1972-ல் தொடங்கப்பட்ட அ.தி.மு.க., அக்டோபர் 17-ம் தேதி தனது 48-வது ஆண்டுவிழாவைக் கொண்டாடியுள்ளது. கிட்டத்தட்ட 32 ஆண்டுகள் தமிழகத்தைக் கட்டி ஆண்டுள்ளது. இந்த வரலாற்றுப் பேரியக்கத்தின் 48 வருடப் பயணம்.
அக்டோபர் 10, 1972… தி.மு.க-விலிருந்து எம்.ஜி.ஆர் தற்காலிகமாக நீக்கப்பட்டிருந்தார். இந்த நீக்கத்தைக் கண்டித்து, தமிழகமெங்கும் அவரது ரசிகர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். “தி.மு.க-விலிருந்து எம்.ஜி.ஆரை நீக்கியது, பேரறிஞர் அண்ணாவையே நீக்கியதற்குச் சமம். இதன்விளைவை தி.மு.க. சந்திக்கும்” எனக் கூறியிருந்தார்,
ராஜாஜி. அந்த வார்த்தைகளின் வலிமையை உணர்ந்துகொள்ள தி.மு.க-வுக்கு நீண்டநாள்கள் தேவைப்படவில்லை. 1972-இல் தொடங்கப்பட்ட அ.தி.மு.க., அக்டோபர் 17-ம் தேதி தனது 48-வது ஆண்டுவிழாவைக் கொண்டாடியுள்ளது.
கிட்டத்தட்ட 32 ஆண்டுகள் தமிழகத்தைக் கட்டி ஆண்டுள்ளது. இந்த வரலாற்றுப் பேரியக்கத்தின் 48 வருடப் பயணம்தான் என்ன… சற்றுத் திரும்பிப் பார்ப்போம் வாருங்கள்.
தமிழக முதல்வராக இருந்த அறிஞர் அண்ணா, பிப்ரவரி 3, 1969-ல் மறைந்தார். அவர் மறைவுக்குப் பிறகு, நெடுஞ்செழியன் தற்காலிக முதல்வராகப் பொறுப்பேற்றார்.
கட்சியும், ஆட்சியும் தனக்கே கிடைக்கும் என நெடுஞ்செழியன் காத்திருக்க, அன்றைய பொதுப்பணித்துறை அமைச்சர் மு.கருணாநிதியின் சதுரங்க ஆட்டம் தொடங்கியது.
எம்.ஜி.ஆரின் முழு ஆதரவுடன் முதல்வர் நாற்காலியை எட்டிப்பிடித்த கருணாநிதி, கட்சித் தலைவராகவும் அரியணை ஏறினார். பொதுச் செயலாளர் பதவி நெடுஞ்செழியனுக்கும், பொருளாளர் பதவி எம்.ஜி.ஆருக்கும் வழங்கப்பட்டன.
இளைஞர்களிடையே எம்.ஜி.ஆரின் செல்வாக்கு நாளுக்குநாள் வளர்ந்துகொண்டிருந்தது. 1971-இல் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டு, நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலும் அறிவிக்கப்பட்டது.
எம்.ஜி.ஆரைப் பிரசாரத்துக்கு அழைக்காமலேயே தேர்தலைச் சந்திக்க கருணாநிதி தயாரானார். இதற்கு ஆர்.எம்.வீரப்பன் உள்ளிட்ட சீனியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
எம்.ஜி.ஆர் இல்லாமல் தேர்தலில் தி.மு.க ஜெயிக்க முடியாது எனக் கருணாநிதியைச் சமாதானப்படுத்தினர். முடிவில், எம்.ஜி.ஆரின் தீவிர பிரசாரத்தால் தி.மு.க. கூட்டணி 205 இடங்களில் வெற்றிவாகை சூடியது.
கருணாநிதியிடம் வாழ்த்து பெறுவதைவிட, எம்.ஜி.ஆருடன் ஜோடியாக போட்டோ எடுத்துக்கொள்ள பல எம்.எல்.ஏ-க்கள் முண்டியடித்தனர். எம்.ஜி.ஆரின் வளர்ச்சி கருணாநிதியின் கண்களை உறுத்தியது.
