பாகிஸ்தானின் கராச்சி நகரில் இளம் காதலர்களை கட்டிலோடு கட்டிவைத்து மின்சாரத்தை பாய்ச்சி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் கராச்சி நகரில் கடந்த மாதம் 15 வயது சிறுமி அப்பகுதியைச் சேர்ந்த தனது 17 வயது காதலனுடன் வீட்டை வீட்டு ஓடி விட்டதாக கூறப்படுகிறது.
அவர்கள் தங்கள் சமூகத்திற்கு அவமரியாதை ஏற்படுத்தியதாக இருவரையும் அப்பகுதி மக்கள் வீட்டுச் சிறையில் அடைத்து வைத்திருந்தனர்.
அந்நகரில் ஜிர்கா எனப்படும் பஞ்சாயத்து முறை நடைமுறையில் உள்ளது. இந்த அமைப்பில் 30 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்கள் அப்பகுதியில் நடைபெறும் குற்றங்களை விசாரித்து தீர்ப்பு வழங்குவர்.
இந்நிலையில், இந்த இளம் காதலர்கள் வழக்கை விசாரித்த ஜிர்கா அமைப்பு சமூகத்திற்கு அவமரியாதை ஏற்படுத்திய குற்றத்திற்காக இருவருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
அதன்படி இருவரையும் கட்டிலோடு கட்டிவைத்து மின்சாரத்தை பாய்ச்சி கவுரவ கொலை செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற பல கொடூர சம்பவங்கள் பாகிஸ்தானில் நிகழ்ந்து வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் 500-க்கும் மேற்பட்டோர் தங்கள் சமூகத்திற்கு அவமரியாதை ஏற்படுத்திய குற்றத்திற்காக குடும்பத்தினராலேயே கொலை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.