நீர்கொழும்பு பகுதியில் உருக்குலைந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து நீர்கொழும்பு, தளுபத்தை பல்லன்சேனை வீதியில் பிரான்சிஸ் சாலிஸ் மாவத்தையில் உள்ள வீடு ஒன்றிலிருந்தே குறித்த பெண்ணின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சடலம் மீட்கப்பட்ட வீட்டிற்கருகில் வசிப்பவர்கள் துர்நாற்றம் வீசுவதாகப் பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கு அமையவே, குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸார் விட்டைத் திறந்து பார்த்தபோது வீட்டின் அறை ஒன்றிலிருந்து உருக்குலைந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட பெண் திருமணமானவரெனவும் குறித்த பெண்ணின் கணவர் தலைமறைவாகியுள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார், கணவனை கைதுசெய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
சில மாதங்களுக்கு முன் குறித்த தம்பதியினர் குறித்த வீட்டுக்கு வாடகைக்கு வந்ததாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.