய்வுத்துறையும் தீவிரவாதிகளும் ஊடுருவுவதாக இந்தியா கருதுகிறது.
பங்களாதேஷ் எல்லை வழியாகவும் ஊடுருவல் பிரச்சினை உள்ளது, அங்கு ஆழ்கடல் துறைமுகம் ஒன்றை அமைக்க சீனா முயன்று வருகிறது.
மாலைதீவிலும் துறைமுகம் ஒன்றை அமைப்பதில் இந்தியாவுடன் சீனா போட்டியிடுகிறது.
நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகள் வழியாகவும் சீன ஊடுருவல் நிகழ்வதாகக் கூறுப்படுகிறது.
ஆப்கானிஸ்தானின் தலிபான் தீவிரவாதம் இந்தியாவுக்குள் எந்நேரமும் பரவலாம் என்ற அச்சமும் உள்ளது.
அதாவது, எல்லாப் பக்கங்களிலுமே, பாதுகாப்புச் சவால்கள் சூழ்ந்துள்ள நிலையில் இந்திய உபகண்டத்தில் அமைதியை உருவாக்குவதென்பது அவ்வளவு சுலபமானதமாக இருக்காது.
எனவே தான், அயல்நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதில் அஜித் டோவல் ஆர்வம் காட்டியிருந்தார்.
இலங்கை விவகாரத்தில் இந்திய அரசாங்கத்தின் கொள்கைகளை வரைவதில், அஜித் டோவல் முக்கியமான பங்காற்றக் கூடியவர்.
இந்தநிலையில், அவரது அணுகுமுறைகளும், முடிவுகளும், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை சார்ந்ததாக இருக்குமா அல்லது பாதுகாப்புச் சார்ந்ததாக இருக்குமா என்ற கேள்வி எழுகிறது.
ஒரு முன்னாள் புலனாய்வுத்துறைத் தலைவர் என்ற வகையிலும், பாதுகாப்பு நிபுணர் என்ற வகையிலும், இந்தியாவினது பாதுகாப்புக்கே அவர் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கலாம்.
அது இலங்கைக்கு எந்த வகையில், உதவியாக இருக்கும் என்பது தான் முக்கியமான விடயம்.
இந்தியாவின் பாதுகாப்புக்குச் சவாலான விடயங்களை இலங்கை தடுக்க வேண்டும்.
அதற்கு சீனா, பாகிஸ்தான் உறவுகளை குறைத்துக் கொண்டு இந்தியாவுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கும்.
ஆனால், அதற்கு இலங்கை சம்மதிக்காது.
ஏனென்றால், சீனா, பாகிஸ்தான் நாடுகளுடனான உறவுகளை இலங்கை நன்றாகவே பலப்படுத்திக் கொண்டுள்ள நிலையில், அதிலிருந்து பின்வாங்க முடியாது.
அத்தகைய பின்வாங்கலானது இலங்கைக்கு பொருளாதார ரீதியிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
எனவே, கொள்கை சார்ந்து முடிவெடுக்காமல், பாதுகாப்பு சார்ந்து முடிவுகளை எடுக்கும் இந்தியத் தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் இலங்கையால் அவ்வளவுக்கு நெருங்க முடியாது.
அந்த வகையில், புதுடில்லியுடனான உறவை சீராக வைத்துக் கொள்வதற்கான ஒரு வழி, அஜித் டோவலின் நியமனத்தினால் அடைபட்டுப் போயுள்ளது, இலங்கைக்குப் பெரும் இழப்பாகவே இருக்கும்.
அதன் தாக்கம் உடனடியாகத் தெரியாது போனாலும், காலப் போக்கில் வலுவாக உணரப்படும்.
– சுபத்ரா