பிரசவத்துக்கு பின்னர் துளசி, சற்று உடல் பருமனாக மாறி உள்ளார். அறுவை சிகிச்சையின் காரணமாக பிறந்ததால், 2-வது குழந்தை மீது அவருக்கு எப்போதும் கோபம் உண்டு.
மழலை மொழி மாறாத பச்சிளம் குழந்தையை ரத்தம் சொட்ட சொட்ட தாக்கிய கல்நெஞ்சம் படைத்த தாய் துளசியிடம் சத்தியமங்கலம் போலீசார், குழந்தையிடம் இரக்கமின்றி நடந்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரித்தனர்.
அப்போது போலீஸ் விசாரணையில் தெரியவந்ததாவது:-
துளசிக்கு 2 மகன்கள் உள்ளனர். அதில் முதல் மகன் கோகுல்(வயது 4) சுகபிரசவமாக பிறந்தார். இரண்டாவது குழந்தை பிரதீப்(2). இந்த குழந்தை அறுவை சிகிச்சை மூலம் பிறந்தது.
பிரசவத்துக்கு பின்னர் துளசி, சற்று உடல் பருமனாக மாறி உள்ளார். மேலும், அறுவை சிகிச்சையின் காரணமாக பிறந்ததால், 2-வது குழந்தை மீது துளசிக்கு எப்போதும் கோபம் உண்டு.
இந்த நிலையில் தான், துளசியின் செல்போனுக்கு ஒரு மிஸ்டு கால் வந்துள்ளது. அந்த எண்ணை தொடர்பு கொண்டு அவர் பேசியபோது, எதிரே பிரேம்குமார் என்பவர் பேசி உள்ளார்.
அவர் தான் சென்னையை சேர்ந்தவர் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து இருவரும் அவ்வப்போது செல்போனில் பேசி, நட்பு பாராட்டி வந்தனர். இதுவே நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது.
துளசியின் கணவர் வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் தான் வீட்டுக்கு திரும்புவார். இந்த இடைப்பட்ட நேரத்தை பயன்படுத்தி அவர்கள் செல்போன் மூலம் தங்களது கள்ளக்காதலை வளர்த்து வந்துள்ளனர்.
துளசி மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரிக்கு அழைத்து வரப்பட்ட காட்சி.
அப்போது வீடியோ கால் மூலமாகவும் அவர்கள் பேசி வந்தனர். இதில் துளசியை பார்த்து, அழகாக இருப்பதாகவும் கூறி பிரேம்குமார் பேசி வந்துள்ளார்.
மேலும் அவரது மூத்த மகன் கோகுலை பார்த்து அவன் உன்னை போன்று அழகாக உள்ளான். ஆனால், பிரதீப் அழகாக இல்லை, அசிங்கமாக உள்ளான்.
2-வது குழந்தை தான் உனது அழகை குறைத்து விட்டது என்று கூறியுள்ளார். பிரேம்குமார் இனிக்க இனிக்க பேசியதில், துளசி தன்னையே மறந்து விட்டார்.
இதனால் அவரது பேச்சில் மயங்கிய துளசிக்கு தனது குழந்தை பிரதீப் மீதான பாசம் போய்விட்டது.
மேலும், தனக்கும் அந்த குழந்தையை பிடிக்கவில்லை என்று கூறிய பிரேம்குமார், அந்த குழந்தையை அடிப்பது போன்று வீடியோ எடுத்து தனக்கு அனுப்புமாறு தெரிவித்துள்ளார்.
கள்ளக்காதலனின் பேச்சில் மயங்கிய துளசி, தான் வயிற்றில் சுமந்து பெற்ற குழந்தை என்றும் பாராமல் இரக்கமின்றி குழந்தையை அடித்து துன்புறுத்தி, அதை வீடியோவாகவும் செல்போனில் பதிவு செய்தார்.
பின்னர் அந்த வீடியோவை வாட்ஸ்-அப் மூலம் பிரேம்குமாருக்கு அனுப்பிவைத்தார். அதை இருவரும் பார்த்து ரசித்துள்ளனர்.
குழந்தைக்கு ஏற்பட்ட காயங்கள் குறித்து கணவர் வந்து கேட்கும்போது, கட்டிலில் இருந்து கீழே விழுந்ததாகவும், குளியலறையில் வழுக்கி விழுந்து விட்டான் என்றும் ஏதேனும் ஒரு சாக்குபோக்கை கூறி தப்பி வந்துள்ளார்.
மனைவியின் பேச்சை நம்பிய வடிவழகனும் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்று உரிய சிகிச்சையும் அளித்து வந்துள்ளார்.
மேலும், உனது கணவரிடம் சண்டையிட்டு வந்துவிடு, நான் உன்னை மீண்டும் திருமணம் செய்து கொள்கிறேன் என்றும் பிரேம்குமார் ஆசை வார்த்தை கூறி உள்ளார். மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னையை சேர்ந்த கள்ளக்காதலன் பிரேம்குமார் தூண்டுதலின் பேரில்தான் துளசி தனது குழந்தையை அடித்து துன்புறுத்தியது தெரியவந்துள்ளது.
எனவே குழந்தையின் மீது வெறுப்புணர்வை தூண்டும் விதமாக இருந்த கள்ளக்காதலனை கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளர். இதையடுத்து தனிப்படை போலீசார் பிரேம்குமாரை கைது செய்ய சென்னை விரைந்துள்ளனர்.