காஷீரில் நேற்று தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் வீரமரணம் அடைந்த சென்னையை சேர்ந்த முகுந்த் வரதராஜனின் உடல் முழு ராணுவ மரியாதையுடன் இன்று அடக்கம் செய்யப்பட்டது.
முதலமைச்சர் ஜெயலலிதா அவரது குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இந்திய ராணுவத்தில் மேஜராக பணிபுரிந்தவர் முகுந்த் வரதராஜன். இவர் நேற்று நடந்த தீவிரவாதிகளுக்கு இடையேயான துப்பாக்கி சண்டையில் குண்டடிபட்டு உயிரிழந்தார்.
இவருடைய உடல் நேற்று காஷ்மீரில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி கொண்டு வரப்பட்டது. பின்னர் நேற்றிரவு சென்னைக்கு அவரது உடல் கொண்டு வரப்பட்டது.
மேஜர் முகுந்த் அவர்களின் உடல் அவருடைய வீடு இருக்கும் தாம்பரம் சேலையூர் பகுதிக்கு கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.
அவரது உடலுக்கு ராணுவ அதிகாரிகள், தமிழக அமைச்சர்கள், மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் ஆகியோர் இறுதியஞ்சலி செலுத்தினர்.
வீரமரணம் அடைந்த முகுந்த் வரதராஜனுக்கு இந்து என்ற மனைவியும், அக்ஷதா என்ற மூன்று வயது மகளும் உள்ளனர். தற்போது இவர்கள் பெங்களூரில் வசித்து வருகின்றனர்.
முகுந்த் அவர்களின் தந்தை வரதராஜன் ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் ஆவார். ஒரே மகனை ராணுவத்திற்கு அனுப்பிய முகுந்த் வரதராஜனின் தாயார் பெயர் கீதா. முகுந்த்துக்கு சுவேதா, நித்யா ஆகிய இரு சகோதரிகள் உள்ளனர்.