சர்வதேச அழுத்தங்களின் காரணமாக தேசிய கொள்கைகளையும் இலங் கையின் பாதையையும் திசைதிருப்ப அரசாங்கம் ஒருபோதும் முயற்சிக்காது.
இலங்கையின் உள்ளக விவகாரங்களை நாமே தீர்ப்போம். அதற்கான மாற்றமே இந்த நல்லாட்சியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
தேசிய ஒற்றுமையை குழப்பவே சர்வதேச அமைப்புகள் தொடர்ந்தும் பொய்க்குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றன என்றும் அவர் கூறினார்.
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் உள்ளிட்ட அமைப்புகளும் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் இந்த விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில், இறுதிக் கட்ட யுத்தத்தில் யுத்த குற்றங்களை இராணுவத்தினர் மேற்கொள்ளவில்லை என்பதை நாம் உறுதிக்காக கூறுகின்றோம்.
இந்த நாட்டின் முப்பது ஆண்டுகால யுத்தத்தை நிறைவிற்கு கொண்டுவந்த எமது இராணுவத்தை பொய்யான காரணிகளினால் தண்டிக்க நாம் ஒருபோதும் இடமளிக்க போவதில்லை.
அதேபோல் தனிப்பட்ட காரணிகளை நாம் எமது சட்டத்திற்கு அமைவாக விசாரித்து வருகின்றோம். இலங்கையின் உள்ளக விவகாரங்களை எமது நீதிமன்றங்களில், இலங்கையின் சட்டத்திற்கு அமைவாக நாம் கையாள வேண்டும்.
இதில் எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. இதை மாற்றியமைக்க யார் முயற்சித்து வந்தாலும் அதற்கு நாம் இடமளிக்க போவதில்லை.
மேலும் புலிகளை நாம் அழித்த போதிலும் சர்வதேச ரீதியில் அவர்களின் செயற்பாடுகள் இன்னும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இன்றும் சர்வதேச நாடுகளில் புலிகளின் மீள் இயக்கம் உள்ளது. புலம்பெயர் அமைப்புகளின் உதவியுடன் சர்வதேச அமைப்புகளின் மூலமாக இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கப்படுகின்றது.
இன்றும் ஐக்கிய நாடுகள் சபையிலும், சிவில் அமைப்புகளின் மூலமாகவும் அவர்களின் குரலே ஒலித்து வருகின்றது. ஆகவே இவற்றை நாம் கவனத்தில் கொள்ளத்தேவையில்லை.
கடந்த காலத்தில் இலங்கை மீது இருந்த நேரடி அழுத்தங்கள் இன்று நல்லாட்சி அரசாங்கத்தில் குறைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி , பிரதமரின் சர்வதேச நட்புறவுகள் இன்று எமது நாட்டை அழுத்தங்களில் இருந்து மீட்டுள்ளது.
எனினும் இப்போது எழும் சில அழுத்தங்களுக்கு அஞ்சியோ அல்லது மாற்றுக்கொள்கையை உருவாக்கும் நோக்கத்திலோ எமது இராணுவத்தை தண்டிக்கும் எந்தவொரு வாய்ப்பையும் எம்மால் ஏற்படுத்திக்கொடுக்க முடியாது.
எமது பாதையை சர்வதேச தேவைக்கு ஏற்ற வகையில் மாற்றியமைக்க முடியாது. அவ்வாறு மாற்றியமைக்கப்பட்டால் அது நாட்டின் இறைமையில் பாதகத்தை ஏற்படுத்தும் வகையில் அமையும். ஆகவே அரசாங்கமாக நாம் ஒருபோதும் இதற்கு இடமளிக்க போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.