”விஸ்வமடு சிவில் பாதுகாப்புப் படைமுகாமிற்கு முன்னாலுள்ள பாழடைந்த காணியில் இரத்தம் சிந்தியுள்ளது. ஏதோ அசம்பாவிதமொன்று இடம்பெற்றுள்ளது” இவ்வாறு கடந்த 13 ஆம் திகதி, அப்படியென்றால் சரியாக சித்திரை புத்தாண்டிற்கு முதல் நாள் காலை கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு தகவலொன்று கிடைத்துள்ளது.
இந்த தகவலையடுத்து துரிதமாக செயற்பட்ட பொலிஸ் குழுவொன்று உடனடியாக சம்பவ இடத்தை நோக்கி விரைந்தது. அப்போது அவ்விடத்தில் பொதுமக்கள் கூடியிருந்தனர்.
எனவே, பொலிஸார் தமது வாகனத்தை நிறுத்திவிட்டு சனக்கூட்டத்தை ஊடறுத்துச் சென்று பார்த்தபோது அவ்விடத்தில் அதிகமாக இரத்தம் சிந்தி காணப்பட்டதுடன், சுடிதாருக்கு அணியும் துப்பட்டாவொன்றும் காணப்பட்டுள்ளது.
யாராவது ஒரு பெண்ணுக்கு அசம்பாவிதமொன்று இடம்பெற்றிருக்கலாம் என்று ஊகித்துக் கொண்ட பொலிஸார், அவ்விடத்திலிருந்து ஒருவரை அல்லது ஏதோவொன்றை இழுத்துச் சென்றுள்ள அடையாளத்தையும் அவ்வழியினூடாக சிந்திக்கிடந்த இரத்தத்தையும் அவதானித்தனர். எனவே அவ்வழியினூடாகத் தமது பார்வையை விரித்துச் சென்றனர்.
இவ்வாறு அவ்வழியினூடாக முன்னோக்கிச் சென்ற பொலிஸார், பெரிய கிணறு ஒன்று இருப்பதை கண்டனர். அவர்கள் அதனருகே சென்று பார்த்தபோது அவ்விடத்திலும் குறிப்பாக கிணற்று மதிலிலும் இரத்தக் கறைகள் காணப்பட்டுள்ளன.
ஏற்கனவே இக்கிணற்றிற்கு சற்றுத்தொலைவில் அதிக இரத்தம் சிந்தி காணப்பட்டதுடன் அவ்விடத்திலும் துப்பட்டாவொன்று காணப்பட்டது. ஆகையால், பெண்ணொருவரை இழுத்துவந்து இக்கிணற்றில் போட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகித்தனர்.
கிணற்றிற்கு சற்றுத் தொலைவிலிருந்த தகரக் கொட்டிலொன்றையும் பொலிஸார் சோதனையிட்டனர். அப்போது அதற்குள் சுடிதாரொன்று, பெண்கள் அணியும் பாதணி, பயணப்பை மற்றும் சில ஆடைகளும் காணப்பட்டுள்ளன.
இவ்வாறு பொலிஸார் சகல தகவல்களையும் சேகரித்துக் கொண்டதன் பின்னர் அவ்விடத்திற்கு நீதிவான் அழைத்துவரப்பட்டார். அத்தோடு நீதிவானின் பணிப்புரைக்கமைய கிணற்றிலிருந்த நீர் முழுமையாக வெளியேற்றப்பட்டது.
35 அடி ஆழமான அக்கிணற்றிலிருந்த நீரை வெளியேற்றுவதற்கு நான்கு நீர் பம்பிகள் பயன்படுத்தப்பட்டதுடன், சுமார் நான்கு மணித்தியாலங்களில் அக்கிணற்றிலிருந்த நீர் முழுமையாக வெளியேற்றப்பட்டது.
அப்போது கிணற்றுக்குள் ஒரு பெண்ணின் சடலம் தென்பட்டுள்ளது. அச்சடலத்தை வெளியில் எடுப்பதற்கு இருவர் கிணற்றில் இறங்கியுள்ளனர்.
கிணற்றில் கிடந்த சடலத்துடன் பெரிய பொதியொன்றும் கட்டப்பட்டிருந்தது. இடுப்புப் பகுதியில் கட்டப்பட்டிருந்த அப்பொதியை வெட்டி எடுத்துவிட்டு சடலத்தை தனியாகவும் அந்த பொதியை தனியாகவும் கிணற்றிலிருந்து வெளியேற்றியுள்ளனர்.
சடலத்தில் கழுத்துப் பகுதியில் வலது பக்கம் வெட்டுக்காயங்கள் காணப்பட்டதுடன், அச்சடலத்தில் கட்டப்பட்டிருந்த பொதியை சோதனையிட்டு பார்த்த போது அதற்குள் 15 கிலோ நிறையுடைய கருங்கற்கள் காணப்பட்டுள்ளன.
