விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் பிரமுகர் கே.பி. என்று அழைக்கப்படும் செல்வராசா பத்மநாதனால், இலங்கை, கிளிநொச்சியில் ஆண் சிறுவர்களுக்கான செஞ்சோலை சிறுவர் இல்லம் உருவாக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் யுத்தம் நடந்து முடிந்த பகுதிகளில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்காக ஏற்படுத்தப்படும் சிறுவர் இல்லங்களில், வன்னிப் பகுதியில் திறக்கப்பட்ட 4-வது சிறுவர் இல்லம் இது.
இலங்கையில், இறுதி யுத்தம் முடிவுக்கு வந்த முல்லைத்தீவு மாவட்டத்தில், ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக இரு சிறுவர் இல்லங்கள் உருவாக்கப்பட்டு இயங்கி வருகின்றன.
முத்தையன்கட்டு என்ற இடத்தில், ‘அன்பு’ என்ற பெயரில் ஆண் சிறுவர் இல்லம், முள்ளிவளை என்ற இடத்தில் ‘பாரதி’ என்ற பெயரில், பெண் சிறுமியர் இல்லம் ஆகியவற்றில், யுத்தத்தால் பாதிக்கப்பட்டு, ஆதரவற்ற நிலையில் உள்ள சிறுவர், சிறுமியர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள், இல்லங்களுக்கு அருகில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கின்றனர்.
ஒருகாலத்தில் விடுதலைப் புலிகளின் நிர்வாக தலைநகராக இருந்த கிளிநொச்சியில், இரணைமடு பகுதியில் (இங்குதான் விடுதலைப் புலிகளின் விமான ரன்வே இருந்தது) ‘செஞ்சோலை’ பெண் சிறுமியர் இல்லம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. ஆனால், கிளிநொச்சி மாவட்டத்தில் ஆண் சிறுவர்களுக்கான இல்லம் இருக்கவில்லை.
இதனால், கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற சிறுவர்கள், முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ‘அன்பு’ இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்படும் நிலை ஏற்பட்டது.
அதையடுத்து, கிளிநொச்சி மாவட்டத்தில், ஆண் சிறுவர்களுக்கான இல்லம் ஒன்றை அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இலங்கையிலும், வெளிநாடுகளிலும் உள்ள பலர் உதவினர்.
அதன் பலனாக உருவாக்கப்பட்டதுதான், தற்போது கிளிநொச்சி, இரணைமடு பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ள ‘செஞ்சோலை’ ஆண் சிறுவர் இல்லம்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்டு, ஆதரவற்ற நிலையில் உள்ள குழந்தைகளுக்காக நடத்ப்படும் இந்த நான்கு சிறுவர் இல்லங்களும், கே.பி. என அறியப்பட்ட செல்வராசா பத்மநாதனால், நிர்வகிக்கப்படுகின்றன.
ஒரு காலத்தில் விடுதலைப் புலிகளால் இதே பெயர்களில் (அன்பு, பாரதி, செஞ்சோலை) சிறுவர் இல்லங்கள் நடத்தப்பட்டன. யுத்தத்தில் உயிரிழந்த போராளிகளின் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட இல்லங்கள் அவை. இப்போது யுத்தம் முடிந்தபின், அதே இடங்களில், அதே பெயர்களில் இந்த இல்லங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
லண்டனைச் சேர்ந்த சிவகாந்தன் நிதியுதவியுடன் கட்டப்பட்ட சிறுவர்களுக்கான தங்கும் இடத்தின் இரண்டாவது கட்டடத் தொகுதியை யாழ். கோண்டாவிலைச் சேர்ந்த வழங்கறிஞர் எஸ்.ஞானலோஜினி திறந்துவைத்தார்.
கம்பர்மலை வல்வெட்டித்துறையைச் சேர்ந்த தம்பு வல்லிபுரம் சோதிடர் ஞாபகார்த்தமாக யாழ். சர்வீஸ் நிலைய உரிமையாளர் .புஸ்பகரன் நிதியுதவியுடன் கட்டப்பட்ட சிறுவர்களுக்கான தங்கும் இடத்தின் மூன்றாவது கட்டடத் தொகுதியை .புஸ்பகரன் திறந்து வைத்தார்.