தேசிய பிரச்சினைக்கான தீர்வைக்காண்பதற்கு நாம் பல தடவைகள் வெளிப்படுத்திய கண்ணியமான நல்லெண்ணத்தை அரசாங்கம் முறையாகப் பயன்படுத்தத் தவறிவிட்டது எனத் தெரிவித்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தேர்தலுக்கான அறிவிப்பொன்று இன்னமும் வெளியிடப்படாத நிலையில் அமைச்சர் பஷில் ராஜபக் ஷவின் அழைப்பை நிராகரிக்காது ஆழமாக கவனத்தில் எடுக்கவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க வேண்டும். அவ்வாறு ஆதரவளிப்பதன் மூலம் அக்கட்சி அனைவரும் ஏறறுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வை பெற்றுக்கொள்ள முடியும்.
அந்த வகையில் இச்சந்தர்ப்பத்தினை கூட்டமைப்பு பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஷபக்ஷ விடுத்துள்ள அழைப்பு தொடர்பாக வினவியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யுத்தம் நிறைவடைந்த பின்னரான காலத்திலும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரண்டாம் முறையாக தெரிவு செய்யப்பட்ட பின்னரும் இலகுவாக இந்த நாட்டின் தேசிய பிரச்சினையை தீர்த்து நிலையான சமாதனாத்தை ஏற்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கு ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு தயாராக இருந்திருக்கின்றோம்.
தமிழ் மக்கள் தமது அபிலாஷைகளைப் பெற்று கௌரவமாக தலைநிமிர்ந்து வாழும் வகையில் தேசிய பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதற்காகவும் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காகவும் எழுத்து மூலமாக உட்பட பல்வேறு வழிகளில் எமது நல்லெண்ண வௌிப்பாடுகளைச் செய்திருந்தோம்.
யுத்தத்தின் பின்னர் வடக்கிலும் கிழக்கிலும் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. விசேடமாக காணிவிவகாரம், இராணுவ மயமாக்கல், இளைஞர் யுவதிகளின் தொழில் வாய்ப்புக்கள் தொடர்பான விடயங்கள் உட்பட பல பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்புக்களை வழங்கி நிரந்தரமான தீர்வுகளைப் பெற்றுக்கொள்வதற்காக பல வழிகளில் நாம் முயற்சிகளை முன்னெடுத்த போதும் அது கைகூடியிருக்கவில்லை.
நாம் கண்ணியமாக வௌிப்படுத்திய நல்லெண்ணத்தை அரசாங்கம் முறையாகப் பயன்படுத்த தவறிவிட்டது. தற்போதும் கூட அதற்கு தயாராகவே இருக்கின்றோம். அவ்வாறிருக்கையில் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இவ்வாறான கருத்தை வௌியிட்டிருகின்றார்.
இந்தக் கருத்தை நாம் நிராகரிக்க மாட்டோம். தற்போது தேர்தலுக்கான அறிவிப்பொன்று வௌிப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் நாம் இதுவரையில் எவ்விதமான தெரிவுகளையும் செய்யவில்லை.
அந்த அறிவிப்பு வௌியிடப்பட்டதும் அது தொடர்பில் நாம் கூடிய ஆராய்வோம். அச்சந்தர்ப்பத்தில் அமைச்சருடைய கருத்து தொடர்பில் ஆழமாக கவனம் செலுத்துவோம் என்றார்.
முக்கிய குறிப்பு: சரத்பொன்சேகாவுக்கு வாக்ளித்த மக்கள் (மந்தைக்கூட்டங்கள்) கூட்டமைப்பு கேட்டுக்கொண்டால் வரும் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் வாக்களிக்க தயாராக இருப்பார்கள். கூட்டமைப்பினர் எதற்கும் கவலைப்பட தேவையில்லை. யாருக்கு மக்கள் காவடி தூக்கவேண்டும் என்பதை கூட்டமைப்பினர்தான் முடிவெடுக்கவேண்டும்.
யாருக்கு வாக்களிக்க வேண்டுமமென்பதை முடிவெடுத்து வாக்களிக்க கூடிய சுய அறிவு மக்களிடம் உண்டா?
கடந்த ஜனாதிபதி தேர்தல்களில் “சந்திரிகா, சரத்பொன்சேகா” ஐ ஆதரித்த கூட்டமைப்பினர் இம்முறை நம்மை ஆதரிக்க வேண்டும் – அமைச்சர் பஷில் அழைப்பு
10-11-2014
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு ஆதரவு வழங்குவதன் மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பு அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியல் தீர்வை பெற்றுக்கொள்ள முடியும்.
