பாக்தாத்: ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் பாக்தாதி உயிருடன் தான் உள்ளார். அவர் பேசிய ஆடியோ டேப் வெளியிடப்பட்டுள்ளது.
ஈராக்கின் மொசுல் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அந்நாட்டு படைகள் நடத்திய தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி படுகாயம் அடைந்ததாக அந்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சர் காலித் அல் ஒபைதி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தார்.
ஆனால் சனிக்கிழமை அல் கைம் நகரில் நடந்த தாக்குதலில் தான் பாக்தாதி படுகாயம் அடைந்தார் என்று ஈராக் உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.
பாக்தாதி இறந்துவிட்டதாகவும், அவரது உடலை அவரது ஆதரவாளர்கள் அடக்கம் செய்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து பாக்தாதி உயிருடன் உள்ளாரா இல்லையா என்பது தெரியாமல் குழப்பமாக இருந்தது.
அவர் இறந்துவிட்டதாக சிலரும், எங்கோ உயிருடன் இருக்க வேண்டும் என்று சிலரும் தெரிவித்ததனர். இந்நிலையில் பாக்தாதி பேசும் ஆடியோவை ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் அவர் உயிருடன் தான் உள்ளார் என்பதை உலகிற்கு அறிவித்துள்ளனர்.
17 நிமிடங்கள் ஓடும் அந்த ஆடியோ உண்மையானது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதில் பாக்தாதி, ஐ.எஸ். போராளிகள் இறுதி வரை போராடுவார்கள். அமைப்பில் ஒரேயொரு வீரர் மிச்சம் இருந்தாலும் தொடர்ந்து போராடுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.