வான் புலிகளின் முதலாவது விமான தாக்குதல் எதிர்பாராத விதத்தில் திடீரென நடந்து முடிந்து, விமானங்களும் மறைந்து விட்டதால், எதையும் கண்டுபிடிக்க முடியாத நிலை, இலங்கை பாதுகாப்பு படைகளுக்கு ஏற்பட்டது. மற்றொரு தடவை அந்த விமானங்கள் வானத்துக்கு வந்தால்தான், மேற்கொண்டு தகவல்கள் தெரியவரலாம் என்று காத்திருந்தார்கள்.
அதற்கிடையே, வான்புலிகளின் விமானங்களை கண்டுபிடிக்க வேறு சில விஷயங்களிலும் கவனம் செலுத்த தொடங்கினார்கள்.
வான்புலிகளின் விமானம் வன்னியில் இருந்து புறப்பட்டு, தெற்குநோக்கி செல்கின்றதை முதலில் உறுதி செய்து கொண்டனர். எப்படியென்றால், ரேடாரில் இருந்து தப்பிக்க குறைவான உயரத்தில் அந்த விமானங்கள் பறந்தன. குறைந்த உயரத்தில் பறக்கும்போது கீழே தரையில் பிளேன் இஞ்சின் ஓசை மிகத் தெளிவாகக் கேட்கும்.
கணேசபுரம் பகுதியில் கேட்டிருக்கிறது.
கீழேயிருந்த ராணுவத்தினருக்கு, மேலே வானில் ஏதோ ஓசை கேட்டிருக்கின்றது. ஆனால் ஓசைக்குரிய பொருள் என்னவென்று முதலில் உறுதியாகத் தெரியவில்லை.
ஒருவேளை கேட்ட ஓசை விமானத்தில் இருந்துதான் வருகிறது என்று உடனே தெரிந்திருந்தாலும், எதுவும் செய்திருக்க முடியாது. முதலாவது, அது விடுதலைப் புலிகளின் விமானம் என ஊகித்திருக்க முடியாது. காரணம், புலிகளின் விமானம் தாக்குதல் புரிய பறந்தது, இதுதான் முதல் தடவை.
இரண்டாவது, மிகவும் அனுபவசாலிகளாக இல்லாவிட்டால் இருளில், விமானத்தின் விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட்ட நிலையில் பறக்கும்போது, கேட்கும் ஓசையை வைத்து, விமானம் எவ்வளவு உயரத்தில் பறக்கிறது என்று கணிக்க முடியாது.
அப்படியான சந்தர்ப்பத்தில் உடனே சுடமாட்டார்கள். மேலே பறப்பது ஒருவேளை பயணிகள் விமானமாக இருந்தால்? விமானப்படை விமானமாக இருந்தால்? (உண்மையில், அன்றைய தினத்தில் கிட்டத்தட்ட அதே நேரத்தில் பயணிகள் விமானம் ஒன்று இலங்கை வான் பகுதியில், கிட்டத்தட்ட இந்த திசையில் பறந்து சென்றது. பறந்த உயரம் சுமார் 28,000 அடி.
சிங்கப்பூர் ஏர்லைன்சின் துணை விமான நிறுவனமான சில்க் ஏர் (Silk Air) விமானம் அது.
இதனால் ராணுவத்தினர், சற்றே தாமதமாகதான், வழக்கத்துக்கு மாறாக விமானம் ஒன்று குறைந்த உயரத்தில் பறந்து சென்றது என்ற தகவலை, விமானப்படை தலைமையகத்துக்கு தெரிவித்தனர். இலங்கை விமானப்படை, அது தங்களது விமானம் இல்லை என உறுதி செய்தனர்.
அப்படியானால், அது வர்த்தக விமானமாக இருக்கலாமா என்ற சந்தேகம் ஏற்பட்டது.
வர்த்தக விமானம் ஒன்று அவ்வளவு குறைந்த உயரத்தில் பறந்திருக்க சான்ஸ் இல்லைத்தான். இருந்தாலும், விமானப்படை தலைமையகம், கொழும்புவில் உள்ள இலங்கையின் சென்ட்ரல் ஏர்-ட்ராபிக் கன்ட்ரோல் டவரை தொடர்பு கொண்டது. அந்த நேரத்தில், அந்த பகுதியில் ஏதாவது வர்த்தக விமானங்கள் பறக்கின்றனவா என்று கேட்டார்கள்.