இந்தச் சமயத்தில், மத்திய அரசு தமிழகத்துக்குப் போதிய நிதி வழங்குவதில்லை எனக் காரணம் காட்டி 25 ஆண்டுகளாகத் தமிழகத்தில் அமலில் இருந்த மதுவிலக்கு சட்டத்தை நீக்க கருணாநிதி முடிவெடுத்தார்.
ஆகஸ்ட் 30, 1971-ல் மதுவிலக்கு ஒழிப்பை நடைமுறைப்படுத்தியது அன்றைய தி.மு.க. அரசு. தமிழகமெங்கும் தனியார் மதுபான, கள்ளுக்கடைகள் திறக்கப்பட்டன.
இதற்கு ராஜாஜி, காமராஜர் போன்ற தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கருணாநிதி எதிர்ப்பு அரசியலைக் கையில் எடுத்திருந்த எம்.ஜி.ஆருக்கு இந்த விவகாரம் ‘லட்டு’ கணக்காகக் கையில் மாட்டியது.
செப்டம்பர் 15, 1971-இல் தனது சத்யா ஸ்டூடியோ பணியாளர்களை அழைத்துக்கொண்டு அண்ணாவின் நினைவிடத்துக்குச் சென்ற எம்.ஜி.ஆர்., மது ஒழிப்புக்கு எதிராக உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.
ஒருபக்கம் மதுக்கடைகளை தி.மு.க-வே திறந்துவிட்ட நிலையில், மறுபக்கம் அந்தக் கட்சியின் பொருளாளரான எம்.ஜி.ஆர் மது ஒழிப்புக்கு எதிராகப் பிரசாரம் செய்தது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. கருணாநிதிக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையேயான பனிப்போர் உச்சக்கட்டத்தை எட்டியது.
கருணாநிதி தலைமையை மறைமுகமாக விமர்சித்துவந்த எம்.ஜி.ஆர்., நேரடியாகவே எதிர்க்க ஆரம்பித்தார். அக்டோபர் 8, 1972-ல் திருக்கழுக்குன்றத்தில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில், கருணாநிதி உட்பட கட்சியின் தலைவர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களின் சொத்துக் கணக்கை வெளியிட வேண்டும் என்று பேசினார்.
இதைக் கட்சிப் பொதுக்குழுவின் தீர்மானமாக முன்மொழியப் போவதாகவும் அறிவித்தார். இவ்விஷயம், மதுரையிலிருந்த கருணாநிதிக்கு உளவுத்துறை மூலமாகக் கொண்டுசெல்லப்பட்டது.
நிலைமை கைமீறிச் செல்வதை உணர்ந்த கருணாநிதி, கட்சியின் கட்டுப்பாட்டை மீறிவிட்டதாக அக்டோபர் 10, 1972-ல் தி.மு.க-விலிருந்து எம்.ஜி.ஆரைத் தற்காலிகமாக நீக்கினார்.
கட்சியிலிருந்து எம்.ஜி.ஆர் நீக்கப்பட்ட சம்பவம், லட்சோபலட்சம் தொண்டர்களைக் கொதிப்படையச் செய்தது. இந்த நீக்கத்தைக் கண்டித்துப் போராட்டம் நடத்தியவர்களை கருணாநிதி அரசு கைதுசெய்தது.
1972, அக்டோபர் 14-ம் தேதி எம்.ஜி.ஆர், தி.மு.க-விலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். அக்டோபர் 16-ம் தேதி, எம்.ஜி.ஆரின் தீவிர ஆதரவாளரான உடுமலைப்பேட்டை இஸ்மாயில் என்பவர் தீக்குளித்து உயிர்நீத்த சம்பவம், எம்.ஜி.ஆர். விசுவாசிகளைக் கொந்தளிக்க வைத்தது. தனிக்கட்சி தொடங்க வேண்டிய நெருக்கடி எம்.ஜி.ஆருக்கு முற்றியது.
1975-ல் இந்திரா காந்தி கொண்டுவந்த எமர்ஜென்சிக்கு எதிராக தி.மு.க மிகப்பெரும் போராட்டங்களை முன்னெடுத்ததால், பதவிக்காலம் முடிவதற்கு முன்னதாகவே 1976-ல் தி.மு.க-வின் ஆட்சியை இந்திரா காந்தி கலைத்தார்.
