கொலையாளியைக் கண்டுபிடிக்கும் வரை சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞனின் சடலத்தைப் பெறப்போவதில்லையென குடும்பத்தினர் உள்ளிட்ட உறவினர்கள் அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து யாழ்ப்பாண மருத்துவமனையில் பதட்டம்நிலவி வருவதுடன், பெருந்தொகையான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அரியாலை கிழக்கு, உதயபுரம் பகுதியில் வைத்து இத்துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றது. இச்சம்பவத்தில் 24 வயதுடைய டொன்பொஸ்கோ ரிட்மன் என்ற இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
முதுகுப் பக்கத்தை துளைத்த சன்னம் நுரையீரல் வழியாக சுவாசக்குழாயை துளைத்திருந்தது. இதனையடுத்து அவசரமாக இரண்டு சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இரவு 9.15 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
இன்னிலையில், சடலத்தினை உறவுகளிடம் ஒப்படைக்கநடவடிக்கை எடுத்துவரும் நிலையில், கொலையாளியைக் கண்டுபிடிக்கும் வரைக்கும் சடலத்தைப் பெறப்போவதில்லையென குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ரிட்மனின் நண்பர் ஒருவர் தெரிவிக்கையில், நானும் நண்பனும் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தோம்.
வழியில், மற்றொரு நண்பனின் மோட்டார் சைக்கிளுக்கு பெற்றோல் இல்லையெனத் தெரிவித்தபோது எமது மோட்டார் சைக்கிளிலிருந்து சிறிதளவு பெற்றோலைக் கொடுத்துவிட்டு வந்துகொண்டிருந்தோம்.
நாம் மணியந்தோட்டத்தை அண்மித்தபோது தலைகவசமணிந்துமுகத்தை மூடிய இருவர் எதிரே வந்தனர். எம்மை அண்மித்ததும் அவர்களின் மோட்டார் சைக்கிள் திடீரென நின்றது. அதில் இருந்த ஒருவர் துப்பாக்கியை எடுத்து எனது நண்பனை நோக்கிச் சுட்டார் எனத் தெரிவித்துள்ளார்.