சில்க் ஏர் விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்த விஷயம் தெரிந்தது. அந்த விமானம் பறக்கும் பாதை, மற்றும் பொசிஷன் எது என்பதைச் சொன்னார்கள்.
அந்த விமானப் பாதை, கணேசபுரம் பகுதிக்கு மேலாக இல்லை என்று தெரிந்து, தரையில் இருப்பவர்கள் உஷாராவதற்கு முன்பு-
வான்புலிகளின் விமானம் அந்த இடத்தை கடந்து சென்றுவிட்டிருந்தது.
வான்புலிகளின் தாக்குதல் முடிந்தபின் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த விபரங்கள் தெரிய வந்தன. இவற்றில் இருந்து, கட்டுநாயக விமான தளத்தில் குண்டுவீச சென்ற வான்புலி விமானங்கள், வடக்கில் இருந்து தெற்கு நோக்கி பறந்தது என்பது உறுதியானது.
இந்த இடத்தில் விமானப்படையினர் மற்றொரு கோணத்தில் இந்த பறத்தலை ஆராய்ந்தனர்.
அது என்னவென்றால், கொழும்பு நோக்கி மற்ற விமானங்கள் (பெரும்பாலும் வர்த்தக விமானங்கள்) வழமையாக செல்லும் பாதையை தவிர்த்துவிட்டு, வான்புலிகளின் விமானங்கள் பறந்தன என்பதுதான்.
வான்புலிகள் செய்தது போன்ற ரகசிய விமான நகர்வு ஒன்றைத் திட்டமிடும்போது வேறு விமானங்களும் அதே பாதையில் போவதை அவர்கள் விரும்பவில்லை. காரணம், வர்த்தக விமானத்தின் நகர்வை, கொழும்பு கன்ட்ரோல் டவர் ரேடாரில் கவனித்துக் கொண்டிருப்பார்கள்.
அந்த இடத்தில் இரண்டாவது விமானம் ஒன்றும் நகர்வது தெரிந்தால், டவரில் உள்ளவர்கள் அலர்ட் ஆகிவிடுவார்கள்.
என்னதான் வான் பகுதி விசாலமாக விரிந்து இருந்தாலும், வர்த்தக விமானங்கள் மானசீகமான வான் சாலை ஒன்றில்தான் பறக்கும். இந்த வான் சாலையை Airway என்பார்கள். கொழும்பு நோக்கி செல்லும் அனைத்து விமானங்களும், இந்த சாலையில்தான் பறக்க வேண்டும். சாலையின் அகலம், சுமார் 14 கி.மீ. (8 நோடிகல் மைல்).
நாம் மேலே சொன்னதை புரிய வைக்க, கொஞ்சம் பின்னணி விபரம் தர வேண்டியுள்ளது.
வான் பாதைகளில் மூன்று வகை இருக்கின்றன. Airway, Navaid மற்றும் Direct
இதில் இரண்டாவதை விட்டுவிடலாம். அது இலங்கை வான் பகுதியில் உபயோகிக்கப்படுவதில்லை. (தரையில் உள்ள VOR மையங்கள் மூலம் விமானம் வழிகாட்டப்படுவது)
மூன்றாவது இலங்கையில் உபயோகிக்கப்படுவதுண்டு. ஆனால் இலங்கைக்கு மேலால் பறக்கும் விமானங்கள் மாத்திரமே Direct Flight Plan-ஐ உபயோகிப்பார்கள். அதாவது வேறு ஒரு நாட்டிலிருந்து வேறு ஒரு நாட்டுக்கு, இலங்கை வான் பகுதியை கடந்து செல்லும் (கொழும்பில் தரையிறங்காத) விமானங்கள்.
இவை அநேகமாக 30,000 – 36,000 அடி உயரத்திலேயே பறக்கும் என்பதால், குறைவாக உயரத்தில் பறக்கும் வான்புலிகளின் விமானங்கள் கவலைப்பட தேவையில்லை.