இவ்வாறு கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சடலத்தை அவ்விடத்தில் கூடியிருந்தவர்களிடம் அடையாளம் காட்டுமாறு கோரிய போது அதை யாரும் கண்டதில்லை எனக் கூறியுள்ளனர்.
எனவே, அவ்விடத்திலிருந்த தகரகொட்டிலிலிருந்து எடுக்கப்பட்ட பயணப் பொதியை சோதனையிட்ட போது அதற்குள் பெயர், விலாசம் குறிப்பிட்டப்பட்ட கடதாசியொன்று காணப்பட்டுள்ளது. அத்தோடு தொலைபேசி இலக்கம் எழுதப்பட்ட கடதாசியொன்றும் காணப்பட்டுள்ளது.
பயணப் பொதியிலிருந்து கிடைக்கப் பெற்றுள்ள தொலைபேசி இலக்கத்திற்கு பொலிஸார் அழைப்பை ஏற்படுத்தினர். அப்போது அது கொழும்பில் “பேக்” தைக்கும் தொழிற்சாலையொன்றின் பெண் மேற்பார்வையாளர் ஒருவருடையது என தெரியவந்தது.
குறித்த பெண்ணை தெரியுமா என பொலிஸார் அவரிடம் கேட்டபோது, தெரியாது என கூறிய அந்த பெண், மீண்டும் ஞாபகம் வந்தவராக ஆம் அவரை தெரியும். எமது தொழிற்சாலையில் தான் வேலை செய்தார்.
இரண்டு வாரங்களுக்கு முன்னர், தான் வீட்டுக்கு செல்வதாக என்னிடம் தொலைபேசி இலக்கத்தை பெற்றுக்கொண்டார். அத்தோடு தான் வீட்டுக்குச் சென்று திருமணம் முடிக்கவுள்ளதாகவும், திருமணத்தின் பின்னர் வேலைக்கு வந்தால் வேலைக்கு சேர்த்துக் கொள்வீர்களா என்றும் கேட்டதாகவும் அதற்கு சரியென்று தான் கூறியதாகவும் அப்பெண் தொலைபேசியூடாக பொலிஸாருக்கு கூறியுள்ளார்.
அதன் பின்னர் அக்கடிதத்தின்படி உயிரிழந்த பெண் மாத்தளை, பிடகந்தை பகுதியை சேர்ந்த ராஜசுலோச்சனா என தெரியவந்தது. அதாவது ரத்தோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியிலேயே அந்த தோட்டம் அமைந்திருந்தது. ரத்தோட்டை பொலிஸாரின் மூலமாக உயிரிழந்த பெண்ணின் வீட்டாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
அதன் பின்னர் மோப்பநாயின் உதவியுடன் சந்தேக நபரை தேடும் பணி ஆரம்பித்தது. சடலம் மீட்கப்பட்ட இடத்திலிருந்து மோப்பநாய் நேராக விஸ்வமடு சிவில் பாதுகாப்பு முகாமிற்குள் சென்றது.
அதன் போது அந்த முகாமில் இருந்த கமாண்டோ கர்ணல் விராஜ் பர்ணாந்து பொலிஸாருக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்கினார். இவ்வாறு முகாமிற்குள் சென்ற மோப்ப நாய் அங்குள்ள ஒரு கூடாரத்திற்குள் சென்று அமர்ந்து கொண்டது.
அந்தக் கூடாரத்தில் ஒரேயொரு பாதுகாப்பு வீரரே இருந்தார். அவரோடிருந்த மற்றைய வீரர் அன்று காலையில் தான் விடுமுறையில் சென்றதாக அவர் கூறினார்.
எனவே அந்த சிவில் பாதுகாப்புப் படை வீரர் பற்றிய தகவலை தேடும் அதேவேளை, உயிரிழந்த ராஜசுலோச்சனாவின் பெற்றோரிடமும் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
உயிரிழந்த ராஜசுலோச்சனாவின் தந்தை ரத்தோட்டை பிடகந்த தோட்டத்தில் தொழில் புரிந்துவரும் ஒருவர். அவரது பெயர் ராமசாமி ராமலிங்கம். தனது மகள் சம்பவதினத்திற்கு சில நாட்களுக்கு முன்னர் நுவரெலியாவிற்கு செல்வதாகக் கூறி வீட்டில் இருந்து சென்றதாக ராமலிங்கம் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
இவ்வாறு வீட்டிலிருந்து சென்ற ராஜசுலோச்சனா நுவரெலியாவிலுள்ள தனது நண்பியிடம், மச்சானை திருமணம் செய்யவுள்ளதாகவும் அதற்காக வவுனியா செல்வதாகவும் கூறியதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதேபோன்று வவுனியா விஸ்வமடு பிரதேசத்தில் தனது மனைவியின் சகோதரர்கள் இருவர் இருந்ததாகவும் அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றவர் அங்கே வசித்து வருவதாகவும் சுலோச்சனாவின் தந்தை கூறியுள்ளார்.