தமிழகத்தில் ஒருவருடத்துக்கு ஜனாதிபதி ஆட்சி அமலில் இருந்தது. 1977-ல் அறிவிக்கப்பட்ட சட்டமன்றப் பொதுத்தேர்தலில், மார்க்சிஸ்ட் கட்சி, ஃபார்வேர்டு ப்ளாக், முஸ்லிம் லீக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அ.தி.மு.க. தேர்தலைச் சந்தித்தது.
130 இடங்களில் அ.தி.மு.க வெற்றிபெற்று, எம்.ஜி.ஆர் தமிழக முதலமைச்சராக மகுடம் சூடினார். அடுத்துவந்த 13 வருடங்களுக்கு முதல்வர் நாற்காலியை கருணாநிதியால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.
1980-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், எதிரிகளாக இருந்த தி.மு.க-வும், காங்கிரஸும் கரம்கோத்தன. கோபிச்செட்டிப்பாளையம், சிவகாசி தொகுதிகள் தவிர்த்து, மீதமிருந்த 37 தொகுதிகளிலும் அ.தி.மு.க தோல்வியைத் தழுவியது.
தி.மு.க ஆதரவுடன் இந்திரா காந்தி அரியணை ஏறினார். அடுத்த சில நாள்களிலேயே தமிழகத்தில் எம்.ஜி.ஆரின் ஆட்சி கலைக்கப்பட்டு, சட்டமன்றப் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
ஆட்சியை எப்படியாவது பிடித்தே தீருவது எனத் தவிப்பில் இருந்த கருணாநிதி, தி.மு.க போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையை 112 ஆகக் குறைத்துக் கொண்டு, காங்கிரஸ் கட்சிக்கு 114 இடங்களை வாரி வழங்கினார். எம்.ஜி.ஆரின் பிம்பம் கருணாநிதியை அந்த அளவுக்குப் பயமுறுத்தியிருந்தது. ஆனால், காலம் வேறொரு விடையை வைத்திருந்தது.
கட்சியின் நட்சத்திரப் பேச்சாளராக வளர்ந்துகொண்டிருந்த ஜெயலலிதாவை, தனது சத்துணவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் உயர்மட்ட ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக எம்.ஜி.ஆர் இணைத்துக்கொண்டார்.
கட்சிக்குள் ஜெயலலிதாவுக்கு எதிராக எதிர்ப்பலையும் எழுந்தது. எம்.ஜி.ஆரின் முழு ஆதரவும் இருந்ததால், ஜெயலலிதாவின் வளர்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை.
1984-ல் எம்.ஜி.ஆரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து, அமெரிக்காவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற, நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில், எம்.ஜி.ஆர். பார்முலா என்கிற முறையை அ.தி.மு.க. முதல்முறையாக அமல்படுத்தியது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு தேசியக் கட்சியான காங்கிரஸுக்கு 70 சதவிகித இடங்களையும், சட்டமன்றத் தேர்தலுக்கு 30 சதவிகித இடங்களையும் அ.தி.மு.க. ஒதுக்கியதுதான் அந்த பார்முலாவின் சாராம்சம்.
அமெரிக்காவில் எம்.ஜி.ஆர் சிகிச்சைபெறும் காட்சிகள் வீடியோக்களாக எடுக்கப்பட்டு, தமிழகத்தின் அனைத்துத் திரையரங்குகளிலும் திரையிடப்பட்டன. பொதுமக்கள் மத்தியில் எம்.ஜி.ஆர் மீது மிகப்பெரிய அனுதாப அலை வீசியது.
1984 நாடாளுமன்றத் தேர்தலில், அ.தி.மு.க கூட்டணி 37 இடங்களையும், சட்டமன்றத் தேர்தலில் 195 இடங்களையும் பெற்று பெருவெற்றி பெற்றது. மூன்றாவது முறையாக எம்.ஜி.ஆர் தமிழக முதலமைச்சராக அரியணை ஏறினார்.
தி.மு.க-வினர் சோர்வடைய தொடங்கினர். இந்த நிலையில், ஜெயலலிதா மாநிலங்களவை உறுப்பினராக 1984-ல் தேர்வுசெய்யப்பட்டார்.