முக்கிய கவனம் எடுக்கப்பட வேண்டிய பாதை – Airway. இலங்கைக்கு வரும் விமானங்கள் உபயோகிப்பது இதைத்தான்.
இந்த Airway என்பது வானத்தில் போடப்பட்டுள்ள ஒரு மானசீகமான சாலை என்று சொன்னோமல்லவா? 14 கிலோமீட்டர் அகலமான இந்த வான் சாலையில், ஒரே நேரத்தில் ஒன்று மேற்பட்ட விமானங்களும் பறக்கலாம். அப்படிப் பறக்கும்போது அவற்றின் உயரங்கள் மேலும் கீழுமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளப்படும்.
இரு விமானங்களுக்கு மிடையே குறைந்தபட்சம் 1000 அடி இடைவெளி மேலிருந்து கீழாக இருக்க வேண்டும் என்பது விதிமுறை.
கொழும்புவுக்கு எக்கச்சக்க எண்ணிக்கையில் விமானங்கள் வருவதில்லை. இதனால் இந்த வான் சாலைகள் பிசியாக இருப்பதில்லை. ஒரே நேரத்தில் இரு விமானங்கள் ஒரே ஸ்பாட்டில் பறந்தாலே பெரிய விஷயம் என்பதால், 14 கிலோமீட்டர் அகல வான் சாலையை இரண்டாக பிரித்துள்ளார்கள். 18,000 அடிக்குக் கீழே ஒரு பாதை. 18,000 அடியிலிருந்து 36,000 அடிவரை ஒரு பாதை.
இந்த Airway பாதையை வான்புலிகள் தவிர்க்கிறார்கள் என்பதை இலங்கை விமானப்படை புரிந்து கொண்டது. அதாவது அந்த 14 கிலோமீட்டர் அகல வான் பாதைக்குள் வான்புலிகளின் விமானம் வராது என்பதால், இவர்கள் கண் வைத்திருக்க வேண்டிய ஏரியாவில் ஒரு நீளமான பகுதி குறைகிறது.
இப்படியான கணிப்புகளை செய்து, வான் புலிகளின் விமானங்கள் அடுத்த தடவை கொழும்புவுக்கு குண்டுவீச வரும்போது, எந்த வழியாக வருவார்கள் என மானசீக ஸ்கெட்ச் போட்டுவிட்டு, அடித்து வீழ்த்த காத்திருந்தார்கள்.
ஆனால், வான் புலிகளின் விமானம் இரண்டாவது முறை குண்டுகளோடு புறப்பட்டபோது, அந்த விமானம் கொழும்பு நோக்கி வரவில்லை. எதிர் திசையில், யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி வான் தளத்தை நோக்கி சென்றது. (வன்னியில் இருந்து தெற்கே கொழும்பு, வடக்கே யாழ்ப்பாணம்)
வான் புலிகளின் 1-வது வான் தாக்குதல் 2007-ம் ஆண்டு மார்ச் 25-ம் தேதி நடந்த நிலையில், சுமார் 1 மாத இடைவெளி விட்டு, ஏப்ரல் 24-ம் தேதி அதிகாலை, வான் புலி விமானம் ஒன்று பலாலி விமான தளம் அருகே குண்டு வீசியது.
விமானத்தில் இருந்து விழுந்த இரு குண்டுகளும், பலாலி தளத்துடன் இணைந்திருந்த மயிலிட்டி கடற்கரையில் விழுந்தன. ராணுவத்தைச் சேர்ந்த 6 பேர் கொல்லப்பட்டனர். அதைவிட பெரிய சேதம் ஏதுமில்லை.
பலாலி தளத்தினுள் விழுந்திருக்க வேண்டிய குண்டுகள், குறி தவறி வெளியே விழுந்ததே, இதற்கு காரணம்.
இந்த தாக்குதலில் இருந்த மற்றொரு விசேஷம் என்ன தெரியுமா? தரையில் இருந்து விடுதலைப் புலிகள் வழி ஏற்படுத்திக் கொடுக்க, வானில் இருந்து வான்புலி விமானம் குண்டு போட்டது!
அது எப்படி என்பதை, அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம். (தொடரும்)
-ரிஷி-
முன்னைய தொடர்களை பார்வையிட இங்கே அழுத்தவும்