அந்த வகையில் தனது நேர்மையை வெளிக்காட்டுவதற்காக கூட்டமைப்பு இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளருமான பஷில் ராஜபக் ஷ தெரிவித்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு இதுவரை எந்த வழியிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிற்கு எந்தவொரு உதவியையும் செய்யவில்லை. அரசியல் ரீதியாகவோ, இராஜதந்திர ரீதியாகவோ கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு இதுவரை உதவியதில்லை.
எனவே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்தி கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குமென்று நம்புகின்றோம் என அவர் குறிப்பிட்டார்.
எதிர்வரும் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நடைபெறவுள்ளதாக பரவலாக எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் விபரிக்கையிலேயே அமைச்சர் பஷில் ராஜபக் ஷ இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் இந்த விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிற்கு ஆதரவை வழங்குவதன் மூலம் தமது நேர்மையை வெளிக்காட்டுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு சிறந்த சந்தர்ப்பம் ஒன்று கிடைத்துள்ளது.
அதன்படி தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு சாதகமான ஒரு சிறந்த தீர்மானத்தை எடுக்குமென்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
கடந்த காலம் முழுவதும் த.தே. கூட்டமைப்பு தவறான தீர்மானங்களையே எடுத்தது. ஒரே ஒரு சந்தர்ப்பத்தில் மட்டுமே முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு கூட்டமைப்பினர் ஆதரவு தெரிவித்தனர்.
அந்த சந்தர்ப்பத்தில் சந்திரிக்கா பண்டாரநாயக்க வரலாற்று ரீதியான வெற்றியை பெற்றுக்கொண்டார்.
சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க 1994 ஆம் ஆண்டு தேர்தலில் அத்தனகெலயை விட வடக்கின் பல இடங்களில் கூடிய சதவீதங்களில் வாக்குகளை பெற்றிருந்தமை இங்கு விசேட தன்மை ஆகும்.
எனினும் அவ்வாறு வெற்றியீட்டிய சந்திரிக்கா அந்த ஆணையின் படி செயற்படாமல் போய்விட்டார். அந்த சந்தர்ப்பத்தை தவிர எந்த ஒரு தேர்தலிலும் த.தே. கூட்டமைப்பு ஜனாதிபதிகளுக்கு உதவி செய்ததில்லை.
கடந்த முறை முன்னாள் இராணுவ தளபதிக்கே அவர்கள் ஆதரவு வழங்கினர். எனவே எதிர்வரும் தேர்தலில் கடந்த காலங்களை போலவே தவறான தீர்மானங்களை எடுக்காமல் கூட்டமைப்பு தீர்க்க தரிசனமான தீர்மானம் ஒன்றை எடுக்குமென நம்புகின்றோம்.
குறைபாடுகள் எங்கும் இருக்கலாம். ஆனால் குறைபாடுகள் குறித்து பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை. குறைபாடுகள் அவர்களிடத்திலும் இருக்கலாம். எம்மிடத்திலும் இருக்கலாம். அவற்றை விடுத்து எதிர்காலத்தை நோக்கி முன்செல்லுவதே முக்கியமானதாகும்.
அந்த வகையில் சிறந்த ஆரம்பம் ஒன்றுக்கு அடித்தளமிடுவதற்கு கூட்டமைப்பிற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவதன் மூலம் கூட்டமைப்பு ஒரு நல்ல செய்தியை விடுக்கலாம். ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவதன் மூலம் கூட்டமைப்பின் கொள்கையில் மாற்றங்களை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிற்கு தான் கூட்டமைப்பினர் இதுவரை எவ்விதமான உதவிகளையும் செய்ததில்லை. அரசியல் ரீதியாகவோ இராஜதந்திர ரீதியாகவோ உதவியதில்லை.
பாராளுமன்ற தெரிவு குழுவிற்கும் வரவில்லை. இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றவும் உதவி செய்யவில்லை. அபிவிருத்தியிலும் பங்கெடுக்கவில்லை. யாழ்தேவி ரயில் சேவை ஆரம்ப நிகழ்விற்கும் வரவில்லை. வரலாறு இவ்வாறு தான் உள்ளது.
எனவே இந்த சந்தர்ப்பத்தையாவது பயன்படுத்தி கூட்டமைப்பினர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ விற்கு உதவி செய்ய வேண்டும்.
இந்த மகத்தான சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கூட்டமைப்பினர் தேசிய அரசியல் நீரோட்டத்தில் பங்கெடுத்து முக்கிய தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும்.
இம்முறை கூட்டமைப்பு தவறுகளை விடாமல் சந்தர்ப்பத்தை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளுமென நாம் எதிர்பார்க்கிறோம். ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவதன் மூலம் யதார்த்த பூர்வமான மற்றும் அனைவராலும் ஏற்றுக்கொள்ள கூடியதுமான தீர்வு ஒன்றை கூட்டமைப்பு பெற்றுக்கொள்ளலாம்.
அந்த சந்தர்ப்பம் உருவாகுவதற்கு ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பினர் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்றார்.