அறிஞர் அண்ணா அமர்ந்திருந்த இருக்கை எண்ணான 185, ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டது. இதற்கு கட்சிக்குள் கடும் எதிர்ப்பலை எழுந்தது.
ஜூலை 12, 1986-ல் மதுரையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் ரசிகர் மன்ற மாநாட்டில், எம்.ஜி.ஆருக்கு தங்க முலாம் பூசப்பட்ட ஆறடி வெள்ளிச் செங்கோலை ஜெயலலிதா பரிசளித்தார்.
அந்த மாநாட்டில், ஜெயலலிதாவுக்கு முக்கியக் கட்சிப் பொறுப்பு வழங்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு நிலவியவேளையில், எந்த அறிவிப்பும் இல்லாமல் மாநாடு முடிந்தது.
ஜெயலலிதாவின் மனதுக்குள் கனல் பூத்தது. அ.தி.மு.க-வுக்குள் ஜெயலலிதா அணி, எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாளின் அணி என இரண்டு குழுக்கள் தீவிரமாகச் செயல்பட்டன. மதுரை ரசிகர் மன்ற மாநாட்டுக்குப் பிறகு இரண்டு அணிகளும் நேரடியாகவே மோதிக்கொண்டன.
இந்தக் காலகட்டத்தில்தான், கட்சிக்குள் தனக்கு எதிராக நடைபெறும் சதிகளை மனம்விட்டுப் பேசுமளவுக்கு ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராக சசிகலா மாறினார். மன்னார்குடியில் இருந்த சசிகலாவின் உறவுகள், ஜெயலலிதாவுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காக போயஸ் கார்டனுக்குள் நுழைந்தன.
எம்.ஜி.ஆரின் இறுதி ஊர்வலத்தில், அவரது உடல் வைக்கப்பட்டிருந்த ராணுவ வண்டியில் ஜெயலலிதா ஏற முற்பட்டபோது, ஜானகி ஆதரவு எம்.எல்.ஏ ஒருவரால் கீழே தள்ளப்பட்டார்.
இந்தக் காட்சி, ஜெயலலிதா மீது அ.தி.மு.க தொண்டர்களிடையே அனுதாபத்தை உருவாக்கியது. அ.தி.மு.க இரண்டாக உடைந்தது.
அப்போதைய பிளவின்போது, ஜானகி அணியில் ஆர்.எம்.வீரப்பன், சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன் உட்பட பல மூத்த அமைச்சர்கள் இருந்தனர். ஜெயலலிதா அணியில் நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன், சாத்தூர் ராமச்சந்திரன், எஸ்.திருநாவுக்கரசு போன்ற தலைவர்கள் இருந்தனர்.
இரு அணிகளும் போட்டி பொதுக்குழு நடத்த முயற்சி செய்தன. இந்த முயற்சியை ஜானகி அணி கைவிட்ட சூழலில், ஜெயலலிதா அணி மட்டும் பொதுக்குழு நடத்த ஆயத்தமானது.
போலீஸ் தடியடி காரணமாகப் பொதுக்குழு கூட்டம் கலைக்கப்பட்டு, ஜெயலலிதா உட்பட பல தலைவர்கள் கைதுசெய்யப்பட்டனர். இந்த நிலையில், ஆர்.எம்.வீரப்பனின் ஆதரவுடன் ஜானகி அம்மாள் ஜனவரி 7, 1988-ல் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். 21 நாள்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்கச் சொல்லி, ஆளுநர் எஸ்.எல்.குரானா கெடுவிதித்தார். தமிழகச் சட்டமன்றம் தகிதகித்தது.
அப்போதிருந்த 132 அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களில், 33 பேர் ஜெயலலிதாவை ஆதரித்தனர். மற்றவர்கள் ஜானகி பக்கம் நின்றனர்.
யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை இல்லாததால் பெரும் குழப்பம் நிலவியது. நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளப் போவதில்லை என தி.மு.க., இந்திரா காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. பெரும் கலவரச் சூழல் உருவானது.
ஜனவரி 26-ம் தேதி கூடிய தமிழகச் சட்டமன்றம், வரலாற்றில் அப்படியொரு மோசமான தினத்தைக் கண்டதில்லை. ஜெயலலிதா ஆதரவு எம்.எல்.ஏ-க்களைத் தகுதிநீக்கம் செய்துவிட்டு, வெறும் 111 எம்.எல்.ஏ-க்களுடன் வாக்கெடுப்பை சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன் நடத்தினார். ஜானகி அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. சட்டமன்றத்தில் கலவரம் வெடித்தது.
