காணாமல்போன பிரதேச சபை உறுப்பினர் கடலிலிருந்து சடலமாக மீட்பு – யாழில் சம்பவம் |

இலங்கநாதன் செந்தூரன், நேற்று(24.04.2020) மாலை முதல் காணாமற்போன நிலையில் தொண்டமனாறு கடலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை அவரது சடலம் கண்டறியப்பட்டது.
அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்துகொண்டாரா என்பது தொடர்பில் சட்ட மருத்துவ அதிகாரியின் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்பே உறுதி செய்ய முடியும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
தொண்டமனாறு மயிலதனை இந்து மயானத்துக்கு அண்மையில், கடற்கரை பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று நிற்பதை அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் நேற்றிரவு 7.20 மணியளவில் கண்டுள்ளனர்.
அதுதொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு அவர்கள் தகவல் வழங்கியதையடுத்து, நேற்றிரவு 8.30 மணியளவில் அந்த இடத்துக்குச் சென்ற பொலிஸார், அங்கு காணப்பட்ட மணிப்பையிலிருந்த (பேர்ஸ்) தேசிய அடையாள அட்டையை வைத்து இலங்கநாதன் செந்தூரன் (வயது – 37) என்பவருடையது என்று உறுதி செய்தனர்.
சம்பவம் தொடர்பில், செந்தூரனின் வீட்டுக்கு அறிவிக்கப்பட்டது. அவர்கள் உறவினர்கள், செந்தூரனின் நண்பர்களுடன் தொண்டமனாறு பகுதியில் அவரைத் தேடினர்.
யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் செந்தூரன் மக்களுக்கான உதவிப் பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
There are no comments at the moment, do you want to add one?
Write a comment