லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலத்தில் தேசப்பிதா மகாத்மா காந்தியைச் சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவுக்கு கோயில் மற்றும் சிலை அமைக்கும் பணிகள் துரிதகதியில் நடந்து வருகிறது.
கடந்த 1948 ல் மகாத்மா காந்தியை சுட்டு கொன்ற கோட்சேவுக்கு மரணத்தண்டனை விதிக்கப்பட்டது. சமீபத்தில் கோட்சே இந்த நாட்டின் தேசியவாதி என்று நாடாளுமன்றத்தில் பேசிய பாஜக எம்.பி,. மகராஜ் கருத்தால் சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து தனது பேச்சை திரும்ப பெற்று கொள்வதாக அறிவித்தார்.
இந்நிலையில் உத்திரப்பிரதேச மாநிலம் சிட்டாபூரில் இந்து மகா சபா அமைப்பினர் கோட்சேவுக்கு கோயில் கட்டும் பணியில் இறங்கியுள்ளனர்.
இந்தக் கோயிலானது அடுத்தாண்டு ஜனவரி மாதம் 30ம் தேதி, அதாவது காந்தியின் நினைவு நாளன்று திறக்கப் படும் என கோயில் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே இந்து மகா சபா மற்றும் ஓம் சிவ மகாகால் சேவா சமிதியும் இணைந்து மீரட்டில் நாட்டிலேயே கோட்சேவுக்கான முதல் சிலையை நிறுவும் பணிக்கான அடிக்கல் நாட்டியுள்ளது. இந்த சிலையும் வரும் ஜனவரி 30ம் தேதி அன்றே திறக்கப் படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்து மகாசபையின் தேசிய பொதுச் செயலாளர் ஆச்சார்யா மதன், கோட்சே உண்மையான தேசபக்தன் என்றும் கூறினார்.
இது தவிர, கோட்சே தொடர்பான திரைப்படம் ஒன்றும் ஜனவரி 30ல் ரிலீசாக உள்ளது. இந்த படத்திற்கு தடை விதிக்க கோரிய வழக்கு ஓன்று புனே கோர்ட்டில் நாளை ( வெள்ளிக்கிழமை ) விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி அந்த மாவட்ட நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டது. கலெக்டர் நவ்நீத்சிங் கூறும்போது, ‘‘இந்த கோவில் கட்டும் பிரச்சினையை மாவட்ட நிர்வாகம் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது.
அந்த பகுதி பொலிசாருக்கு இதுபற்றி விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரச்சினையில் தொடர்புள்ளவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.