ஜானகி அணி எம்.எல்.ஏ-க்களும், ஜெயலலிதா அணி எம்.எல்.ஏ-க்களும் நேரடியாக மோதிக்கொண்டனர். கையில் கிடைத்த மைக்குகள், பேப்பர் வெயிட்டுகளால் ஒருவரையொருவர் கடுமையாகத் தாக்கிக்கொண்டனர்.
அப்போதைய சென்னை மாநகர காவல் ஆணையர் வால்டர் தேவாரம் தலைமையிலான போலீஸார் சட்டமன்றத்துக்குள் நுழைந்து தடியடி நடத்தி, எம்.எல்.ஏ-க்களை விரட்டினர்.
சட்டமன்றத்தில் நடைபெற்ற கலவரம் காரணமாக, ஜனவரி 30, 1988-ல் ஜானகி அம்மாள் தலைமையிலான அ.தி.மு.க அரசை ராஜீவ் காந்தியின் மத்திய அரசு கலைத்தது. தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சி அமலானது.
1989-ல் நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில், அ.தி.மு.க., ஜெ, ஜா என இரண்டு அணிகளாகப் பிளவுப்பட்டு போட்டியிட்டன. முதல்முறையாக இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டது.
ஜெயலலிதா அணி சேவல் சின்னத்திலும், ஜானகி அணி இரட்டைப் புறா சின்னத்திலும் தேர்தலைச் சந்தித்தன. இந்தத் தேர்தலில், ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்ட ஜானகி தோல்வியடைந்தார். போடிநாயக்கனூர் தொகுதியில் வெற்றிபெற்ற ஜெயலலிதா 27 எம்.எல்.ஏ-க்களுடன் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரானார். 13 வருடங்களுக்குப் பிறகு தி.மு.க. ஆட்சியைப் பிடித்திருந்தது. கருணாநிதி முதல்வரானார்.
ஜெயலலிதா தலைமையின்கீழ், 1991 சட்டமன்றத் தேர்தலை காங்கிரஸ் கூட்டணியுடன் அ.தி.மு.க எதிர்கொண்டது. 164 இடங்களில் அபார வெற்றிபெற்று, முதல்முறையாக ஜெயலலிதா முதல்வராக அரியணையில் அமர்ந்தார்.
ஜெயலலிதாவின் வெற்றியில் முக்கியப் பங்காற்றியவர் சசிகலாவின் கணவரான ம.நடராஜன். போயஸ் கார்டனில் இருந்து பெயரளவுக்கு ஓரங்கட்டப்பட்டு இருந்தாலும், டெல்லிக்கும், அ.தி.மு.கவுக்கும் இடையே ஒருபாலமாக அவர் இருந்தார். எம்.ஜி.ஆருக்குப் பிறகான அ.தி.மு.க வரலாற்றில், பல சூத்திரங்களைப் போட்டு வெற்றி கண்டவரும் அவர்தான்.
1991-96 ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் பல ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. சசிகலாவின் உறவுகள் போட்ட ஆட்டத்தால், அ.தி.மு.க. ஆட்சிமீது கடும் எதிர்ப்பலை எழுந்தது.
வீதிக்கு வீதி, அ.தி.மு.க அரசின் ஊழல்களை தி.மு.க-வினர் மேடை போட்டுப் பேசினர். இவ்வளவு விமர்சனங்களுக்கு இடையில், இந்தியாவையே திரும்பிப் பார்க்கவைத்த பிரமாண்ட திருமணத்தை ஜெயலலிதா நடத்தினார்.
சசிகலாவின் அண்ணன் மகன் சுதாகரனை, தனது வளர்ப்பு மகனாக ஜெயலலிதா தத்தெடுத்துக்கொண்டார். சுதாகரனுக்கும், நடிகர் சிவாஜி கணேசனின் மகள்வழி பேத்தியுமான சத்தியலட்சுமிக்கும் செப்டம்பர் 7, 1995-ல் மிக விமரிசையாகத் திருமணம் நடைபெற்றது.
