சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு கடந்த 16 ஆம் திகதி இலங்கை வந்தார். இலங்கையில் பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கும் வகையில் 27 ஒப்பந்தங்கள் இந்த விஜயத்தின் போது சீனாவுக்கும் இலங்கைக்குமிடையில் கைச்சாத்திடப்பட்டன.
இதில் முக்கியமான ஒப்பந்தம் கொழும்பு காலிமுகத் திடலுக்கு அருகே நிர்மாணிக்கப்படவுள்ள துறைமுக நகரமாகும். இந்நகர் நிர்மாணிக்கபட்டவுடன் இலங்கையின் சுவர்க்கபுரியென வர்ணிக்கப்படும் அளவுக்கு எழில் கொஞ்சும் நகராக விளங்குமென அதன் மாதிரியை பார்த்தாலே புரிந்து கொள்ள முடியும்.
1337 மில்லியன் அமெரிக்கடொலர் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இத் துறைமுக நகர நிர்மாணப்பணிகளை சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் கடந்த 17 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
கொழும்பு காலிமுகத் திடலுக்கு எதிரேயுள்ள கடற்பரப்பை, நிரப்பி மொத்த பூமிப் பரப்பிற்கு 233 ஹெக்டெயரை இணைத்துக்கொண்டுள்ளதாக இலங்கைத் துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இலங்கைத் துறைமுக அதிகாரசபை மற்றும் சீன மக்கள் குடியரசின் சைனா கொம்யூனிகேஷன் கன்ஸ்ட்ரக் ஷன் நிறுவனத்துடன் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் சைனா ஹாபர் என்ஜினியரிங் நிறுவனத்தால் கொழும்பு துறைமுக நகரம் நிர்மாணிக்கப்படுகின்றது.
இத்திட்ட நிர்மாணப்பணிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தமானது கடந்த 16 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இருதரப்பினரிடையேயும் கைச்சாத்திடப்பட்டது. இலங்கையில் முதல் தடவையாக கடற்பிரதேசமொன்றை நிரப்பி நகரமொன்று நிர்மாணிக்கப்படுவது பெருமைக்குரியதாகும்.
இதேவேளை, துறைமுக நகரத்தின் முதற்கட்டப் பணிக்காக 1337 மில்லியன் அமெரிக்க டொலர் செலவு செய்யப்பட உள்ளதுடன் சைனா கொம்யூனிகேஷன் கன்ஸ்ட்ரக் ஷன் நிறுவனம் அத்திட்டத்தில் முதலீடு செய்யவுள்ளது.
நவீன வசதிகளுடன் கூடிய விடுதிகள், உணவு விடுதிகள், நீச்சல் தடாகங்கள், விளையாட்டு வசதிகள், உடற்பயிற்சிக் கூடங்கள் உள்ளிட்டவை நிர்மாணிக்கப்படவுள்ளன.
சீனாவின் உதவியுடன் இலங்கையில் பல அபிவிருத்தி திட்டங்கள் இதற்கு முன்னரும் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இத்திட்டத்தினூடாக மேற்கொள்ளப்படும் நேரடி முதலீடுகள் காரணமாக மேலும் பல அபிவிருத்தி முன்னேற்றங்கள் இடம்பெற சாதகமான சூழல் அமைந்துள்ளது.
புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இப்பூமிப் பிரதேசத்தில் 170 ஹெக்டெயர்களை அபிவிருத்தி நிர்மாணப் பணிகளுக்காகவும், ஏனைய 63 ஹெக்டெயர்களை பொது வசதிகளாகிய நீரோடைகள், நடைபாதைகள் மற்றும் பூங்காக்கள் போன்றவற்றிற்காக உபயோகிப்பதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளதுடன்,
இதன் நிர்மாணப் பணிகள் எதிர்வரும் 8 வருட காலப்பகுதிகளில் நிறைவடைய உள்ளது.
இலங்கைத் துறைமுக அதிகாரசபையின் செயற்றிட்டமாக நடைபெறும் இந்நிர்மாண முதலீட்டுக்காக, இலங்கை முதலீட்டு சபையால் வெளிநாட்டு முதலீடுகளுக்கு வழங்கப்படும் வரிவிலக்கும் வழங்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மற்றும் சீன மக்கள் குடியரசுத் தலைவர் ஷீ ஜின்பிங் ஆகியோரால் கொழும்பு துறைமுக வளாகத்தில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த அபிவிருத்தி வேலைத்திட்டமானது, இலங்கை அபிவிருத்தி வரலாற்றில் இதுவரை மேற்கொள்ளப்படாத பெருந்தொகையான வெளிநாட்டு முதலீட்டு அபிவிருத்தி வேலைத்திட்டமாகும்.
கொழும்பு துறைமுகத்தின் சொர்க்க பூமியாக திகழும் இவ்வேலைத் திட்டமானது, நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்யும் வகையில் புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்குதல், சுற்றுலாத்துறை வளர்ச்சியினை மேம்படுத்தல், வெளிநாட்டு வருவாயை அதிகளவு பெற்றுத்தரல் மற்றும் தெற்கு ஆசியாவின் முதன்மைமிக்க வர்த்தக கேந்திர நிலையமாக்கிடும் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ளல் போன்றவற்றை செயற்படுத்த உள்ளது.
சீனாவிற்கும், இலங்கைக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்தும் வகையில் 28 வருடங்களின் பின்னர் சீன ஜனாதிபதி கடந்த 16 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார்.
இதன் தொடர்ச்சியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிற்கும் சீன ஜனாதிபதிக்கும் இடையிலான உத்தியோக பூர்வ சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பின் போது, இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமாக்கும் திட்டத்தின் கீழ் சீனாவும், இலங்கையும் 27 ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டன.
குறிப்பாக, இலங்கையும், சீனாவும் ஒருநாட்டின் இறைமையில் மற்றும் ஒரு நாடு அல்லது அமைப்பு தலையிடுவதை எதிர்ப்பது என்ற கொள்கையில் இணக்கம் கண்டுள்ளனர்.
அத்துடன் இரண்டு நாடுகளிலும் அரசியல், சமூக கட்டமைப்பு பிரச்சினைகளுக்கு சமாதானமான தீர்வுகள் விடயத்திலும் ஏனைய நாடுகளின் அமைப்புக்களின் தலையீடுகளை எதிர்ப்பதில் இரண்டு நாடுகளும் இணக்கம் கண்டுள்ளனர்.
இதேவேளை இலங்கையின் ஒற் றுமை, சமாதானம் மற்றும் நல்லி ணக்க விடயங்களில் சீனா ஆதரவை வழங்கும் என்று சீனாவின் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதன் போது பொருளாதார தொழில்நுட்ப மற்றும் கலாசார ரீதியான இணக்கங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் இரண்டு நாடுகளும் பாதுகாப்பு ஒத்துழைப்புகளை பலபடுத்த இணங்கியுள்ளன.
மேலும், நுவன்புர அதிவேக பாதை, வடக்கு அதிவேக பாதை, ஜின், நிலவள ஆறுகளை திசைத்திருப்பல், தேசிய விமான நிலையங்களின் புனரமைப்பு, மசகு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஆகிய திட்டங்களுக்கான நிதியுதவியையும் சீன அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
ரெ.தேவிகா
ஸ்காட்லாந்து வாக்கெடுப்பு, தமிழீழத்தில் சாத்தியமா?