மணலி அண்ணா நகரை சேர்ந்தவர் டார்வின். கிண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் வியாசர் பாடியை சேர்ந்த தேவிக்கும் கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்த நிலையில் டார்வினுக்கும் தண்டையார் பேட்டையை சேர்ந்த ஒரு பெண்ணிற்கும் கள்ளத்தொடர்பு இருப்பது தேவிக்கு தெரியவந்தது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
மேலும் தேவிக்கு சொந்தமான வீட்டை விற்று பணம் வாங்கி வரும்படி டார்வின் தகராறு செய்துள்ளார்.
நேற்று காலை கணவன்-மனைவியிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அதன் பிறகு டார்வின் வேலைக்கு சென்றுவிட்டார். மன வேதனையில் இருந்த தேவி தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த மணலி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தேவி உடலை கைப்பற்றினர். அப்போது தேவி தனது வயிற்றில் பேனாவால் மரண வாக்குமூலம் எழுதி இருந்தார்.
அதில் தனது சாவுக்கு கணவர், மாமனார் பிச்சையன், மாமியார் வசந்தா ஆகியோர் தான் காரணம் என்றும், என்னென்ன கொடுமைகள் செய்தார்கள் என்றும், 9 பக்க கடிதம் எழுதி கட்டிலுக்கு அடியில் வைத்திருப்பதாக எழுதி இருந்தார். இதையடுத்து அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து டார்வின், அவரது தாய், தந்தையிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.