அன்றைய மதிப்பில் சுமார் 8 கோடி ரூபாய் செலவில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்ற இந்தத் திருமணம், ஏற்கெனவே அ.தி.மு.க மீது கொதிப்பிலிருந்த வாக்காளர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அது 1996 சட்டமன்றத் தேர்தலிலும் எதிரொலித்தது. நடிகர் ரஜினி முதல்முறையாக அரசியல் வாய்ஸ் கொடுத்தது, இத்தருணத்தில்தான்.
“மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தால், தமிழ்நாட்டை ஆண்டவனால்கூடக் காப்பாற்ற முடியாது” என ரஜினி பேசியது, பட்டித்தொட்டி எங்கும் பரவியது.
காங்கிரஸில் இருந்து பிரிந்து வந்து தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியைத் தொடங்கிய ஜி.கே.மூப்பனார், 1996 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டார்.
இந்தக் கூட்டணிக்கு ரஜினியின் ஆதரவு இருந்தது. 1991-96 அ.தி.மு.க ஆட்சியின் ஊழல் குற்றச்சாட்டுகளை பிட் நோட்டீஸ்களாக அடித்து பட்டித் தொட்டியெங்கும் தி.மு.க-வினர் பரப்பினர்.
தேர்தலில் அ.தி.மு.க. படுதோல்வியை அடைந்தது. பர்கூர் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா, தி.மு.க வேட்பாளர் இ.ஜி.சுகவனத்திடம் 8,366 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். 221 எம்.எல்.ஏ-க்கள் பலத்துடன் கருணாநிதி முதல்வரானார்.
தேர்தல் தோல்வி அ.தி.மு.க-வில் பிளவை உண்டாக்கியது. திருநாவுக்கரசர் தலைமையில் ஒருபிரிவினர் அ.தி.மு.க-விலிருந்து விலகி தனிக்கட்சி தொடங்கினர்.
இதுவே, பின்னர் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. எனப் பெயர் மாற்றப்பட்டது. 1996-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன், ஜெயலலிதா, சசிகலா, அவரது உறவுகள்மீது சொத்துக்குவிப்பு வழக்குகள் பாய்ந்தன. 1996, ஆகஸ்ட் 25-ம் தேதி ‘சுதாகரன் தனது வளர்ப்பு மகனே இல்லை’ என ஜெயலலிதா அறிவித்தார்.
ஆனால், காலம் கடந்திருந்தது. ஜெயலலிதாவும், அ.தி.மு.க-வும் இப்படியொரு இமாலய தோல்வியிலிருந்து எப்படி மீளப் போகிறார்கள்?’ என அரசியல் அரங்கில் பேச்சு எழுந்தது. ஆனால், இரண்டே வருடத்தில் அ.தி.மு.க மீண்டு வந்தது.
1998-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், 18 தொகுதிகளில் அ.தி.மு.க-வை வெற்றிபெறவைத்து, தனது ஆளுமையை ஜெயலலிதா நிரூபித்தார். தி.மு.க-வின் ஆட்சியை வாஜ்பாய் கலைக்க மறுத்ததால், பி.ஜே.பி-க்கு ஜெயலலிதா அளித்துவந்த ஆதரவை வாபஸ் வாங்கினார். வாஜ்பாய் ஆட்சி கவிழ்ந்தது.
2001-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அ.தி.மு.க அரியணையைப் பிடித்தது. டான்சி வழக்கில் குற்றவாளி எனக் கீழமை நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கியிருந்ததால், ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றது செல்லாது என செப்டம்பர் 2001-ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. வருவாய்த்துறை அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு `ஜாக்பாட்’ அடித்தது.
தமிழகத்தின் முதலமைச்சராக செப்டம்பர் 21, 2001-ல் ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றுக் கொண்டார். மார்ச் 1, 2002 வரை முதல்வர் பொறுப்பை வகித்த ஓ.பி.எஸ்., தினமும் போயஸ் கார்டனுக்குச் செல்வதை வழக்கமாக்கி இருந்தார்.
கார்டனின் ஒப்புதல் இல்லாமல் எந்தக் கோப்பிலும் ஓ.பி.எஸ்ஸின் விரல் நகம்கூடத் தீண்டியிருக்காது. நிலுவையிலிருந்த வழக்குகளில் தீர்ப்பு வெளியான பின்பு, ஆண்டிப்பட்டி தொகுதியில் வெற்றிபெற்ற ஜெயலலிதா, மார்ச் 2002-ல் தமிழக முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார்.
2006 சட்டமன்றத் தேர்தலில், 61 எம்.எல்.ஏ-க்களுடன் அ.தி.மு.க. எதிர்க்கட்சி வரிசையைப் பிடித்தது. சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக ஓ.பி.எஸ் பொறுப்பேற்றார். 2011 சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க 146 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது.
2014 நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கூட்டணியும் இல்லாமல், 37 இடங்களை வென்ற அ.தி.மு.க., நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாகவும் உருவெடுத்தது.
அதே ஆண்டு, சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
முதலமைச்சர் பதவியை இழந்த ஜெயலலிதா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். இரண்டாவது முறையாக ஓ.பி.எஸ். முதல்வரானார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடகா உயர் நீதிமன்றம் விடுதலை செய்த பின்னர், மீண்டும் முதலமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்றார்.
2016 சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க வெற்றிபெற்று மீண்டும் அரியணை ஏறியது. எம்.ஜி.ஆருக்குப் பிறகு, தொடர்ச்சியாகத் தேர்தலில் வெற்றிபெற்ற பெருமையை அ.தி.மு.க-வுக்கு ஜெயலலிதா தேடித் தந்தார்.
செப்டம்பர் 22, 2016-ல், உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா, 75 நாள்கள் சிகிச்சையில் இருந்தார்.
அந்தச் சமயத்தில் முதல்வருக்கான பொறுப்புகள் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த ஓ.பி.எஸ்ஸுக்கு வழங்கப்பட்டன. சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5, 2016-ல் மறைந்தார். மூன்றாவது முறையாக ஓ.பி.எஸ் மீண்டும் முதல்வரானார்.
அ.தி.மு.க-வைத் தங்கள் கட்டுக்குள் கொண்டுவர சசிகலா உறவுகள் முண்டியடித்தன. சென்னை ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உடலைச் சுற்றிலும் சசிகலாவின் உறவினர்களே நிரம்பியிருந்தது தொண்டர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.
எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட குழப்பம், மீண்டும் அ.தி.மு.க-வுக்குள் முளைத்தது. அதேநேரத்தில், டெல்லி பி.ஜே.பி., வேறொரு ஆட்டத்தை ஆட ஆரம்பித்தது.
டிசம்பர் 29, 2016-ல் அ.தி.மு.க-வின் தற்காலிகப் பொதுச் செயலாளராக சசிகலாவைப் பொதுக்குழு தேர்ந்தெடுத்தது. பிப்ரவரி 5, 2017-ல், அ.தி.மு.க சட்டமன்றக் கட்சித் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மளமளவென காட்சிகள் அரங்கேறின. இதையடுத்து, தனது முதல்வர் பொறுப்பை ராஜினாமா செய்வதாக ஆளுநருக்குக் கடிதம் அனுப்பிய ஓ.பி.எஸ்., இரண்டே நாளில் பிப்ரவரி 7-ம் தேதி ஜெயலலிதா சமாதியில் தியானம் மேற்கொண்டு, சசிகலாவின் கட்டாயத்தால்தான் தனது பதவியை, தாம் ராஜினாமா செய்ததாகக் கூறினார். அ.தி.மு.க-வுக்குள் பூகம்பம் வெடித்தது.
டெல்லி பி.ஜே.பி-யின் கைப்பாவையாக ஓ.பி.எஸ். செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டிய சசிகலா தரப்பு, ஓ.பி.எஸ்ஸை கட்சியின் பொருளாளர் பொறுப்பில் இருந்து நீக்கியது. இந்தப் பரபரப்பான சூழலில், சொத்துக்குவிப்பு மேல்முறையீடு வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டு, சசிகலா சிறைசென்றார்.
இதற்கு முன்னதாக கூவத்தூரில் தனது 124 ஆதரவு எம்.எல்.ஏ-க்களையும் கூட்டி, எடப்பாடி பழனிசாமியை முதல்வராகத் தேர்ந்தெடுக்கவைத்தார்.
