ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் மார்ச் மாத கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பிலான ஐ.நா.விசாரணை இம்மாத இறுதியில் அல்லது அடுத்தவார முற்பகுதியில் ஆரம்பமாகும் என இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து தெரிய வந்திருக்கின்றது.
இந்த விசாரணையை முன்னெடுப்பதற்காக மூன்று உறுப்பினர்களைக் கொண்ட நிபுணர் குழு ஒன்றை மனித உரிமைகள் ஆணையாளர் இம்மாத இறுதியில் நியமிப்பார். மனித உரிமைகள் பேரவையின் அதிகாரி ஒருவர் இதற்குப் பொறுப்பாக நியமிக்கப்படுவார் எனவும் தெரியவந்திருக்கின்றது.
விசாரணைக்குழுவின் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்ட பின்னர் விசாரணைக் குழுவின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளை இலங்கை அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வமான முறையில் கோரிக்கை ஒன்றை முன்வைப்பார்.
இதற்காக அரசாங்கம் கொடுக்கும் பதிலின் அடிப்படையிலேயே ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அடுத்தகட்டச் செயற்பாடுகள் அமைந்திருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்ட உடனடியாகவே ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன், இந்தத் தீர்மானத்தைச் செயற்படுத்துவதற்கு இலங்கை ஐ.நா. வுடன் ஒத்துழைக்க வேண்டும் எனக்கோரியிருந்தார்.
இதனைச் சுட்டிக்காட்டும் இராஜதந்திர வட்டாரங்கள், இதற்கு இலங்கை அரசிடமிருந்து சாதகமான பிரதிபலிப்பு கிடைக்கவில்லை எனவும் கூறுகின்றன.
இந்த நிலையிலேயே விசாரணைக்குழுவை அமைத்த பின்னர் அதேபோன்ற ஒரு கோரிக்கை மனித உரிமைகள் ஆணையாளரால் முன்வைக்கப்படும். இதற்குச் சாதகமான பதில் இலங்கை அரசிடமிருந்து கிடைக்கும்பட்சத்தில், இலங்கை அரசின் ஒத்துழைப்புடன் விசாரணை ஒன்றை முன்னெடுப்பதற்கான பொறிமுறை ஒன்று ஐ.நா.வினால் உருவாக்கப்படும். இல்லையெனில் இலங்கைக்கு வெளியிலிருந்து கொண்டு விசாரணயை முன்னெடுப்பதற்கான பொறிமுறை ஒன்று உருவாக்கப்படும்.
இலங்கை தொடர்பிலான தீர்மானம் மார்ச் மாத கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட போதிலும், அதற்கான பொறிமுறை ஒன்று இதுவரையில் அமைக்கப்படாததையிட்டு பிரேரணைக்கு ஆதரவளித்த நாடுகள் தமது அதிருப்தியை கடந்தவாரத்தில் வெளியிட்டிருந்தன. இதனையடுத்தே இவ்விவகாரத்தை மனித உரிமைகள் பேரவை உடனடியாக கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை தொடர்பான ஐ.நா.வின் விசாரணைக்கு மனித உரிமைகள் பேரவையின் உயர் அதிகாரி ஒருவரே பொறுப்பாக இருப்பார் எனவும், சர்வதேச ரீதியாக புகழ்பெற்ற மூன்று நீதியரசர்கள் விசாரணைக்குழுவில் இடம்பெற்றிருப்பார்கள் எனவும் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன