ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ஷார்ஜாவில் நேற்றிரவு நடந்த 9-வது லீக் ஆட்டத்தில் ஜார்ஜ் பெய்லி தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும், ஷிகர் தவான் தலைமையிலான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியும் மோதின.
டாஸ் ஜெயித்த ஐதராபாத் கேப்டன் தவான் முதலில் பஞ்சாப்பை பேட் செய்ய பணித்தார். இதன்படி ஷேவாக்கும், புஜாராவும் பஞ்சாப்பின் இன்னிங்சை தொடங்கினர். முதல் இரு ஓவரில் (3 ரன்) நிதானம் காட்டிய இந்த ஜோடி, அதன் பிறகு அதிரடியில் இறங்கியது.
இர்பான் பதானின் ஓவரில் ஒரு சிக்சரும், 2 பவுண்டரியும் விரட்டி ஷேவாக் வாணவேடிக்கையை தொடங்கி வைத்தார். ஸ்டெயினின் ஒரே ஓவரில் புஜாரா 3 பவுண்டரியை ஓட விட்டார். சிறப்பான தொடக்கம் தந்த இந்த ஜோடி 51 ரன்களில்(6.4 ஓவர்) பிரிந்தது. ஷேவாக் 30 ரன்னிலும் (22 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்), புஜாரா 35 ரன்னிலும் (32 பந்து, 6 பவுண்டரி) கேட்ச் ஆனார்கள்.
இதன் பின்னர் மேக்ஸ்வெல்லும், டேவிட் மில்லரும் ஜோடி சேர மைதானத்தில் ஆர்ப்பரிப்பு அதிகமானது. மேக்ஸ்வெல் 11 ரன்களில் இருந்த போது கொடுத்த எளிதான கேட்ச் வாய்ப்பை டேவிட் வார்னர் நழுவ விட அது தான் அவர்களுக்கு எமனாக மாறியது.அதன் பிறகு விசுவரூபம் எடுத்த மேக்ஸ்வெல், சிக்சர் மழை பொழிந்தார்.
சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ராவின் ஒரே ஓவரில் ‘ஹாட்ரிக்’ சிக்சர் பறக்க விட்டார். இதில் 94 மீட்டர் தூரத்திற்கு பறந்த ஒரு பந்து மைதானத்தின் மேற்கூரையில் போய் விழுந்தது. அதே ஓவரில் மில்லரும் ஒரு சிக்சர் அடித்தார். இதனால் அந்த ஓவரில் 25 ரன்கள் வந்தது. ஐ.பி.எல். போட்டிகளில் மிஸ்ரா ஒரே ஓவரில் வாரி வழங்கிய அதிகபட்ச ரன் எண்ணிக்கை இது தான்.
அத்துடன் மேக்ஸ்வெல்லின் தாண்டவம் ஓய்ந்து விடவில்லை. இன்னொரு பக்கம் அவருக்கு அதிர்ஷ்ட தேவதையின் கருணையும் கிடைத்துக் கொண்டே இருந்தது. 62 ரன்களில் இருந்த போது டேரன் சேமியின் பந்து வீச்சில் கேட்ச் ஆகி, வெளியேறிக் கொண்டிருந்தார். அப்போது அவரை எல்லைக்கோடு அருகே நிறுத்திய நடுவர், சேமியின் பந்து வீச்சை பரிசோதித்த போது அது நோ-பால் என்று தெரியவந்தது. இதனால் மறுபடியும் பேட் செய்யும் வாய்ப்பு மேக்ஸ்வெல்லுக்கு கிடைத்தது.
193 ரன்கள் குவிப்பு
அணியின் ஸ்கோர் 154 ரன்களாக உயர்ந்த போது மில்லர் 10 ரன்களில் (10 பந்து) ஆட்டம் இழந்தார். அமித் மிஸ்ராவின் ஓவரில் மறுபடியும் 2 சிக்சர்களை நொறுக்கிய மேக்ஸ்வெல் மீண்டும் சிக்சருக்கு முயற்சித்த போது கேட்ச் ஆனார். அவர் 95 ரன்களில் (43 பந்து, 5 பவுண்டரி, 9 சிக்சர்) விக்கெட்டை பறிகொடுத்தார்.
2 ஓவர் எஞ்சியிருந்த நிலையில், மேக்ஸ்வெல்லின் வெளியேற்றத்தால் 200 ரன்களை கடப்பது போல் சென்ற ஸ்கோர் இறுதி கட்டத்தில் சற்று குறைந்து போனது. அடுத்து வந்த கேப்டன் ஜார்ஜ் பெய்லி 10 ரன்னிலும், மிட்செல் ஜான்சன் 4 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.
20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் குவித்தது. ஐதராபாத் தரப்பில் ஸ்டெயின்(4 ஓவரில் 26 ரன்), புவனேஷ்வர்குமார் (4 ஓவரில் 19 ரன் கொடுத்து 3 விக்கெட்) தவிர மற்ற அனைவரும் ரன்களை வாரி வழங்கினர்.
பின்னர் 194 ரன்கள் இலக்கை நோக்கி ஐதராபாத் அணி ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 1 ரன்னில் கேட்ச் ஆனார். இதையடுத்து ஆரோன் பிஞ்ச் (19 ரன்), டேவிட் வார்னர் (8 ரன்) இருவரையும் ஒரே ஓவரில் வேகப்பந்து வீச்சாளர் எல்.பாலாஜி காலி செய்ய, ஐதராபாத் அணி தடம் புரண்டது.
இந்த வீழ்ச்சியில் இருந்து ஐதராபாத் அணியால் கடைசி வரை நிமிரவே முடியவில்லை. அதிகபட்சமாக லேகேஷ் ராகுல் 27 ரன்கள் எடுத்தார். இறுதியில் அந்த அணி 19.2 ஓவர்களில் 121 ரன்களுக்கு சுருண்டது. இதன் மூலம் 72 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது. பஞ்சாப் தரப்பில் தமிழகத்தை சேர்ந்த பாலாஜி 4 விக்கெட்டுகளும், மிட்செல் ஜான்சன், அக்ஷர் பட்டேல் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
பஞ்சாப் அணி தொடர்ச்சியாக பெற்ற 3-வது வெற்றி (ஹாட்ரிக்) இதுவாகும். ஏற்கனவே சென்னை மற்றும் ராஜஸ்தானை அணிகளையும் பஞ்சாப் தோற்கடித்து இருந்தது. ஐதராபாத் அணிக்கு இது 2-வது தோல்வியாகும்.