டி.டி.வி.தினகரனை அ.தி.மு.க-வின் துணைப் பொதுச்செயலாளராக நியமித்துவிட்டுச் சிறைக்குக் கிளம்பினார்.
அ.தி.மு.க இரண்டாக உடைந்தது. இரட்டை இலைச் சின்னம் இரண்டாவது முறையாக முடக்கப்பட்டது. ஏப்ரல், 2017-ல் அறிவிக்கப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், ஓ.பி.எஸ். தலைமையிலான புரட்சித்தலைவி அம்மா அணிக்கு இரட்டை மின்கம்பம் சின்னமும், சசிகலா தலைமையிலான அம்மா அ.தி.மு.க அணிக்கு தொப்பி சின்னமும் ஒதுக்கப்பட்டது. சசிகலா அணியின் சார்பில் டி.டி.வி.தினகரன் போட்டியிட்டார். பணப்புழக்கத்தைக் காரணம் காட்டி அந்தத் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
விறுவிறுப்பாகச் சென்றுகொண்டிருந்த இந்த ஆட்டத்தில், காட்சிகள் திடீரென மாறின. எதிரும் புதிருமாகச் செயல்பட்ட ஓ.பி.எஸ்., எடப்பாடி பழனிசாமி இருவரும் ஆகஸ்ட் 2017ல் கரம்கோத்தனர்.
சசிகலாவுக்கு அ.தி.மு.க-வில் எந்த உரிமையும் இல்லை என அறிவித்தனர். செப்டம்பர் மாதம் நடைபெற்ற பொதுக்குழுவில், கட்சியின் சட்டத்திட்டம் மாற்றப்பட்டு, பொதுச்செயலாளர் என்கிற பதவி நீக்கப்பட்டது.
ஒருங்கிணைப்பாளர் என்கிற புதுப் பதவி உருவாக்கப்பட்டது. கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பி.எஸ்ஸும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் பொறுப்பேற்றனர். இதுதொடர்பாக, சசிகலா தொடர்ந்த வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
சசிகலா செய்த நியமனங்கள், நீக்கங்கள் செல்லாது எனப் பொதுக்குழு ஏற்றுக்கொண்ட தீர்மானத்தின் அடிப்படையில், அ.தி.மு.க-வின் துணைப் பொதுச்செயலாளராகச் செயல்பட்ட டி.டி.வி.தினகரன் ஓரங்கட்டப்பட்டார்.
அ.தி.மு.க-வை மீட்டெடுக்கப் போவதாகக் கூறிய அவர், மார்ச் 15, 2018-ல் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்கிற கட்சியைத் தொடங்கினார்.
இரட்டை இலைச் சின்னத்தை ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ் அணிக்கு, 2017, நவம்பர் 23-ல் தேர்தல் ஆணையம் வழங்கியது. இதை பிப்ரவரி 2019-ல் டெல்லி உயர் நீதிமன்றம் உறுதிசெய்தது.
இன்றைய நிலையில், அ.தி.மு.க-வும், இரட்டை இலைச் சின்னமும் மதுசூதனன் தலைமையிலான ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். அணியிடமே உள்ளது.
இந்த 48 ஆண்டுக்கால வரலாற்றில், எத்தனையோ ஏற்ற இறக்கங்களைக் கண்ட அ.தி.மு.க., இன்று மிகப்பெரும் புயலுக்கு நடுவே சிக்கியுள்ளது. டெல்லி பி.ஜே.பி-யின் நெருக்கடி, உட்கட்சி சண்டைகள், ஒருபக்கம் தினகரன், மறுபக்கம் சசிகலா என ஏகப்பட்ட குழப்பங்கள் அக்கட்சியைச் சூழ்ந்துள்ளன.
எல்லாக் குழப்பங்களும் முறியடிக்கப்பட்டு, 1989-ல் ஏற்பட்ட தெளிவான மாற்றம்போல், இப்போதும் நிகழுமா என சாமான்ய தொண்டர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.
எல்லாவற்றையும் சாட்சிகளாக ராயப்பேட்டை அலுவலகத்திலுள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் சிலைகள் பார்த்துக்கொண்டிருக்கின்றன. அச்சிலைகள் மௌனமாக இருக்கலாம். ஆனால், காலம் மவுனிக்காது.