களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகிளுர் கிராமத்தைச் சேர்ந்த குடும்பப்பெண் ஒருவர் வெள்ளிக்கிழமை (01) இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 31 வயதுடைய இராசரெத்தினம் இராசேந்தினி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மரணம் தொடர்பில் மரணமடைந்த பெண்ணின் கணவர் க.கனகராசா என்பவர் சந்தேகத்தின் பொலிஸாரால் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் அறிய வருவதாவது,
சம்பவ தினமான வெள்ளிக்கிழமை (01) மாலை குறித்த குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் கணவர் அயலவர்களை அழைத்து மனைவி விழுந்துகிடக்கின்றாள் என தெரிவித்துள்ளார்.
அயலவர்கள் ஓடிவந்து வீழ்ந்து கிடந்த பெண்ணை களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
இந்நிலையில் அவரைப் பரிசோதித்த வைத்தியர்கள் பெண் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். சடலம் தற்போது களுவாஞ்சிகுடி பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இராசேந்தினிக்கும் கனகராசாவுக்கும் கடந்த 8 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைந்ததாகவும், திருமணம் முடித்துவிட்டு கணவர் மத்திய கிழக்கு நாடொன்றில் 5 வருடங்கள் தொழில் செய்துவிட்டு மீண்டும் வீடு வந்து பின்னர் மீண்டும் மத்திய கிழக்கு நாட்டுக்குச் சென்று இரண்டரை வருடங்கள் தொழில் செய்துவிட்டு கடந்த 14.09.2021 அன்றயத்தினம்தான் வீட்டுக்கு வந்தாகவும், இவர்களுக்கு குழந்தைகள் இல்லை எனவும், அவர் வீடு வந்த தினத்திலிருந்து மதுபானம் அருந்திவிட்டு மனைவியுடன் தொடர்ந்து சண்டைபிடித்து வந்ததாகவும், இராசேந்தினியை அவரது கணவர்தான் அடித்துக் கொன்றுள்ளார் என அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த பெண்ணின் தாய் கடந்த 9 வருடங்களுக்கு முன்னர் இறந்து ள்ளார், எனினும் தந்தை அவருடனேயே வசித்து வருகின்றார்.
தனது மகளுடன் மருமகன் அடிக்கடி சண்டை பிடித்து வந்ததாகவும், அதனை தான் விலக்கச் செல்லும்போதெல்லாம் தன்னை மருமகன் துரத்திவிடுவதாகவும், மருமகன்தான் தனது மகளை கொண்றுவிட்டதாக உயிரிழந்த பெண்ணின் தந்தை இராசரெத்தினம் தெரிவிக்கின்றார்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த களுவாஞ்சிகுடி பொலிசாரும், பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரும், நிலைமையை ஆராய்ந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில் சனிக்கிழமை காலை (02) களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி வி.தியாகேஸ்வரன், சம்பவ இடத்திற்கு வருகை தந்து பார்வையிட்டு சடலத்தை பிரேத பரிசோதனைக்குட்படுத்தும்பிடி உத்தரவிட்டுள்ளார்.