இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகள் தங்களது நாட்டின் செல்லுபடியான சாரதி அனுமதிப் பத்திரத்தை வைத்திருந்தால், கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பத்து நிமிட நேரத்தில், இலகுரக வாகனங்களுக்கான மூன்று மாத காலத்துக்குச் செல்லுபடியாகும் உள்நாட்டு சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த ஏற்பாடு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் நடைமுறைக்கு வருவதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் எஸ்.எம்.ஹரிச்சந்திரா தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால் உல்லாசப்பயணிகள் விமான நிலையத்திலேயே சட்ட ரீதியான சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக் கொண்டு, அங்கிருந்தே ஒரு காரை வாடகைக்கு அமர்த்தியபடி, தானே அதனைச் செலுத்திக் கொண்டு செல்லமுடியும்.
இந்தத் திட்டத்துக்கு திறைசேரியும் அனுமதி வழங்கியுள்ளது. மோட்டார் சைக்கிள் செலுத்துவதற்கான சாரதி அனுமதிப் பத்திரம் வழங்குகின்றமை குறித்தும் ஆராயப்படுகின்றது.
வெளிநாட்டு சாரதி அனுமதிப் பத்திரம் வைத்திருக்கும் அந்நாட்டவர்களுக்கு இலங்கையில் வாகனம் செலுத்துவதற்கான அனுமதி வழங்கும் நடைமுறை தற்போதும் நடைமுறையில் உள்ளது.
தற்சமயம் அதற்கு அவர்கள் வெரஹெரவில் உள்ள அலுவலகத்துக்குப் போய் ஒருநாள் காத்திருக்க வேண்டும். அது குறித்து பல தரப்பிலிருந்தும் முறைப்பாடுகள் செய்யப்பட்டமையை அடுத்தே புதிய ஏற்பாடு நடைமுறைக்குக் கொண்டு வரப்பட இருப்பதாகக் கூறப்பட்டது.