கடலில் மூழ்கி விபத்துக்குள்ளான தென்கொரியக் கப்பலின் அறை ஒன்றிலிருந்து 48 மாணவிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
கடந்த 16ஆம் திகதி தென்கொரியாவின் பெர்ரி கப்பல் கடலில் மூழ்கிய விபத்தில் கடந்த பத்து நாட்களாக மீட்புப்படையினர் கப்பலினுள் மாட்டிக்கொண்ட பயணிகளை மீட் கப் போராடி வருகின்றனர். நேற்றுமுன்தினம் மீட்புப்படை வீரர் ஒருவர், கப்பலின் உள்ளே உள்ள ஓர் அறையில் 48 மாணவிகளின் சடலங்கள் இருப்பதை கண்டுபிடித்ததாக அதிர்ச்சி செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
கப்பல் கடலில் மூழ்கத்தொடங்கியதும், கப்பலின் உள்ள ஊழியர்களின் அறிவுரைப்படி 48 மாணவிகளும் உயிர் காப்பு அங்கிகளை அணிந்திருந்தார்கள் என்றும், ஆனால் அவர்களால் பாதுகாப்பாக உயிருடன் வெளியே வரமுடியாமல் பரிதாபமாக உயிரிழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
குறித்த அறையில் இருந்து 48 மாணவிகளின் சடலங்களை மீட்புப்படையினர் மீட்டு, வெளியே கொண்டு வந்துள்ளனர். மாணவிகள் அனைவரும் உயிருடன் வருவார்கள் என நம்பிக்கையுடன் காத்திருந்த மாணவிகளின் பெற்றோர் கதறி அழுதுள்ளனர்.
இவர்களையும் சேர்த்து இதுவரை 187 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும், இன்னும் 115 பேரைக் காணவில்லை என்றும் கூறப்படுகிறது.
காணாமல் போன 115 பேர்களும் உயிருடன் இருப்பதற்கு வாய்ப்பு குறைவு என மீட்புப்படையினர் கருதுவதால் உயிரிழந்தவரக்ளின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.