சேலம்: சேலம் மாவட்டம், வாழப்பாடி அடுத்த முத்தம்பட்டி சேர்ந்த, தனியார் நிறுவன ஊழியரின் மகளான சிறுமி ஒருவர், தனது சேமிப்பு தொகையை கொரோனா நிவாரண நிதிக்காக முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கினார்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த முத்தம்பட்டியை சேர்ந்தவர் தனியார் நிறுவன தொழிலாளி செல்வகுமார்(45) . இவரது மகள் ஜெசிகா (10). வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
மூன்றாம் வகுப்பிலிருந்து, பெண் கல்வி ஊக்கத்தொகையாக அரசு வழங்கிய ரூ. 1,500 மற்றும் சேமிப்பில் வைத்திருந்த ரூ.1,006 சேர்த்து, மொத்தம் ரூ. 2,506 தொகையை காசோலையாக (DD) எடுத்து, கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கும் பணி ஆய்விற்காக, சேலம் வந்திருந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், இன்று இந்த சிறுமி நேரில் வழங்கினார்.
தனது குடும்பத்திற்கு சொந்த வீடு, நிலம் ஏதும் இல்லாத நிலையில் இருந்தாலும், கொரோனாவால் பாதிக்கப்படுவோரை மீட்க, தமிழக அரசு நிவாரண நிதிக்கு, தனது எதிர்காலத்திற்காக அரசு தந்த தொகையையும், தனது சேமிப்பையும் சேர்த்து வழங்கிய அரசு பள்ளி மாணவி ஜெசிகாவிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார்.