இவ்வாறான தகவல்களை பெற்றுக் கொண்ட பொலிஸார், வவுனியா விஸ்வமடு பிரதேசத்திலுள்ள குறித்த வீட்டிற்கு சென்றுள்ளனர். புனர்வாழ்வு பெற்ற புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த நாகராசா கேதீஸ்வரன் என்ற இளைஞன் அங்கிருந்துள்ளார்.
பொலிஸார் அவரிடம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டனர். அப்போது உயிரிழந்த அந்த யுவதியை தனக்கு தெரியாது என சந்தேக நபர் கூறியுள்ளார். ஆனால், பொலிஸார் அவரை தடுப்புக் காவலில் வைத்து தீவிர விசாரணைக்கு உட்படுத்தியதுடன் சம்பவம் பற்றிய பல தகவல்களைப் பெற்றுக் கொண்டனர்.
“நான் யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவரை திருமணம் முடிக்கவுள்ளேன். ஆனால், சுலோச்சனா என்ற பெண்ணுடன் எனக்குத் தொடர்பிருந்தது. அவர் என்னைத் தேடிக்கொண்டு வவுனியாவிற்கு வருவதாகக் கூறினார். அதற்கு நான் வேண்டாமென்று கூறினேன்.
ஆனால் அவளோ என்னுடன் அடிக்கடி தொலைபேசியில் சண்டையிட்டதுடன், ஒரு நாள் சொல்லாமல் கொள்ளாமல் என்னைத் தேடிக்கொண்டு வவுனியா விஸ்வமடுவிற்கு வந்து என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அதன் பின்னர் நான் அவரை சந்தித்தேன். ஆனால் அவரை கூட்டிக்கொண்டு எங்கு செல்வதென யோசித்தேன். அதன் பின்னர் முகாமிற்கு முன்னாலுள்ள தகரக்கொட்டிலுக்கு அழைத்துச் சென்றேன்.
இவ்வாறு அழைத்துச் சென்றதும் அவள் கொண்டு வந்திருந்த சாப்பாட்டு பார்சலை இருவருமாக உண்டோம். அதன் பின்னர் தான் கர்ப்பமாகியுள்ளதாகவும், ஆகையால் உடனடியாகத் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறும் என்னிடம் கூறவே இருவருக்குமிடையில் தகராறு ஏற்பட்டது.
அவளுக்கு வயது 28. எனக்கு வயது 24. ஆகையால் எனக்கு அந்த பெண்ணை திருமணம் முடிக்கும் எண்ணம் இருக்கவில்லை.
இவ்வாறான நிலையில் இருவருக்குமிடையிலான கருத்து முரண்பாடு சண்டையாக மாறியது. கோபத்தில் என்னை தாக்கினாள். நானும் தாக்கினேன். அத்தோடு ஆத்திரத்தில் கத்தியை எடுத்து அவளுடைய கழுத்தில் குத்தினேன்.
பின்னர் சத்தமாக கத்தியதுடன் மயங்கி கீழே விழுந்தாள். சற்று நேரத்தில் பார்த்தபோது இறந்து போயிருந்தாள். உடனடியாக சடலத்தை இழுத்துச் சென்று கல்லை உடம்பில் கட்டி கிணற்றில் போட்டேன் என வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
சந்தேக நபரின் வாக்குமூலங்களின் பின்னர் கொலைக்காகப் பயன்படுத்தப்பட்ட கத்தி மற்றும் சம்பவ தினத்தில் சந்தேக நபர் அணிந்திருந்த காற்சட்டை, ரீசெட் போன்றவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர். அதன்பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதுடன் சந்தேக நபர் தற்போது விளக்கமறியலில் வைக்ப்பட்டுள்ளார்.
கத்திக்குத்துக்கு உள்ளான யுவதியின் சடலம் பிரேத பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட போது கழுத்துப் பகுதியில் ஏற்பட்ட வெட்டுக்காயத்தால் அதிகமாக இரத்தம் வெளியேறியமையால் இந்த மரணம் சம்பவித்துள்ளது என உறுதிப்படுத்தப்பட்டது.
எனவே, குறித்த யுவதி காயமடைந்த சமயம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றிருந்தால் காப்பாற்றியிருக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளை அந்த யுவதி இரண்டு மாத கால கர்ப்பிணி என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வட மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் ஆலோசனைக்கு அமைய கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் யூ.கே.திசாநாயக்க மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தம்மிக்க மகேந்தர ஆகியோரின் கண்காணிப்பில் கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
எந்தவொரு குற்றச் செயலையும் புரிந்துவிட்டு நிரந்தரமாக தப்பித்து விட முடியாது என்பதற்கு இந்த சம்பவம் சான்றாக அமைந்துள்ளது.
இது போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் இளைஞர், யுவதிகள் கட்டுக்கோப்புடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும். அப்போதே இது போன்ற அசம்பாவிதங்களை தவிர்த்துக் கொள்ள முடியும்.
-எம்.நேசமணி-