மாஸ்கோ: உக்ரைனுக்கு ரஷ்ய படை களை அனுப்புவதற்கு அதிபர் புடினுக்கு நாடாளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.சோவியத் யூனியனில் இருந்த பிரிந்து தனி நாடான உக்ரைனில் உள்நாட்டு கலவரம் ஏற்பட்டுள்ளது.
ரஷ்யாவுக்கு ஆதரவாகவும், ஐரோப்பிய யூனியனுக்கு ஆதரவாகவும் இருதரப்பினர் பயங்கர வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், உக்ரைனில் கலவரத்தை கட்டுப்படுத்த ராணுவத்தை அனுப்ப ரஷ்ய அதிபர் புடின் திட்டமிட்டுள்ளார்.
இதற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்நிலையில் உக்ரைனுக்கு ரஷ்ய ராணுவ படைகளை அனுப்புவதற்கு ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று அனுமதி வழங்கினர். இதுகுறித்து நடைபெற்ற வாக்கெடுப்பில் ரஷ்ய படைகளை உக்ரைனுக்கு அனுப்ப ஒருமனதாக உறுப்பினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கிரம்ளின் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா தலையிட்டு தீர்வு காண வேண்டும். இந்த விவகாரத்தில் அமெரிக்கா தலையிட கூடாது என்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சுவீடன் நாட்டு வெளியுறவு அமைச்சர் கூறுகையில், ரஷ்யாவின் இந்த நடவடிக்கை சர்வதேச விதிமுறைகளுக்கு எதிரானது என்று தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கு ரஷ்ய படைகளை அனுப்பினால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் ஒபாமா எச்சரித்துள்ளார். இதனால் உக்ரைன் பிராந்தியத்தில் போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ளது.