மன்னார் வெள்ளாங்குளத்தில் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் போராளியின் இறுதிச் சடங்கு நேற்று சிறிலங்காப் படையினரின் கடுமையான கண்காணிப்புக்கு மத்தியில் இடம்பெற்றுள்ளது.
கடந்த புதன்கிழமை இரவு வெள்ளாங்குளம் ஈகம் குடியிருப்பில் உள்ள தனது வீட்டில் வைத்து, கிருஸ்ணசாமி நகுலேஸ்வரன் என்ற இரு பிள்ளைகளின் தந்தையான முன்னாள் போராளி சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்தக் கொலை தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக சிறிலங்கா காவல்துறையினர் கூறியுள்ளனர்
இந்தநிலையில், படுகொலை செய்யப்பட்ட நகுலேஸ்வரனின் இறுதிச்சடங்கு அவரது இல்லத்தில் நேற்று நடைபெற்றது.
சமூக நலனின் அக்கறை கொண்டவரான நகுலேஸ்வரனின் இறுதிச்சடங்கில் பெருமளவு பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இறுதிச்சடங்கின் போது, பெருமளவு சிறிலங்காப் படையினர், சீருடையிலும், சாதாரண உடையிலும் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
இறுதிச்சடங்கை பல்வேறு கோணங்களிலும், சுமார் 15 வரையான சீருடையணிந்த சிறிலங்காப் படையினர் படம்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அத்துடன், இறுதிச்சடங்களில் பங்கேற்றவர்களில் சுமார் 70 வரையானோர் சாதாரண உடையில் இருந்த இராணுவப் புலனாய்வாளர்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.