காணாமல்போனதாகக் கூறப்படும் அனைவரும் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் போராளிகளேயாகும். ஆகவே அவர்கள் அப்போதைய போர்க்களத்திலேயே இறந்துவிட்டனர் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
யுத்தத்தின் பின்னர் எவரும் காணாமல்போகவில்லை. வடக்கில் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தெரியும் தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பது.
விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டத்தில் தமது உறவுகள் இணைந்துகொண்டனர் என்பதும் அவர்களுக்கு தெரியும்.
எம்மை வைத்து புதிய அத்தியாயம் ஒன்றை உருவாக்க இந்த அரசாங்கமும் சர்வதேச தரப்பும் முயற்சிக்கின்றது. பொய்யான கதைகள், காரணம் இல்லாத குற்றச்சாட்டுகள், ஆதாரம் இல்லாத உண்மைகளை வைத்து சர்வதேச பிரதிநிதித்துவம் பொய்யான வரலாற்றை எழுதப்பார்க்கின்றார் .
எனினும் அரசியலில் காலடி எடுத்து வைப்பது தொடர்பில் நான் இன்னும் முடிவுகளை எடுக்கவில்லை. நான் இன்னும் இராணுவ அதிகாரி என்ற நிலைப்பாட்டில் தான் இருந்து வருகின்றேன்.
நான் அரசியல் பின்புலம் உள்ள குடும்பத்தில் இருந்து வந்தவன். எனது தந்தை சகோதரர்கள் என அனைவரும் அரசியல் கலாசாரம் தெரிந்தவர்கள். ஆனால் எனக்கு அந்த கலாசாரம் தெரியவில்லை. இனியும் அதைப்பற்றிய சிந்தனை எனக்கு இன்னும் வரவில்லை.
காணாமல்போனோர் மற்றும் இராணுவத்தினால் கடத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் உண்மை நிலைமை என்னவென வினவியபோது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.